www.webtamilan.com
Every thing that you want Information Technology E-Bussiness(Hosting,Domain Name Registration) Tamilealam Neethi Chat

சிந்திப்போம்!

கலாச்சாரமும் பண்பாடும் பெண்களுக்கு மட்டுந்தானா!?

தமிழர்களின் கலாச்சாரம் பண்பாடு என்று பார்க்கும் போது எனக்கு ஒரே குழப்பமாக இருக்கிறது. எப்போதும் கலாச்சாரம் பண்பாடு என்று வரும் போது நம் நாட்டுப் பெண்களும், அவர்களது பொட்டும் தாலியும் உடைகளும்தான் அலசப்படுகின்றன.

ஏன் எமது நாட்டு ஆண்களுக்கென்று கலாச்சாரம் பண்பாடு எதுவுமே இல்லையா?

கலாச்சாரம் பண்பாடு என்று பார்க்கும் போது அங்கு எத்தனையோ விடயங்கள் அடங்குகின்றன. ஆனால் எமது பட்டிமன்றங்களும், ஒட்டுவெட்டுக்களும் பெண்களின் பொட்டும், தாலியும், உடையும்தான் விவாதத்துக்கான கரு என்று சொல்லிக் கதைத்துக் கொண்டு இருக்கின்றன.

அதையும் தாண்டிப் போவதானால் பெண்களின் மறுமணம் பற்றிப் பேசுகின்றன. ஆனால் ஆண்களின் மறுமணம் பற்றிப் பேசுவதில்லை. ஆண் மறுமணம் செய்து கொள்வது அதிசயமான விடயமே இல்லையாம். மனைவி இறந்த வீட்டுக்குள்ளேயே அவனுக்கு மறுமணம் பேசி, அவனது மனைவியின் தங்கையையோ அல்லது உறவுப் பெண்ணையோ நிச்சயித்து விடுவார்கள். ஏனென்றால் அவன் ஒரு ஆணாம். அவனுக்குத் துணை தேவையாம்.

ஆனால் பெண்ணுக்கு மட்டும் கணவன் இறந்தவுடன் பொட்டை அழித்து, தாலியைக் கழற்றி, வெள்ளைச் சேலை உடுத்த வைத்து, "இனி உனக்கு ஆசாபாசம் எதுவுமே வரக்கூடாது" என்று சொல்லி, மூலையில் தள்ளி விடுகிறார்கள். ஏனென்றால் அவள் ஒரு பெண்ணாம். அவளுக்குத் துணையே தேவையில்லையாம். ஆசையே வரக் கூடாதாம். இனி அவள் இறக்கும் வரை தனிமைத் தீயில் வெந்து துடிக்க வேண்டுமாம்.

இது என்ன நியாயம்?

ஆணுக்கும் பெண்ணுக்கும் என்று இப்படி வெவ்வேறு கலாச்சாரத்தையோ பண்பாட்டையோ உருவாக்கியது யார்?

பெண் ஒன்று பிறந்து விட்டாலே பொன் வேண்டும், பொருள் வேண்டும், அவளை நல்லவன் கையில் கொடுத்து விடவேண்டும். என்று சிந்திக்கத் தொடங்கி விடுவார்கள் பெற்றோர்கள். தமது ஆசைகளைக் குறைத்து, தேவைகளைத் தவிர்த்து அந்தப் பெண்பிள்ளைக்காகச் சேமிக்கத் தொடங்கி விடுவார்கள். முக்கியமாக ஆசிய நாடுகளில், குறிப்பாக இந்தியாவிலும் இலங்கையிலும் பெண்ணைப் பெற்றவர்கள் மிகவும் பரிதாபத்துக்கு உரியவர்களாகி விடுகிறார்கள்.

ஆசை ஆசையாகப் பெண்ணைப் பெற்று விட்டு அவளது ஒவ்வொரு வளர்ச்சியிலும் களிக்க வேண்டியவர்கள், நெருப்பை மடியில் கட்டிக் கொண்டு வாழ்வது போல தவிப்புடன் வாழ்கிறார்கள். வாழ வைக்கப்படுகிறார்கள். ஒரே ஒரு பெண் குழந்தையைப் பெற்றவர்களுக்கே இந்தக் கதி என்றால், நான்கைந்து பெண்களைப் பெற்றவர்களின் நிலையைச் சொல்லவே தேவையில்லை.

ஏதோ - ஒரு பெண் பிறந்ததே - இன்னொருவன் கையில் பத்திரமாக ஒப்படைக்கப் பட்டு, அவனிடம் அடங்கி, ஒடுங்கி, அவனுக்கு ஆக்கிப் போட்டு, அவன் அடித்தாலும், உதைத்தாலும் அக்கம் பக்கம் தெரிய விடாது அவன் மானத்தைக் காத்து, அவனைத் தாய்மையுடனும், தோழமையுடனும் கவனித்து, பிறந்த வீட்டின் பெருமையைக் காப்பதற்கே, என்பது போல் இருக்கும் அவர்கள் செயற்பாடு.

இந்த நியதியில் எந்த மாற்றமும் ஏற்படக் கூடாது. அப்படி மாற்றம் ஏற்படுவதே ஒரு தப்பான விடயம் என்பது போலவே காலங்காலமாக எல்லாம் நடைபெற்றுக் கொண்டும் வருகின்றன. யாராவது ஒரு பெண் இந்த நிலை மாற வேண்டும் என்று குரல் கொடுத்தாலே, "அவள் கலாச்சாரம், பண்பாடு எல்லாவற்றையும் காலுக்குள் மிதிக்கிறாள்." என்று கூச்சலிடுகிறது எமது சமுதாயம்.

எமது பண்பாட்டின் படி "ஒருவனுக்கு ஒருத்தி" என்ற வரையறையான கோட்பாடு, மிகவும் போற்றப் பட வேண்டிய ஒன்றுதான். ஒருவனுக்கு ஒருத்தியாக வாழும் போது மனதுக்கும் மகிழ்ச்சி. நிறைவு. முக்கியமாக எய்ட்ஸ் பிரச்சனை இல்லை. வேறு பாலியல் சம்பந்தமான நோய்களுக்கும் சந்தர்ப்பம் இல்லை.

ஆனால் ஆண்கள் மனைவி இருக்கையில் வேறு பெண்ணுடன் தொடர்பு கொண்டால், "ஆண்கள் சேறு கண்ட இடத்தில் மிதித்து தண்ணீர் கண்ட இடத்தில் கழுவுவார்கள். பெண்கள் கண்டு கொள்ளக் கூடாது" என்கிறார்களே. இதுவும் தமிழர் பண்பாடா?

பெண்ணுக்கு மட்டும் "பொம்பிளை சிரிச்சாப் போச்சு. புகையிலை விரிச்சாப் போச்சு.......... " என்கிறார்களே.

எமது பண்பாட்டில் ஏனிந்தப் பாகுபாடு? எமது கலாச்சாரமும் பண்பாடும் பெண்களுக்கு மட்டுந்தானா? ஏனிந்தப் பாரபட்சம்?


தாலி, பொட்டு

அத்தோடு தாலி என்று இன்று விவாதிக்கப் படுகிறதே. இந்தத் தாலிக்காய் ஆதிகாலத்தில் வெறும் மஞசள் காயாகவே இருந்தது. அதாவது நாம் சமையலுக்குப் பாவிக்கும் மஞ்சள். ஏன் தெரியுமா? மஞ்சள் ஒரு இயற்கையான கிருமி நாசினி. இருவர் திருமண பந்தத்தில் இணையும் போது, ஒருவரில் இருக்கும் தொற்றுக் கிருமிகளோ, நோய்களோ மற்றவரை அணுகாமல் இருக்கவும், கிருமிகளைச் சாகடிக்கவுமே இந்த மஞ்சள் காய் பயன் படுத்தப் பட்டது.

இதே காரணுத்துக்காகத்தான் மணமக்களின் உடைகளிலும் மஞ்சள் பூசப்பட்டது. ஒரு கிராமத்தில் இருந்து இன்னொரு கிராமத்துக்கு அனுப்பப் படும் திருமண அழைப்பிதழுடன் நோய்க் கிருமிகள் சென்று விடாதிருக்கவே, அழைப்பிதழ் மஞ்சள் பூசி அனுப்பப் பட்டது. இதுவே நாளடைவில் மஞசள் பத்திரிகை என்ற பெயரில் வரத் தொடங்கியது. மஞ்சள் காயை, மஞ்சள் தண்ணீரில் தோய்த்தெடுத்த நூலில் கட்டித் தாலியாக அணிந்த காரணமே வேறு. ஆனால் அதுவே நாளடைவில் தங்கத்துக்கு மாறிவிட்டது.

இப்போது இங்கே வெளி நாடுகளில் அவரவர் வசதிக்கேற்ப 30 பவுணிலும் 40, 50, 60, 70 பவுண்களில் கூடத் தாலிக் கொடி செய்து போட்டுத் திரிகிறார்கள். இதற்குப் போய் கலாச்சாரம் என்றும் ஒரு பெயர் வைத்திருக்கிறார்கள். எமது கலாச்சாரம் என்ன 70 பவுணில் கொடி போடச் சொல்கிறதா?

இதே நேரத்தில் நவரத்தினங்கள், தங்கங்கள்... இவைகளுக்கு சில நோய்கள் எம்மை அணுகாமல் தடுக்கும் தன்மைகளும், சில நோய்களைத் தீர்க்கும் தன்மைகளும் உள்ளன. அத்தோடு காது குத்துதல், மூக்குக் குத்துதல் போன்றவை அக்கு பஞ்சர் ரீதியிலான நன்மைகளை எமக்குத் தருகின்றன.

இதே போலத்தான் பொட்டும். மூலிகைகள் கொண்டு செய்யப்படும் பொட்டை, நெற்றிப் பொட்டில் வைக்கும் போது அது மருத்துவ ரீதியாக உடலுக்கு நல்ல குளிர்ச்சியையும் நன்மையையும் தருகிறது.

இப்படியான நல்ல காரணங்களுக்காகக் கொண்டு வரப்பட்ட பல விடயங்கள் இப்போ தடம் மாறி, அவரவர் வசதிக்கேற்ப பல அடாவடித் தனங்கள் புகுத்தப்பட்டு, கலாச்சாரம் பண்பாடு என்பதற்கு என்ன அர்த்தங்கள் என்று தெரியாமலே பெண்கள் மேல் திணிக்கப் பட்டுள்ளன. கலாச்சாரம, பண்பாடு என்ற பெயரில் எமது பெண்கள் அடக்கப் படுகின்றனர். அடிமைப் படுத்தப் படுகின்றனர்.

முதலில் எமது கலாச்சாரத்தில், பண்பாட்டில் புகுத்தப் பட்ட அடாவடித் தனங்கள் களையப் பட்டு, தேவையான நல்ல புதிய விடயங்கள் புகுத்தப் பட வேண்டும்.

கொட்டும் பனியில் சேலை அணிவதுதான் எமது பண்பாடு என்று சொல்லிச் சேலையுடன் செல்ல முடியுமா? அல்லது ஆண்களால் வேட்டியுடன் செல்ல முடியுமா?

சில விடயங்கள் காலத்துக்கேற்ப நேரத்துக்கேற்ப இடத்துக்கேற்ப மாறத்தான் வேண்டும். கலாச்சாரம் என்ற முறையில் கட்டிக் காக்க எம்மிடம் வேறு எத்தனையோ நல்ல விடயங்கள் உள்ளன. அவைகளைக் கட்டிக் காப்போம்.

சந்திரவதனா.
ஜேர்மனி
1999

அனுப்பியவர் Admin

3 கருத்துக்கள்

சர்வதேச மகளிர் தினம் - சில கருத்துக்கள்

பெண்ணியம் - கற்பு - தமிழ்ப்பெண்:சபேசன் (அவுஸ்திரேலியா)

சர்வதேச மகளிர் தினம் (International Womens Day) மார்ச் மாதம் 8 ஆம் திகதியன்று உலகெங்கும் கொண்டாடப்பட்டு வருகின்றது. நாடுகளினால் அரசுகளினால், மொழிகளினால், மதங்களினால், பண்பாடுகளினால், அரசியலால், பொருளாதாரத்தால் உலகெங்கும் வேறுபட்டிருக்கும் பெண்ணினம் தம்முடைய கடந்த கால உரிமைப் போராட்ட வரலாற்றை எண்ணிப் பார்த்து ஒன்றிணையும் தினம் மார்ச் மாதம் 8 ஆம் திகதியாகும்.

ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகப் பெண்ணினத்தின் மீது இழைக்கப்பட்டு வந்துள்ள அநீதிக்கு எதிரான போராட்டம் கடந்த தொண்ணூறு ஆண்டுகளாக கூர்மையடைந்து பல வெற்றிகளை அடைந்தது எனலாம். எனினும் பெண் விடுதலைக்கான போராட்டம் இன்னும் முழுமையான வெற்றியை பெறவில்லை. அது தொடர்;ந்து நடைபெற்று வருகின்றது.

~சாதாரணப் பெண்கள் என்று கருதப்படுபவர்கள் சாதனை படைத்த வரலாற்றைச் சுட்டிக்காட்டுவதுதான் சர்வதேச மகளிர் தினத்தின் சிறப்பாகும். உலகின் பல்வேறு திசைகளில் வாழ்கின்ற பெண்கள் பல்வேறு காலப்பகுதிகளில் தமது உரிமைக்காகவும், சமத்துவத்துக்காகவும் நீதிக்காகவும், சமாதானத்திற்காகவும் தொடர்ந்து போராடி வந்துள்ளார்கள்.

அமெரிக்கா உட்பட ஒஸ்ரியா, டென்மார்க், ஜேர்மனி, சுவிட்சலாந்து போன்ற பல தேசங்களில் பெண்கள் சம உரிமைக்காக, சம ஊதியத்துக்காக போராடியுள்ளார்கள். 1917 ஆம் ஆண்டு கிட்டத்தட்ட இரண்டு மில்லியன் ரஷ்ய இராணுவத்தினர் கொல்லப்பட்டிருந்த நிலையில் ரஷ்ய பெண்கள் கிளர்ந்தெழுந்து நடத்திய போராட்டம் ரஷ்ய ஜார்ஜ் மன்னரைப் பதவி துறக்க வைத்ததையும், ரஷ்யப் பெண்களுக்கு வாக்களிக்கும் உரிமையையும் பெற்றுத் தந்ததையும் உதாரணமாகக் காட்டலாம்.

இப்படியாகத் தொடர்ந்து நடைபெற்று பெண்கள் போராட்டம் 1945 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் சாசனத்தில் பெண்களுக்கு சம உரிமையையும் அடிப்படை மனிதஉரிமைகளையும் இடம்பெறச் செய்வதற்கும் வழி வகுத்தது.

அவுஸ்திரேலியாவைப் பொறுத்த வரையில் முதல் முறையாக 1928 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 25 ஆம் திகதி MWM என்று அழைக்கப்பட்ட Militant Womens Movement என்ற இயக்கத்தால் பேரணி ஒன்று நடாத்தப்பட்டது. அப்பேரணியில் பெண்களுக்கும் ஆண்களைப் போல் சம ஊதியம், எட்டு மணி நேர வேலை மற்றும் வேலைத்தள வசதிகள் என்ற பல கோரிக்கைள் வற்புறுத்தப்பட்டன.

சர்வதேச மகளிர் தினத்தின் ஊடாகப் பெண்ணியம், பெண் விடுதலை, பெண்ணுரிமை போன்ற கருத்தாக்கங்கள் வலுவாக முன்வைக்கப்பட்டன. இச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி பெண்ணியம், பெண் விடுதலை, பெண்ணுரிமை போன்ற கருத்துருவாக்கங்கள் குறித்துச் சற்று ஆழமாகப் பார்ப்பதே இந்தக் கட்டுரையின் நோக்கமாகும். அதுமட்டுமல்லாது இக்கருத்துருவாக்கங்களைப் பன்முகப்பார்வைகளினூடாகவும் கண்டு தர்க்கிக்க விழைகின்றோம். ஆழமானதும், கடினமானதுமான இந்த விடயங்களை இயன்ற வரை எளிமைப்படுத்திச் சொல்ல முயல்கின்றோம்.

முதலில் பெண்ணியத்தின் பல அம்சங்களை கவனிப்போம்.

ஆண்கள் பெற்றிருக்கின்ற சட்டபூர்வமான உரிமைகள் யாவும் சமமாகப் பெண்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என்கின்ற நோக்கோடு எழுந்த முதலாளியப் பெண்ணியம் குடும்பம், உற்பத்தி ஆகியவற்றின் பின்னணியில் உள்ள பெண்ணடிமைத் தனத்தின் தோற்றத்தைக் கண்டுணர்ந்து மார்க்கசியப் பெண்ணியம் தந்தை வழிச்சமூக மதிப்பீடுகளுக்கு எதிராக பெண்மையின் தனித்துவத்தை உயர்த்திப் பிடித்த தீவிரப் பெண்ணியம் இவை யாவும் பெண் என்பதற்கு ஒரு சாராம்சமான அடையாளத்தை ஏற்றுக் கொண்டுள்ளன. இதன்படி உடற்கூற்றை அடித்தளமாக அதாவது டீழைடழபiஉயட குழரனெயவழைn ஐ அடித்தளமாகக் கொண்டு பெண்ணுறுப்புக்களைக் கொண்ட அனைத்து மனித உயிரிகளைப் பெண் என இந்தப் பெண்ணியக் கருத்தாக்கங்கள் அடையாளம் கண்டன.

இனிச் சற்று சிக்கலான விடயத்திற்கு வருவோம்.!

பெண் என்றால் யார்? பெண் என்ற சொல்லின் பொருள் என்ன?

எந்த ஒரு சொல்லுக்கும் பொருள் என்பது ஒரு தனித்துவமான பண்பைக் காட்டுவதல்ல. சொல் என்பது ஒரு தனித்துவமான பொருளுடன் தீர்மானமான உறவைக் கொண்டுள்ளது என்று சொல்வதைக் காட்டிலும் சிக்கலான பல பண்புகளின் வலைப்பின்னலாக அது விரிவு பெறுகின்றது என்பதே சரியானதாகும். இதன் அடிப்படையில் தான் நாம் பெண் என்ற சொல்லின் கருத்தை அணுகுவதற்கு பெண்ணியம் FEMINISM என்பது பெண்ணை ஓர் ஆய்வுப் பொருளாக்கிப் பார்க்கின்ற கோட்பாடாகும். FEMINISM என்கின்ற ஆங்கிலச்சொல் கிபி 19 ஆம் நூற்றாண்டில்தான் முதன்முதலாகப் பயன்படுத்தப்பட்டது. 18 ஆம் நூற்றாண்டிலேயே ஆங்காங்கு பெண் விடுதலைச் சிந்தனை எழுச்சி பெற்றிருந்தது என்பது உண்மைதான் என்றாலும் பெண்ணியம் ஒரு தனிக்கோட்பாடாக வலுப்பெற்றது. 19 ஆம் நூற்றாண்டில்தான்! இந்தக் கோட்பாட்டின் தோற்றம் குறித்தும் இரண்டு வேறு கருத்துக்கள் நிலவி வருகி;ன்றன.

முதலாளித்துவதற்கு எதிராக எழுந்த மார்க்கசிய வர்க்கப் போராட்டத்தில் ஆதிக்க வெறியர்ளை எதிர்க்கும் நோக்கில் அதன் ஒரு பகுதியாக ஆணாதிக்கத்திற்கு எதிராகவும், பெண் ஒடுக்குமுறைக்கு எதிராகவும் குரல் எழுப்பப்பட்டது. இதுதான் பெண்ணியத்தின் வேர் என்றும் இதிலிருந்துதான் பின்னர் பெண்ணியம் ஒரு தனிக்கோட்பாடாக உருவாகியது என்றும் மார்க்கசியப் பெண்ணியவாதிகள் கூறுகின்றார்கள்.

ஆனால் Pure Feminists என்று சொல்லக் கூடிய தூய பெண்ணியவாதிகள் இந்தக் கருத்தை ஏற்றுக்கொள்வதில்லை. இவர்கள் பெண்ணியம் என்பது 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் மேலை நாடுகளில் பகுத்தறிவின் அடிப்படையில் ஆண்களுக்குச் சமமான உரிமைகளை வேண்டி பெண்கள் எழுப்பிய குரலின் ஊடாகத் தோற்றம் பெற்றது என்று வாதிடுகின்றார்கள். தோற்றம் குறித்துக் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் பெண்கள் தங்கள் மீது ஏவி விட்டிருந்த அடக்குமுறைகளுக்கு எதிராக தீர்க்கமாக எழுப்பி வந்த குரலே பெண்ணியத்துக்கு எழுச்சியூட்டியது என்ற கருத்தில் வேறுபாடில்லை.

பெண்ணியம் குறித்து இன்னும் சற்று ஆழமான பார்வைகளைக் கவனிப்போம்.

பெண்ணிய ஆய்வாளரான கேட் மில்லட் என்ற பெண்மணி பெண்ணடிமை குறித்துச் சற்று ஆழமான கருத்துக்களை முன்வைத்துள்ளார். உலகம் முழுவதும் பால்வகை என்பது ஆண் என்பவன் பெண் என்பவளை அதிகாரம் செய்யக்கூடிய பான்மையில்தான் அமைந்துள்ளது. ஏனென்றால் ஆணாதிக்கச் சமூகம் வகுத்ததுதான் இந்தப் பால்வகைப் பிரிவு என்பதாகும். ஆண் என்பவன் தனக்குரிய சமூகக்களமாக இராணுவம் தொழிற்சாலை, அரசியல், நீதி, தொழில் நுட்பம், கல்வி போன்றவற்றை முன்னரே தெரிந்தெடுத்துக் கொண்டு தன்னை முதன்மைப் படுத்திக் கொண்டான்.

பெண்ணுக்கு இல்லம் என்பதை உரிமையாக்கி அதற்குள் அவளது இயக்கத்தை இவன் கட்டுப்படுத்தினான். ஆதனால் சமூகத்தில் பெண்ணின் இயக்கம் குறைந்தது. குடும்ப அமைப்பில் அடங்கிக் கிடக்கும் பெண் என்பவள் தனது சமூகத்தை அணுகுவதற்கு அவளுக்குக் கணவன் என்ற துணை தேவைப்பட்டது. அவள் அவ்வாறு கணவனைச் சார்ந்து நிற்கும்போது அவளை சுயசிந்தனை இல்லாதவளாக ஆண்மகனின் கைப்பாவையாக உருவாக்குவதற்கு துணை போயிற்று. இரண்டு பால் இனங்கள் இடையேயான அதிகார உறவுகள் வளர்ந்து பெருகுவதற்கு குடும்பம் என்ற அமைப்பும் காரணமாக அமைந்தது.

பாலியல் அடிப்படையிலான பெண் அடிமைத்தனமானது, கருத்துருவம் (IDEOLOGY), உயிரியல் (BIOLOGY), சமூகவியல் (SOCIOLOGICAL), வர்க்கம் (ஊடுயுளுளு) பொருளாதாரமும் கல்வியும் (ECONOMICS AND EDUCATION), சக்தி (FORCE), மானுடவியல் (ANTHOROPOLOGY), உளவியல் (PHYCHOLOGY) என்று பல நிலைகளில் பல்கிப் பெருகியுள்ளதாக கேட் மில்லட் மேலும் குறிப்பிடுகிறார்.

இதுவரை நேரமும் சர்வதேச மகளிர் தினம் குறித்தும் பெண், மற்றும் பெண்ணியம் என்பவை குறித்தும் மேலைத்தேய ஆய்வு முறைகள் ஊடாகச் சில கருத்துக்களைத் தெரிவித்திருந்தோம். இனி இவை குறித்து எமது தமிழ் சமுதாயக் கட்டமைப்பின் ஊடாகச் சில தர்க்கங்களை முன்வைக்க விழைகின்றோம்.

தமிழ் நூல்களில் மிகப் பழமை வாய்ந்ததாகக் கருதப்படுகின்ற தொல்காப்பியத்தின் நூற்பாக்கள் கூட பெண்ணடிமைக் கருத்துருவாக்கங்களைத்தான் காட்டி நிற்கின்றன. தொல்காப்பியம் ஆரியர் ஊடுருவலையும் காட்டி நிற்பது உண்மைதான் என்றாலும் தொல்காப்பியரின் வரைமுறைகள் ஆணாதிக்கத்தையும், பெண் அடிமைத்தனத்தையும் ஏற்றுக் கொண்டிருப்பதாகவே எண்ணத் தோன்றுகின்றது. மேலைத்தேய ஆய்வுக்குச் சார்பாக மேலைத்தேய நாகரிக வாழ்விற்கும் முந்தைய கீழைத்தேய நாகரிகமும் பெண் அடிமைத்தனத்தை சான்று பகருகின்றது.

உதாரணமாக தொல்காப்பியர் ஆண் மகனின் இயல்பைப் பற்றிக் கூறும்போது,

~பெருமையும் ஊரனும் ஆடுஉ மேன

(தொல்காப்பியம்-பொருள்-களவு-7)

-என்று உயர்த்திக் கூறுவதை நாம் காணலாம். ஆனால் அதே தொல்காப்பியர் பெண்ணுக்குரிய இயல்பைப் பற்றிக் கூறும்போது,

~அச்சமும் நாணமும் மடமும் முந்துறல்
நிச்சமும் பெண்பாற் குரிய

- என்ற கோடு கீறி வரையறை செய்கின்றார். தமிழில் பழமை வாய்ந்ததாகக் கருதப்படும் தொல்காப்பியத்தின் படி ஆண் மகன் உரமுடையவனாகவும் பெருமைக்குரியவனாகவும் காட்டப்படுகின்றான். ஆனால் பெண்ணோ அச்சம், மடம், நாணம் என்ற இயல்புகளைக் கொண்டு அழகுடையவளாக (வுhந குயசை ளுநஒ) இரக்கம் உடையவளாக (வுhந புநவெடந ளநஒ) மெல்லியவளாக (வாந ளழகவநச ளநஒ) உணர்ச்சியை அடக்கும் ஆற்றல் அற்றவளாக, செயல்திறன் அற்றவளாக (வுhந றநயமநச ளநஒ) உருவகிக்கப்படுகின்றாள்.

சரி இல்லத்தலைவி குறித்து தொல்காப்பியர் என்ன கூறுகின்றார்?

கற்பும் காமமும் நற்பால் ஒழுக்கமும்

மெல்லியற் பொறையும் நிறையும்

வல்லிதின் விருந்து புறந்தருதலும்

சுற்றம் ஓம்பலும்

(தொல்காப்பிம்-பொருள்-கற்பு-11)

-என்று இல்லத்தலைவியை தொல்காப்பியர் வரையறுக்கின்றார்.

அதாவது, ~இல்லறத்தில் பெண் ஒரு பதிவிரதையாகவும், நல்ல ஒழுக்கம் உள்ளவளாகவும், பெண்மையும், பொறுமையும், மனக்கட்டுப்பாடு உடையவளாகவும், விருந்து உபசரித்துச், சுற்றம் ஓம்புகின்றவளாகவும் இருக்கவேண்டும் என்று தொல்காப்பியர் கூறுகின்றார்.

இவை மட்டுமல்ல நேயர்களே,

கணவன் என்பவன் மனக்கட்டுப்பாடு இல்லாமல் பரத்தையர்களிடம்- விலைமாதர்களிடம்- சென்று வரும்போதும் அவனது மனைவியானவள் சிரித்த முகத்துடன் கணவனை வரவேற்பவளாகத் தன்னை உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்றும் தொல்காப்பியர் தெரிவித்துள்ளார். பல நூற்றாண்டுகளுக்குப் பின்னர் இயற்றப்பட்ட சிலப்பதிகாரத்திலும் இத்தகைய கருத்துக்கள் தொனிப்பதை பின்னர் கவனிப்போம்.

சரி, தொல்காப்பியத்தைத் தவிர பிற தமிழ் இலக்கிய நூல்கள் என்ன சொல்கின்றன? உதாரணத்திற்குப் புறநானூறில் ஒரு பாடலைப் பார்ப்போம். பூதபாண்டியன் என்ற அரசன் இறந்து விடுகின்றான். அப்போது அவனது மனைவியும் நாட்டின் அரசியுமான அவனது மனைவி பெருங்போப்பெண்டு என்பவள் இந்தப் பாடலைப் பாடுகின்றாள். இதுவரை காலமும் வந்த ஆய்வுகள் பலவும் கணவன் மீது மனைவி கொண்ட உயரிய அன்பினைக் காட்டுவதாகவே சொல்லி வந்துள்ளன. ஆனால் இந்தப்பாடலை ஒரு பெண்ணியப் பார்வையூடாகப் பார்க்கும்போதுதான் அக்காலத்துச் சமுதாயக் கொடுமைகள் தெளிவாகப் புலப்படுகின்றன.

~அனல்வரிக் கொடுங்காய் வாள் போழ்ந்திட்ட,
காழ் போனல்விளர் நறு நெய் தீண்டாது,
அடையிடைக் கிடந்த கழிப்பிழி பிண்டம்,
வெள்ளாய் சாந்தோடு புளிப்பெய்து,
அட்டவேளை வெந்தை வல்சியாக,
நீ பரற்பெய் பள்ளிப்பாய் இன்று வதியும்- (புறநானூறு 246)

இந்தப்பாடலின் கருத்தென்ன?

வெள்ளரி விதை போன்ற நெய்யற்ற நீர்ச்சோறு, எள்ளுத்துவை, புளியைக் கூட்டி சமைத்த வேளை இலை ஆகியவற்றை உண்டும், பாயில்லாமல் பருக்கைக் கற்கள் மேல் படுத்தும் கைம்மை நோற்க விரும்பும் பெண்ணல்ல நான்! எனக்கு ஈமத்தீயில் பாய்ந்து இறப்பதே மேலானதாகும்.!

என்பது இப்பாடலின் கருத்தாகும். கணவனை இழந்த பின்பு பெண்கள் வாழுகின்ற விதவை வழ்வு எவ்வளவு கொடுமையானது, கடுமையானது என்பதை இப்பாடலின் உட்கருத்துச் சொல்கின்றது அல்லவா! தவிரவும் இப்பாடலில் கணவன்- மனைவியின் அன்பு நிலை குறித்து ஒரு வரியிலும் சொல்லப்பட வில்லை.

பெண்கள் இவ்வாறு இறப்பதற்குப் பழைய விதிமுறைகளும் தூண்டி விடுகின்றன. வட நாட்டு ~காசி காண்டம் என்கின்ற நூல் கீழ்வருமாறு கூறுகின்றது.

கணவனோடு சதி இறங்கி உயிர் நீக்கும் பெண், தனது உடம்பில் உள்ள உரோமங்கள் ஒவ்வொன்றிற்கும் ஆயிரம் கோடிக்காலம் இன்பம் அடையும் பேற்றைப் பெறுவாள் - இவ்வாறு பல மூடநம்பிக்கைகள் சமுதாயத்தில் பரப்பப்பட்டன.

இதேபோலவே சிலப்பதிகாரத்தைப் பெண்ணிய நோக்கில் ஆய்வு செய்யும் போது பல சமுதாயக் கொடுமைகள் புலனாகின்றன. தனது கணவனான கோவலன் மாதவியிடம் சென்றபோது அவனது நடத்தை தவறு என்று கண்ணகி சுட்டிக் காட்டவில்லை. அவன் தனது செல்வம் யாவற்றையும் இழந்தபோதும் கண்;ணகி அவனைத் தடுக்கவில்லை. அவன் மாதவியை வெறுத்துத் திரும்பியபோது கண்ணகி தனது சிலம்பைக் கோவலனிடம் கொடுத்தானது அவனது கெட்ட நடத்தையை நியாயப்படுத்துவதாக உள்ளது. அதாவது கற்புக்கரசி என்பவள் தனது கணவன் எந்தத் தவறு செய்தாலும் சுட்டிக் காட்டக்கூடாது. பெண்ணிய நோக்கில் பார்க்கும்போது கண்ணகி தன்னை அடிமையாக ஆட்படுத்திக் கொண்டாள் என்றும் ஆணினுடைய மேலாண்மைக்குத் துணை நின்றாள் என்றும் குற்;றம் சாட்டத் தூண்டுகின்றது.

இதேபோல கண்ணகி தனது கணவன் அநியாயமாகக் கொலை செய்யப்பட்டான் என்பதை அறிந்தவுடன் வீறு கொண்டு எழுந்து அரசனிடம் சென்று வாதிட்டு நீதியை நிலைநாட்டும் போது இங்கே இவளைப் பெண் விழிப்புணர்ச்சிக்கு வித்திடுபவளாகவும் காணமுடிகின்றது. இருவேறுபட்ட நிலைகளை இங்கே காண்கின்றோம்.

இப்படியாக கற்பு என்ற சொல்லை வைத்து பெண்ணை இன்னமும் அடிமையாக்குகின்றது. எமது இனம் கற்பின் பெயரால் கடும் மூடநம்பிக்கைகளை மதம் சார்ந்த சடங்கு நெறிகளை பகுத்தறிவுக்கு ஒவ்வாத கருத்துக்களை இலக்கிய நூல்களும் புராண நூல்களும் பரப்பின.

கற்பு என்பதற்குப் பலவிதமான பொருட்கள் சொல்லப்பட்டன. கன்னிமையைக் காத்தல், பதிவிரதா தர்மத்தைப் பேணுதல் என்ற கருத்தாக்கங்கள் பரவலாக்கப்பட்டுள்ளன. சங்கக் காலம் எனக் கருதப்படும் காலத்தில் கற்பு என்பது கணவனுக்கு உண்மையாக நடப்பதாகும். பின்னர் வந்த புராண காலத்தில் கணவனின் அடிமை மனைவியாவாள் என்ற கருத்தாக்கம் கற்பு என்பதன் பெயரால் உருப்பெற்றது. கற்பு என்ற கருத்தாக்கம் பெண்ணை அடக்கி அடிமைப்படுத்தி உடமைப் பொருளாக்கி இருட்டுலகில் தள்ளி விட்டது என்ற நவீனப் பெண்ணியவாதிகள் கடுமையாகச் சாடி வருகின்றார்கள்.

~ஆண்- பெண் இருபாலாரும் சரி சமமமான சுதந்திரத்துடன் வாழவேண்டும் என்ற நிலைமை ஏற்பட வேண்டுமென்றால் கற்பு என்பதன் அடிப்படை இலட்சியமும் கொள்கையும் மாற்றப்பட்டு ஆண்- பெண் அனைவருக்கும் ஒரே நீதி ஏற்பட வேண்டும் என்ற பெரியாரின் கருத்து பெண்ணியத்திற்கு ஏற்ற ஒன்றாகவே காணப்படுகின்றது.

இன்று உலக நாடுகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது தமிழீழத்தில் பெண் விடுதலை என்பது முழுமையான விடுதலையை நோக்கிச் செல்வதைப் பெருமையுடன் காணக்கூடியதாக உள்ளது.

தமிழீழச் சுதந்திரப் போராட்டம் இதற்கு அடித்தளமாக அமைந்துள்ளது என்பது முக்கியமான காரணமாகும். இன்று தமிழீழப் பெண்ணானவள் தன்மீதான அடிமைத்தனத்திற்கு எதிராக தனது பெண்ணினத்தின் மீதான அடிமைத்தனத்திற்கு எதிராகப் போராடுகின்றாள். இவளது விடுதலைப் போராட்டம் விரிந்து பரந்து இருப்பதையும் நாம் அவதானிக்கின்றோம்.

பெண் விடுதலை குறித்து பல ஆண்டுகளுக்கு முன்பு தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் தெரிவித்த கருத்து ஈண்டு கவனிக்கதக்கதாகும். உலகின் உயரிய சிந்தனாவாதிகளின் சிந்தனைக்கு இணையாக இச்சிந்தனையும் உள்ளதாகவே நாமும் எண்ணுகின்றோம். எமது தேசியத் தலைவர் சிந்தனையாளராக மட்டுமிராது அவற்றை செயற்படுத்தக் கூடிய செயல் வீரனாகவும் திகழ்வது அவரது இச்சிந்தனைக்கு மேலும் அர்த்தமூட்டுவதாகவே அமைகின்றது. பல ஆண்டுகளுக்கு முன்பு சர்வதேச மகளிர் தினத்தை ஒட்டி தமிழீழத் தேசியத் தலைவர் விடுத்த அறிக்கையிலிருந்து ஒரு கருத்தை இங்கே தருவதில் மகிழ்சி கொள்கின்றோம். பெண்ணின் சம உரிமையை வலியுறுத்துகின்ற அதேவேளை அதற்குரிய கௌரவத்தையும் தேசியத் தலைவர் குறிப்பிடுகின்றார்.

பெண்ணிடமும் மனிதம் இருக்கின்றது!
பாலியல் வேறுபாட்டிற்குப் புறம்பாக,
ஆண்மைக்கும் பெண்மைக்கும் அப்பாலாக,
இந்த மனிதத்தை இனம் கண்டு கௌரவிக்குமாறு,
பெண்ணினம் ஆணினத்திடம் அன்புக்கரம் நீட்டுகின்றது.
ஆழமான புரிந்துணர்வுடன் ஆணினம் இந்த அன்புக்கரத்தைப் பற்றிக் கொள்ளும்போதுதான் ஆண்-பெண் சமத்துவம் சாத்தியமாகும்.

இக்கட்டுரைக்கு கலாச்சாரத்தின் வன்முறை, பெண்ணியம்- அணுகுமுறைகள், கற்பு -கலாச்சாரம், காலம் தோறும் பெண், புறநானூறு, தொல்காப்பியம், வெள்pச்சம், எரிமலை போன்ற நூல்களும் சஞ்சிகைகளும் பயன்பட்டன. பல இடங்களில் சொல்லாடல்கள் அப்படியே எடுத்தாளப்பட்டுள்ளன. சம்பந்தப்பட்டவர்களுக்கு எனது பணிவான நன்றிகள்.

இவ் ஆய்வு 06.03.06 அவுஸ்திரேலியா மெல்பேர்ன் ~தமிழ்க்குரல் வானொலியின் ஒலிபரப்பாகிய ஆய்வின் எழுத்து வடிவமாகும்.

அனுப்பியவர் Admin

0 கருத்துக்கள்

சர்வதேச பெண்கள்தினம்-ஒரு கண்ணோட்டம்

- மதுமிதா -

உலகம் முழுவதும், சர்வதேச பெண்கள்தினம், பெண்கள் அமைப்புகளினால் மார்ச்-8 ஆம் தேதி என்று குறிக்கப்பட்டு நினைவு கூரப்படுகிறது. பல நாடுகளில் விடுமுறை தினமாகவும் அனுசரிக்கப்படுகிறது.

தேசத்தின் எல்லைக்கோடு, மொழி, கலாச்சாரம், பொருளதாரம், அரசியல் ரீதியாக அனைத்து கண்டங்களிலுள்ள பெண்களின் நிலை வேறு பட்டிருக்கின்றன. எனினும் 90 வருடங்களுக்கும் மேலாக சமத்துவம், நீதி, அமைதி, வளர்ச்சி குறித்த போராட்டங்களில் இவர்கள் ஒன்றுபட்டுள்ளனர்.

சர்வதேச பெண்கள் தினம் என்பது சாதாரண பெண்மணிகள், வரலாறு படைத்தவர்களாக உயர்ந்தவர்கள் எனும் கதையினைக் கூறும் நாள். சமுதாயத்தில் பெண்கள் ஆண்களுக்கு இணையாக நடை பழக நடத்தப்பட்ட போராட்டத்தினை நினைவு கூறும் தினம் இது.

நூற்றாண்டுப் போராட்டம் இது.
வருட வரிசைப்படி பார்க்கலாம்.

1909:
ஐக்கிய அமெரிக்காவில் முதல் தேசிய பெண்கள் தினம் பிப்ரவரி 28 ஆம் நாள் குறிக்கப்பட்டது.

1913
வரை பிப்-கடைசி ஞாயிற்றுக்கிழமை கொண்டாடினர்.

1910:
உலக முழுவதிலிருந்தும் 17 நாடுகளைச் சேர்ந்த 100 பெண்மணிகள் கோபென்கனில்(Copenhagen) பெண்களின் உரிமை குறித்து கருத்துக்கள் முன்வைக்க சந்தித்தனர். சரியான தேதி அறிவிக்கப்படவில்லை.
பாராளுமன்றத்திற்குத் தேர்வு செய்யப்பட்ட மூன்று பெண்மணிகளும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

1911:
1910 சந்திப்பில் கோபென்கனில் எடுக்கப்பட்ட முடிவின் படி மார்ச் 19-ல் முதல் முதலாக ஆஸ்திரியா, டென்மார்க், ஜெர்மனி, சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளில் சர்வதேச பெண்கள் தினம் கொண்டாடப்பட்டது. ஒரு மில்லியன் பெண்களும்,ஆண்களும் கலந்து கொண்டனர். ஓட்டளிக்கும் உரிமைதேவை, வேலைகளில் உரிமைதேவை எனும் தங்கள் உரிமைகளை கோரிக்கைகளாக முன் வைத்தனர்.

ஒரு வாரத்துக்குள் மார்ச் 25 சோக தினமாக ந்யூயார்க்-கில் தீ விபத்தில் 140 வேலை செய்யும் பெண்கள் உயிரிழந்தனர்.இவர்களில் இத்தாலி, யூதப் பெண்கள் அதிகம். இந்நிகழ்வு முக்கிய காரணியாகி வேலைக்குச் செல்லும்
பெண்களின் பாதுகாப்பு தேவை குறித்த சிந்தனையினை வளர்த்து அசாதாரண விளைவை ஏற்படுத்தியது.

1913-14:
ரஷ்ய பெண்கள் முதல் உலகப் போர் சமயத்தில் 1913-ல் பிப்ரவரி கடைசி ஞாயிறு பெண்கள் தினமாகக் கொண்டனர். மற்ற ஐரோப்பிய நாடுகளில் மார்ச் 8 ஆம் நாள் சகோதரிப் பெண்களால் கொண்டாடப்பட்டது.

1917
போரில் இரண்டு மில்லியன் ரஷ்ய படைவீரர்கள் இறந்தனர். ரஷ்ய பெண்கள் பிப்ரவரி கடைசி ஞாயிற்றுக் கிழமையினை தேர்ந்தெடுத்து உணவுக்கும் அமைதிக்குமான வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். அரசியல் தலைவர்கள் இது வேலை நிறுத்தத்திற்கான சரியான நேரமில்லை என்று இதனை எதிர்த்தனர். ஆனால் பெண்மணிகள் விட்டுத் தரவில்லை. புது வரலாறு நிகழ்ந்தது. பெண்மணிகளுக்கு ஓட்டளிக்கும் உரிமை கிடைத்தது. அந்த வரலாறு பதித்த ஞாயிறு பிப்ரவரி 23 ரஷ்யாவின் ஜூலியன் நாட்காட்டியின்படி. ஆனால் மற்ற கிரிகேரியன் நாட்காட்டியின்படி மார்ச் 8 ஆம் நாள்.

சர்வதேச பெண்கள் நாள் வளர்ந்த, வளரும் நாடுகளில் முழுபரிமாணம் பெற்றது. உலகப் பெண்கள் மாநாடு அரசியல், பொருளாதார ரீதியில் உரிமை கோரிப்பெறும் ஆற்றல் நல்கியது.

சர்வதேசப் பெண்கள் தினம் சாதாரண பெண்ணிற்கு தைரியம் அளித்து சாதனை படைக்கும் பெண்ணாக வரலாற்றில் உரிமை கோரும் பெண்ணாக உயர்த்தியது.

இந்த வரலாற்று பிண்ணனி அறியாது எல்லா தினங்கள் போல் இதுவும் ஒருதினமாகக் கொண்டாடப்படுகிறது என்று கேலி செய்யும் மனிதர்களும் உள்ளனர்.

இந்த நாளை நினைவு கூர்ந்து நம்மாலும் நாம் ஈடுபடும் துறையில் முன்னேற முடியும் என்று ஒவ்வொரு பெண்ணும் முயன்றால் மட்டுமே முன்னேற்றம் சாத்தியம்.

ஓரளவு பெண்களின் நிலையில் வளர்ச்சி தெரிந்தாலும் இன்னும் கடக்க வேண்டிய தொலைவு அதிகம். ஒரு கிரண்பேடி,ஒரு கல்பனா சாவ்லா, ஒரு அம்ரிதா ப்ரீதம்,ஒரு திலகவதி..... போதாது. அவர்கள் சார்ந்த அதே துறையில் இன்னும் பலர் பேரெடுக்கும் நிலையில் வரவில்லை. இது எதனைக் காட்டுகிறது? மனதளவில் உயரும் போதே சாதிக்க இயலும்.
வெள்ளத்தனைய மலர்நீட்டம் தான்.

பொதுவாகப் பார்த்தோமெனில், பெண்களின் வளர்ச்சியைத் தடுக்க மற்றவர் எடுக்கும் ஒரே ஆயுதம் பாலியல்ரீதியான ஒழுக்கக்கேடு குற்றச்சாட்டு. அடுத்தது தலைக்கனம் எனும் மாயப்போர்வை. இதற்கு பயந்து குடத்திலிட்ட விளக்காய் கிடப்பவர் கோடி. இந்நிலை மாற சமூகமும் தன் பார்வையினை மாற்றிக் கொள்ள வேண்டும். ஒட்டு மொத்த சமுதாயமுமே பெண்களை மதிக்கும் நாள் தூரத்திலில்லை. இந்நிலையில் பெண்ணும் தனக்கான உரிமையில், தடம் புரளாது தனது கடமையை செவ்வனே செய்ய வேண்டிய கட்டாய சுமையினை தூக்கிக் கொண்டு திரிய வேண்டிய நிலை. இன்னும் சிறிது காலம் இவ்விரு விஷயங்களையும் வெகு ஜாக்கிரதையாக கடந்து விட்டால், அடுத்து வரும் தலைமுறைப் பெண்களுக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு கிடைக்கும் பரிசை வளர்த்தெடுத்து கொடுப்போம்.

பள்ளி பாடத்திட்டத்தில்,
அம்மா சமைக்கிறாள்
அக்கா பாத்திரம் தேய்க்கிறாள்
அப்பா செய்தித் தாள் படிக்கிறார்(இதற்கான படம் ஈஸி சேரில் அமர்ந்திருப்பார் அப்பா கையில் பேப்பருடன்) என்று அடிப்படையிலேயே போதித்து விடுகிறோம்.

அடுத்து, பெண் திருமணத்தை முன்னிறுத்தி வளர்க்கப்படுதல். இந்நிலை மாறினால் தான் பெண் முன்னேற்றம் சாத்தியப்படும். இன்றைய பல பெண்களின் நிலை இன்னும் கேளிவிக்குறியாகவே உள்ளது.

இன்னும் குடித்து விட்டு வரும் கணவனையும் காத்து, குழந்தைகளையும் காப்பாற்றும் பெண்களைப் பார்க்கிறோம். ஆனால் அப்பெண்களால் உழைப்பிற்கு மட்டுமே நேரம் ஒதுக்க முடிகிறதே தவிர குழந்தையின் படிப்பிற்கோ,மனமளர்ச்சிக்கோ சரியான வழிநடத்துதல் தர இயலவில்லை.

கமலா(பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்னும் பெண்ணைக் குறித்து சொல்கிறேன். இரு பெண் குழந்தைகள்.கணவன் குடிகாரன். இரவு மட்டுமே வீட்டுக்கு வருபவன். இரு குழந்தைகளுமே படுசுட்டிகள். படிப்பில் கவனம்.பாடும் திறமை அதிகம். யார் இக்குழந்தைகளுக்கு அடிப்படை கல்வியும், திறமையை ஊக்குவிக்கும் பணியும் செய்வது. அவரவர்களுக்கு அவரவர் குடும்பத்தினை காப்பாற்ற வேண்டிய நிர்ப்பந்தம். கணவன் குடித்துவிட்டு கமலாவின் ஊதியப்பணத்தையும் பறித்து, குடிக்கு செலவிடுகிறான். இப்படி ஒரு கணவன் தேவையா என சில பெரியவர்கள் அவளிடம் கேட்க அப்பெண்மணி சொன்ன பதில். "இதாவது குடிச்சிட்டு ராவானா வீட்டில விழுந்து கெடக்கும். இது இல்லைன்னு தெரிஞ்சா, வர்ற நாயிங்களுக்கெல்லாம் யார் பதில் சொல்றது. என் தலையெழுத்து இது. இந்த ரெண்டும் சாப்புட ஒழச்சா போதும்..."

இப்படி எத்தனை கமலாக்களோ...?

எத்தனை ஆண்டுகள் எத்தனை பெண்கள் தினம் கொண்டாடவேண்டுமோ!

அனுப்பியவர் Admin

0 கருத்துக்கள்

புதுயுகமும் பெண் விடுதலையும்

த.தயாளினி:Batticalo Eelanatham-

ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு, உனக்கேன் தனி வாழ்வு, இணைந்தே செயற்படு, ஒன்றிணைந்தே குரல் கொடு, ஓங்கிடும் உன் பலம், கலங்கிடாதே உன் காலங்கள் யாவும் காவியத்தில் முடியும். பலம் கொண்ட மாந்தர்க்கு பூமியிலே பயன் உண்டு. ஓங்கியே வளர்வாய். நன்மைகள் உனக்குண்டு" பெண்கள் ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கப்படுவதன் காரணமாக ஆற்றல்களை வெளிப்படுத்த முடியாது போகிறார்கள்.

தங்களது ஆசைகள், சிந்தனைகள் மறுக்கப்படுகின்றன. வாழ்க்கை பற்றிய தேடுதல்களுக்கும், சுயதொழில் பற்றிச் சிந்திப்பதற்கும் முடியாமல் உள்ளது. மேலும் ஆக்கபூர்வமான ஆளுமைகள் இருந்தும் அவற்றை வெளிப்படுத்த முடியாத நிலையில் பெண்கள் இருக்கின்றார்கள். இதனால் இப்பெண்கள் தங்களது ஆற்றல்கள், திறமைகள், உணர்வுகள், விருப்பங்கள் போற்றவற்றை வெளிப்படுத்த தயங்குகின்றனர். இவற்றை வெளிப்படுத்த வேண்டும். நாளாந்தம் பெண்களுக்கு நடக்கும் பிரச்சினைகளை சமூகத்திற்கு உணர வைக்க வேண்டும்.

இவ்வாறு பெண்கள் இருப்பதற்குக் காரணம் பெண்களுக்கு நடக்கும் வன்முறைகளும், சமூகப் பார்வைகளுமே காரணமாகும். இது பெண்களின் வளர்ச்சிக்குத் தடையாக இருக்கின்றன. மற்றும் பெண்களுக்குப் பல பழ மொழிகளைச் சொல்லி அடக்கி வைக்கும் நிலமைகளும் அன்று தொடக்கம் இன்றுவரை இருந்து வருகின்றது.

அதாவது பெண்கள் எந்த வேலை செய்ய முற்பட்டாலும் உடனே கூறுவார்கள் "பெட்டைக் கோழி கூவி பொழுது விடியுமா?", "பெண் புத்தி பின்புத்தி" இவ்வாறான பழமொழிகள் பெண்களை இரண்டாம் பட்சமாக சுட்டிக் காட்டுகின்றது. மேலும் சமுதாயம் பெண்ணினது முயற்சியை சிலந்தி வலைக்கு ஒப்பிடுட்டும், ஆமைக்கு ஒப்பிட்டும், மற்றும் பெண்ணின் குற்றத்தை பெரிதாகவும், ஆண்களின் குற்றத்தைச் சர்வ சாதாரணமாகவும் இன்றைய சமூகம் பார்க்கின்றது. இவ்வாறு உள்ள எமது சமூகத்திற்கு ஒரு புதிய மாற்றத்தை சமுதாயமே ஏற்படுத்த வேண்டும்.

இவ்வாறான பார்வைகள் சமூகத்தில் ஏன் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. சமூகம் பெண்கள் மீது கொண்டுள்ள கருத்துத்தான் என்ன? இதிலிருந்து விடுபட ஏன் இன்னும் சமூகம் யோசிப்பதில்லை? சமுதாயம் பெண்கள் மீது கொண்ட பார்வை காலம் காலமாக இப்படித்தான் இருந்து வருகின்றது.

இதனை ஒரு வரையறையாக வைத்துள்ளார்கள். பெண்ணானவள் தலைகுனிந்து நடக்க வேண்டும். மேலும் தன் கணவனை இழந்த பெண் சுபகாரியங்களுக்கு முன்னுக்கு வரக் கூடாது போன்ற கருத்துக்களைக் கண்முன்னே காண முடிகின்றது. இவ்வாறு உள்ள எமது சமுதாயம் முழுமையான ஒரு திட்டமான சமுதாயமாக வருவதற்கு புரிந்துணர்வு வேண்டும்.

மேலும் வீடுகளிலும், வீதிகளிலும், வேலைத்தளங்களிலும், கிராமங்களிலும், நகரங்களிலும் சிறுவர்கள் துஷ்பிரயோகம், பெண்ணடிமைத்தனம், பாலியல் பலாத்காரம், பால் நிலைப்பாகுபாடு என இவ்வாறு பல்வேறு பிரச்சினைகளை நாளாந்தம் கூடிக் கொண்டு வருவதை நாம் பார்த்தும், கேட்டும், அனுபவித்தும் வருகிறோம். இது அனைவருக்கும் தெரிந்த விடயமே.

மேலும் எம் சமூகத்தில் ஒரு பெண் திருமணத்தின் முன் வேறு யாரையோ காதலித்திருந்தால் அப்பழைய காதல் குற்றமாகக் கருதப்பட்டு நாளாந்தம் அந்தப் பெண் கணவனால் துன்புறுத்தப்பட்டு வருவதை ஒரு சில குடும்பங்களில் காணக் கூடியதாக உள்ளது. அத்தோடு எமது சமூகத்தவரும் இத்தகைய ஒரு நிலையை இழிவாகவே நோக்கும் ஒரு போக்கும் காணப்படுகின்றது.

தவிர பெற்றோர்கள், தங்கள் பிள்ளைகளை அடக்கம், ஒடுக்கமாய் வளர்த்து எந்தவித கஷ்டமும் இல்லாத ஒரு வாழ்க்கையை அமைத்துக் கொடுக்கக் கூடிய ஒரு நிலையை உருவாக்குகின்றோம் என நினைத்து அவர்களை ஒரு வரையறைக்குள்ளே வைத்திருப்பர்.

இந்த நிலையில் பெண்கள் தங்கள் உண்மையான படைப்புக்களை வெளிக்கொணரும் போது குடும்பத்தாரை மீற வேண்டும். பின்பு சமூகத்தவரை மீற வேண்டும். இவ்வாறான தடைகளைத் தாண்டுவதற்கு பெரும்பாலான பெண்களால் முடியாத காரியமாகி விடுகிறது. மனிதன் ஒரு சமூகப் பிராணி. சமூகத்திலிருந்து விலகி வாழ்தல் முடியாத காரியம். இவ்வாறான போக்குகளினாலும் பெண்களினது ஆற்றல்களையும், உணர்வுகளையும் வெளிப்படுத்த முடியாத மோசமான நிலை ஏற்பட்டு வருவதைக் காணக்கூடியதாய் இருக்கின்றது.

அது மாத்திரமின்றி நாம் ஏதோ ஒரு சோகப் பாட்டைப் பாடினாலோ, அல்லது வானொலியினூடாகக் கேட்டு ரசித்தாலோ சமுதாயம் உடனே வாழ்க்கையில் என்ன காதல் தோல்வியோ? அல்லது எவனாவது ஏமாற்றி விட்டானா என்ற ஒரு ஏளனக் கேள்விகளை கேட்பதை நாம் கண்டும், உணர்ந்துமுள்ளோம்.

இவ்வாறாகக் கேட்பவர்கள் மத்தியில் உண்மையிலே பெண்கள் தங்களது உணர்வுகளையோ அல்லது, விருப்பங்களையோ வெளிப்படுத்த சமூகத்தின் மத்தியில் பயப்படுகின்றார்கள். சமூகத்தின் மத்தியில் நல்ல திறமைகளை வெளிப்படுத்துகின்ற பெண்கள் ஒடுங்கிய நிலையில் இன்றும் எமது சமூகத்தில் உள்ளனர். இப்படியான காரணங்களால் பெண்களது ஆக்கங்கள் தணிக்கைகளுடன்தான் வெளிவருகின்றது.

ஆகவே இவ்வாறான நிலமைகள், போக்குகள், இன்றைய சமூகத்திலிருந்து விடுபட வேண்டும். அப்போதுதான் எமது பெண்களின் உணர்வுகளின் வெளிப்பாடுகள் வெளியில் வரும். பண்பாட்டின் கூடுதலான அம்சங்கள் உயர் சாதியினராலும், ஆண் தலைமைத்துவக் கருத்தியலினாலும் உருவாக்கப்பட்டுள்ளன. ஆகவே இவ்வாறான கீழ்மையிலிருந்து மீளவும், கௌரவத்தை நிலை நாட்டவும், தொடர்ச்சியாக போராடவேண்டியுள்ளது.

ஆகவே எல்ல விதமான நாடுகளிலும் பெண்கள் தமக்கெதிரான ஒடுக்கு முறைக்கு முகம் கொடுப்பவர்களாக இருந்து வருகின்றனர். இன்றைய காலகட்டத்தில் நேரத்திற்கு நேரம் பெண்ணின் வாழ்வியல் நடைமுறைகள் மாறிக்கொண்டிருக்கும் வேளையில் இதுவரை காலமும் கட்டிக்காக்கப்பட்டு வந்த கலாசாரம் சிதைக்காமல் உண்மையான அனுஷ்டானங்களை, விடுதலைப் போக்கினை அடைய வேண்டும். "பழையன கழிதலும், புதியன புகுதலும் என்ற வாக்கிற்கு இணங்க எமது பெண்களினூடாக மேலே கூறப்பட்ட நிலமைகளில் இருந்து சமூகம் மாறுதல்கள் ஏற்படுத்த வேண்டும். பெண்கள் தமது குரல்களை, தமது உரிமைகளை, தொடர்ச்சியாக உயர்த்த வேண்டும். சமூகத்தின் பெண்களின் துயர்தோய்த்த நிலையைக் கண்டு கோஷங்கள் எழுப்பப்பட்டு வர வேண்டும்.

இன்று சர்வதேச மட்டங்களில் பெண்கள் தொடர்பாக குரல் கொடுக்கும் அனைத்து தொடர்பு சாதனங்களும், விரும்பியோ, விரும்பாமலோ, சமூகம் செவி சாய்த்துக் கேட்கும் அளவிற்கு பெண்களின் அடக்குமுறை வன்முறை பற்றிய செய்திகளை ஓயாது வெளிப்படுத்திக் கொண்டிருப்பதானது அனைத்துப் பெண்கள் அமைப்புக்களின் செயற்பாட்டின் விளைவே என்பதை நாம் உணர வேண்டும்.

ஆகவே பெண்கள் தங்களது ஆற்றல்கள், திறமைகள், உணர்வுகள், விருப்பங்கள் போன்றவற்றை வெளிப்படுத்த வேண்டும். அதேவேளை பெண்களின் பிரச்சினைகளை சமூகத்திற்கு உணரவைக்க வேண்டும். இதற்குத் தடையாக உள்ள எமது பிரதேச சமூகப் பார்வைகளை எடுத்துக் காட்டி இவ்வாறான சமூகத்தின் மத்தியிலிருந்து பெண்கள் விடுபட முன்வர வேண்டும்.

அனுப்பியவர் Admin

0 கருத்துக்கள்

புலம்பெயர் வாழ்வில் தமிழ்ப்பெண்கள் -2

எதிர்நோக்கும் உளவியல் பிரச்சனைகள்

உளவியல் பிரச்சனையில் பெண்கள் பாதிக்கப்பட்டிருப்பது இன்றைய புலம்பெயர் வாழ்வில் அதிகமாகிவிட்டது. ஏன், எதற்கு என்று குறிப்பிட்ட ஒரு சில காரணங்கள் மட்டுமில்லாமல், எந்த வயதில் என்றும் குறிப்பிட்டுச் சொல்ல முடியாமல் இந்த உளவியல் பிரச்சனை பெண்களின் பல்வேறு வளர்ச்சிப் பருவங்களிலும் பல்வேறு வளர்ச்சிப் படிகளிலும் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கிறது.

இங்கு நான் பெற்றோருடன் வாழ்கின்ற திருமணமாகாத எங்கள் பெண்பிள்ளைகள் உளவியல் பிரச்சனையில் மாய்வதற்கான காரணங்களை ஓரளவுக்கோ அல்லது மேலோட்டமாகவோ பார்க்க முயற்சிக்கிறேன்.

எங்களது ஆண்பிள்ளைகளும், பெண்பிள்ளைகளும் பிறந்ததிலிருந்து ஒரேமாதிரி உண்டு உறங்கி வளர்கிறார்கள். ஆனால் ஒரு குறிப்பிட்ட வயது வந்ததும் அதாவது பெண் குழந்தைக்குப் பத்து வயது வந்ததும் எமது வளர்ப்பில் வித்தியாசம் ஏற்படத் தொடங்குகிறது. அப்போதே ஒரு பெண் குழந்தையின் மனதில் விசனங்களும் ஏற்படத் தொடங்கி விடுகின்றது. ஏன் என்ற கேள்வி மனசைக் குடையத் தொடங்கி விடுகின்றது.

ஆண்பிள்ளை வெளியில் போய் விளையாடலாம். நினைத்த நேரம் வெளியில் போய் நினைத்த நேரம் வீட்டுக்குத் திரும்பலாம். ஆனால் ஒரு பெண்பிள்ளை ஏதாவதொரு காரணத்துக்காகப் பத்து நிமிடங்கள் பிந்தினாலே ஏன்...? ஏதற்கு...? என்ற கேள்விகளால் குடைந்தெடுக்கப் படுகின்றாள்.

பெண்பிள்ளைகளைக் கவனமாக வளர்க்கிறோம் என்ற பெயரில் எத்தனை அநாவசியத் தடைகள் போடப் படுகின்றன. இந்தத் தடைகளும் அளவுக்கு மீறிய கண்டிப்பும் பெண்பிள்ளைகளைச் செப்பனிட்டு வளர்த்து விடப் போதுமானவை என்றுதான் அனேகமான பெற்றோர்கள் நினைக்கின்றார்கள். இதுதான் பெண்பிள்ளைகளை வளர்க்கும் முறை என்றதொரு ஆழ்ந்த கருத்தை அவர்கள் தமக்குள் பதித்தும் வைத்திருக்கிறார்கள்.

பெற்றோர்களது இந்தச் செயற்பாட்டுக்கான முக்கிய காரணங்களில்
ஒன்று, அவர்கள் தம் பிள்ளைகளின் மேல் வைத்திருக்கும் அளவுக்கதிகமான பாசம். இரண்டாவது, இந்த சமூகத்தின் மேலுள்ள அதீத பயம்.

இரண்டையும் முடிச்சுப் போட்டுப் பார்த்தீர்களானால் இந்த சமூகம் தமது பெண்பிள்ளையை அடக்கமில்லாதவள் என்றோ, ஆட்டக்காரியென்றோ சொல்லி விடும் என்றும், அதனால் தமது மகளுக்கு திருமணம் நடக்காது போய் விடும் என்றும் பெண்ணைப் பெற்றவர்கள் பயப்படுகின்றார்கள். இது போன்று இன்னும் வேறு சில காரணங்களும், அதனால் ஏற்படும் பயங்களும்தான் பெற்றோர்களை இப்படியான முடிவுகளை எடுக்க வைக்கிறது. அவர்களின் இந்த முடிவினால் அவர்கள் பெண் பிள்ளைகளின் முன் கட்டி யெழுப்பும் தடைகள் அதிகமாகின்றன.

தடைகள் அதிகமாக அதிகமாகத்தான் அதை உடைத்தெறியும் வீறாப்பு ஏற்படும் என்பதை எந்தப் பெற்றோரும் சிந்தித்துப் பார்ப்பதில்லை.

அதேநேரம் இந்த உடைத்தெறியும் துணிவு எத்தனை பேருக்கு வரும்? உடைத்தெறியும் துணிவு வந்தாலும் அதை செயற்படுத்தும் தைரியம் எத்தனை பேருக்கு வரும்? இந்தத் துணிவு, தைரியம் எதுவும் வராதவர்கள் தான், எல்லாவற்றையும் மனதுக்குள்ளே வைத்து வருந்தி வருந்தி உளவியல் பிரச்சனைக்கு அடிமையாகிறார்கள்.

வீட்டிலே அம்மாவும் அப்பாவும் ஐரோப்பிய ஸ்ரைலில் எல்லாம் செய்வார்கள். ஆனால் அவர்களின் பெண் பிள்ளை வகுப்பு மாணவியின் அல்லது நண்பியின் பிறந்தநாள் விழாவுக்குப் போகவேண்டுமென்று கேட்டால் மட்டும் எமது கலாச்சாரத்தைச் சொல்லித் தடுத்து விடுவார்கள்.

பெண்பிள்ளை பாடசாலையால் வீட்டுக்கு வந்ததும் வராததுமாய் வீட்டுக்கு வரப்போகும் விருந்தினரை வரவேற்க அவளைக் கொண்டும் வேலைகள் செய்விப்பார்கள். விருந்தினர் வந்தவுடன் அப்பா போத்தலும் கிளாசுமாக இருந்து நண்பர்களுடன் அரட்டை அடிப்பார். அம்மா அப்பாவின் நண்பர்களது மனைவியருடன் சமையலறையில் சமையலும் அரட்டையுமாக நிற்பார்.
அண்ணன், தம்பி எல்லோரும் நண்பர்களிடமோ அல்லது விளையாடவோ வெளியில் போய்விடுவார்கள். அந்தப் பெண்பிள்ளை என்ன செய்யும்?

அப்பாவும் அப்பாவின் நண்பர்களும் தொலைக்காட்சியில் என்ன பார்க்கிறார்களோ! அதையே பார்த்து... அம்மாவும் அப்பாவின் நண்பர்களின் மனைவியரும் என்ன அரட்டை அடிக்கிறார்களோ! அதையே கேட்டு... இதுதான் பத்து வயது தாண்டிய ஒரு பெண்பிள்ளையின் அறிவை வளர்க்கும் விடயங்களா? அல்லது அந்த வயதில் அவளின் மனிதில் சிறகடிக்கும் இனிய கனவுகளுக்கும், நினைவுகளுக்கும் போடும் தீனியா?

வீட்டு வேலைகளைப் பிள்ளைகள் பழகத்தான் வேண்டும். ஆனால் அதுதான் அவர்கள் வாழ்க்கை என்றில்லை. அது போகப் பெண்பிள்ளைகள் மட்டும் தான் வீட்டு வேலைகளைப் பழக வேண்டுமென்றுமில்லை. பெண்பிள்ளைகள் வெளியுலகத்தையும் பார்க்க வேண்டும்.

இந்த வயதில் அவர்களிடம் பல ஆசைகள் இருக்கும். ஆனால் அனேகமான பெற்றோர்கள் நினைக்கிறார்கள், இந்த வயதில் பிள்ளைகளிடம் காதல் ஒன்று மட்டும் தான் இருக்குமென்று. அந்த நினைவுகள் அவர்களைப் பயமுறுத்த தவறுகள் ஏற்பட்டு விடக் கூடாதே என்ற ஒரே எண்ணத்தைக் கருத்தில் கொண்டு பெண்பிள்ளைகளைக் கட்டிப் போட்டு விடுகிறார்கள். இங்கு கூட பெண்பிள்ளைகளை மட்டுந்தான் கட்டிப் போடுகிறார்கள். ஆண் பிள்ளைகள் தவறினால், அது தவறு இல்லை, இயல்பு என்பது எமது சமூகத்தின் கணிப்பீடு.
பெற்றோர்களினதும், சமூகத்தினதும் இந்தத் தவறான கணிப்பீடு, பெண் பிள்ளைகளின் மனதில் ஒரு வித விரக்தியையும், வேதனையையும் ஏற்படுத்தி அதுவே நாளடைவில் உளவியல் தாக்கமாகி விடுகிறது.

இதனால் அந்தப் பெண்பிள்ளைகளின் மனம் மட்டுமல்லாமல், உடல் கூடப் பாதிக்கப் படுவது ஆராய்ச்சி ரீதியாகக் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.
ஐரோப்பிய மருத்துவர்களும், அமெரிக்க மருத்துவர்களும், ஐரோப்பிய, அமெரிக்கப் பெண்களை விட புலம் பெயர்ந்திருக்கும் ஆசியத் தமிழ்ப் பெண்கள் தோள்மூட்டு வலியாலும், மிக்ரேனே எனப்படும் கபாலஇடியாலும் மிகவும் அவஷ்தைப் படுவதைக் கண்டு பிடித்து ஒரு ஆராய்ச்சியும் செய்தார்கள்.

இந்த ஆராய்ச்சியிலிருந்து அவர்கள் கண்டு கொண்டது புலம் பெயர்ந்திருக்கும் ஆசியத் தமிழ்ப் பெண்களில் நூற்றுக்குத் தொண்ணூறு வீதமான ஆசியத்தமிழ்ப் பெண்கள் ஏதோ ஒரு வித மன அழுத்தத்துக்கு ஆளாகியிருக்கின்றார்கள். அதனால் அவர்களின் தோள் மூட்டில் வலியோ அல்லது தாங்க முடியாத தலை இடியாகிய கபால இடியோ ஏற்படுகின்றது. அல்லது அதையும் மீறி எல்லோர் மீதும் கோபமும், எரிச்சலும் ஏற்பட்டு அதை வெளியில் கொட்ட முடியாது உள்ளுக்குள்ளேயே அடக்கி, அடக்கி அது மூளையின் சில நரம்புகளுக்கு அழுத்தத்தைக் கொடுக்க, இரண்டு காதின் பின் புற நரம்புகளும் புடைத்து, அவர்களுக்கே, இது ஏன் என்று தெரியாமல் அவர்கள் நோயாளிகள் ஆகிக் கொண்டிருக்கின்றார்கள்.

இந்த விடயங்களை அனேகமான பெற்றோர்கள் இன்னும் அறிந்து கொள்ளாமல் இருப்பது சற்று கவலைக்குரிய விடயம்.

பெற்றோர்கள் ஒரு விடயத்தை நன்கு உணர்ந்து கொள்ள வேண்டும்.
அதாவது, பெண்பிள்ளைகளை அளவுக்கதிகமாக அடக்கி வளர்ப்பது தான் அவர்களைச் சிறந்த முறையில் வளர்ப்பதற்கான வழி இல்லை, என்பதை.

அவர்களுக்கு ஓரளவுக்காவது சுதந்திரம் கொடுக்க வேண்டும். அவர்களைப் பேச விட வேண்டும். அவர்களை மற்றவர்களுடன் பழக விட வேண்டும். வாழும் முறை பற்றி அவர்களுக்குப் பக்குவமாய்ச் சொல்லிக் கொடுக்க வேண்டும்.

அதை விடுத்து
"நீ பெண் - அதனால் இப்படித்தான் இருக்க வேண்டும்" என்றோ
"நீ பெண் - அதனால் இப்படித்தான் பேச வேண்டும்" என்றோ அல்லது
"நீ பெண் - அதனால் இன்ன இன்னதுதான் செய்யலாம்" என்றோ வரையறைகள் போடுவது மிகவும் தப்பானது.

ஒரு பெண்குழந்தையின் திறமைகள் இப்படியான செயற்பாடுகளால் கட்டிப் போடப்படுகின்றன. அந்த நிலையில், தன் திறமையை வெளிப்படுத்த முடியாத கோபத்தில், அது பற்றிப் பேசக் கூட முடியாத விரக்தியில் அந்தக் குழந்தை உளவியல் நோயாளியாகிறது.

ஆதலால் பெற்றோர்கள் சற்று அல்ல, நிறையவே சிந்திக்க வேண்டும். தமது பிள்ளைகளை தாமே உளவியல் நோயாளியாக்கும் அவல வேலையைச் செய்யாமல், அன்பு, நட்புடன் சுதந்திரத்தையும் கொடுத்து, ஒழுக்கத்தையும் சரியான முறையில் போதித்து அவர்களை வளர்க்க வேண்டும்.

பிள்ளையின் நடத்தையில் தவறு கண்டால், நீ பெண்பிள்ளை என்றோ, எமது கலாச்சாரம் என்றோ அவளைப் பயமுறுத்தாமல், அவளை அன்போடு அணுகி, ஆதரவோடு பேசி, நானிருக்கிறேன் உனக்கு என்ற நம்பிக்கையை அவள் மனதில் விதைக்க வேண்டும்.

அப்போதுதான் அவள் நட்போடு உங்களைப் பார்ப்பாள். பயம் தெளிந்து உங்களுடன் பேசி நல்ல பாதைக்குத் திரும்புவாள். வீட்டுக்குள்ளேயே வைத்து, அடக்கம் என்ற பெயரில் அடக்கி வளர்க்கப் படும் பிள்ளைகளை விட, உங்கள் பிள்ளை நல்லது, கெட்டதைப் பகிர்ந்துணரும் தன்மை கொண்டவளாக இருப்பாள்.

மிக மிக முக்கியமான விடயம், பெற்றோர்கள் தங்கள் நண்பர்களுடன் அரட்டையடிப்பதற்காகச் செலவு செய்யும் நேரத்தை விடக் கூடிய நேரத்தை தமது பிள்ளைகளுடன் அரட்டை அடிப்பதற்குச் செலவு செய்ய வேண்டும். அது பிள்ளைகளின் மனதில் ஒரு சந்தோஷத்தையும், பெற்றோரிடம் எதையும் மனம் திறந்து பேசி, ஆலோசனை கேட்கும் தன்மையையும் ஏற்படுத்தும்.

அதை விடுத்து கலாச்சாரம், பண்பாடு என்ற பெயரில் பெண்பிள்ளைகளை அடக்க நினைத்தால் இந்த உளவியல் பிரச்சனை எமது பெண்பிள்ளைகளின் மத்தியில் தொடர்ந்து கொண்டேயிருக்கும்.

சந்திரவதனா
யேர்மனி
2000

அனுப்பியவர் Admin

0 கருத்துக்கள்

புலம் பெயர் வாழ்வில் தமிழ்ப் பெண்களின் எதிர்காலம் 1

புலம் பெயர் வாழ்வில் தமிழ்ப் பெண்களின் எதிர்காலம் என்று பார்க்கும் போது, எல்லாப் பெண்களின் எதிர்காலமுமே ஒரே மாதிரி இருக்கும் என்று சொல்லி விட முடியாது.

புலம் பெயர் மண்ணில் வாழ்ந்தாலும் அனேகமாக ஒவ்வொரு தமிழ்ப் பெண்ணின் பாதையும் அவளை அண்டியுள்ள அவளது உறவுகளாலேயே தீர்மானிக்கப் படுகிறது. அதாவது திருமணமானவளாயின் அவளது கணவனாலும், திருமணமாகதவளாயின் அவளது பெற்றோராலுமே தீர்மானிக்கப் படுகிறது.

ஒரு பெண்ணிடம் முன்னேற்றப் பாதையை நோக்கிய சிந்தனை இருக்கிறதா, இல்லையா என்பதற்கு முன்னர் அவள் பெற்றோரோ, அல்லது அவள் கணவனோ அவளை அவள் எண்ணத்துக்கு ஏற்ப இயங்க விடுகின்றனரா என்பதைத்தான் நாம் பார்க்க வேண்டும். அதுதான் கூடுதலான சந்தர்ப்பங்களில் ஒரு பெண்ணின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கிறது.

திருமணமானபின், என்னதான் ஒரு பெண்ணிடம் திறமையும் முன்னேற்றப் பாதையை நோக்கிய நல்ல சிந்தனையும் இருந்தாலும், கணவன் என்பவன் அங்கு தடைக்கல்லாக, அவள் எண்ணங்களுக்கு முட்டுக் கட்டையாக நின்று "பெண்ணுக்கு சமையலும் சாப்பாடும் பணிவிடையும்தான் முக்கியம்" என்று சொல்வானேயானால், அந்தப் பெண்ணின் எதிர்காலம் புலம் பெயர் மண்ணிலும் புதுமைகள் எதையும் காணாது சமையலறை நெருப்பில் தீய்ந்து, படுக்கையறை விரிப்பில் மாய்ந்து போகும்.

"என்ன புதுமை வேண்டிக்கிடக்கு. பொம்பிளையெண்டால் புருஷனைக் கவனிக்கிறதை விட்டிட்டு...! வேறையென்ன அவவுக்குத் தேவை...?" என்று சொல்லும் ஆண்கள் இன்றும் புலத்தில் இருக்கிறார்கள். இப்படியான எண்ணம் கொண்ட ஆண்களுக்கு வாழ்க்கைப் பட்ட பெண்களின் எதிர்காலம் பற்றிப் பார்ப்போமேயானால் அதில் கூட பல விதம் இருக்கிறது.

அதில் முதலாவது ரகப் பெண்களின் நிலையைப் பார்த்தால், சமைப்பது, சாப்பிடுவது, பணிவிடை செய்வது, தொலைக்காட்சியில் வெறுமனே மகிழ்வூட்டும் சினிமா போன்ற நிகழ்ச்சிகளைப் பார்ப்பது.... என்றிருக்கும். இந்தப் பெண்களின் எதிர்காலம் வெளியுலகம் தெரியாமல், பொது அறிவுகளில் அக்கறையில்லாமல், எதற்கும் யாரையாவது தங்கி வாழும் தன்மையுள்ளதாகவும், இதுதான் வாழ்க்கை என்ற எண்ணத்தில் அமைதியாகவும் அதே நேரம் ஒரு வித அர்த்தமற்ற வாழ்க்கைத் தன்மையுள்ளதாகவும் அமைந்திருக்கும்.

இரண்டாவது ரகப் பெண்களின் நிலையைப் பார்த்தால், இவர்கள் முதலாவது ரகப் பெண்கள் செய்வதையே செய்து கொண்டு, ஆனால் அந்த வாழ்க்கையைத் துளி கூட ஏற்றுக் கொள்ள முடியாததொரு மனப் புழுக்கத்தில் வெந்து, மனதுக்குள் மௌனப்போர் நடத்தி மாய்ந்து கொண்டிருப்பார்கள். இவர்களின் எதிர்காலம் ஆரோக்கியமற்றதாகவே இருக்கும்.

மூன்றாவது ரகப் பெண்களின் நிலையைப் பார்த்தால், இவர்கள் புழுக்கம் தாங்காது பொங்கியெழுந்து, போராடி, தமக்குப் பிடித்தமான பாதையை நோக்கி நடக்கத் தொடங்குவார்கள். இங்குதான் பிரச்சனையே ஆரம்பிக்கிறது. ஏனெனில் இவர்கள் கணவனுடன் போராடியே இப் பாதையைத் தேர்ந்தெடுப்பதால், வீட்டிலே ஒரு ஆதரவான தன்மை இல்லாமல், கணவன் என்பவனின் அழுத்தம், குத்திக்காட்டல், வீட்டிலே ஏற்படும் சின்னச் சின்னத் தவறுகளுக்கும் "நீ வேலைக்குப்போவதுதான் காரணம்" என்பதான பிரமையை ஏற்படுத்தி மனைவியை குற்ற உணர்வில் குறுகவைக்கும் தன்மை... இத்தனையையும் தாண்டித்தான் இவர்களால் வெளியிலே நடமாடமுடியும். இது இவர்கள் மனதில் நிறையவே பாதிப்பை ஏற்படுத்தி மனஅழுத்தம் நிறைந்ததொரு அமைதியற்ற வாழ்க்கைத் தன்மையைக் கொடுக்கும். இந்த நிலையில் இப்பெண்களின் எதிர்காலமும் நிட்சயம் ஆரோக்கியமற்றதாகவே இருக்கும்.

இதைவிட சில கணவன்மார் சுதந்திரம் கொடுப்பது போல் கொடுத்து, நான் ஆண் என்ற ஆங்காரத்திலிருந்து சிறிதேனும் இறங்கிவராமல் வீட்டில் பெண்களை ஆட்டிப் படைக்கிறார்கள். இவர்களுடனான பெண்களின் எதிர்காலமும் சந்தேகத்துக்கிடமின்றி ஆரோக்கியமற்றதாகவே இருக்கும்.

இங்கு நான் மேலோட்டமான பெரிய பிரச்சனைகளை மட்டுமே பார்த்தேன்.
இவைகளைவிட இன்னும் சின்னச் சின்னதான எத்தனையோ அழுத்தங்கள் ஆண்களால் பெண்களுக்குக் கொடுக்கப் பட்டு, பெண்கள் பல விதமான பாதிப்புக்களுக்கும் பிரச்சனைகளுக்கும் முகம் கொடுக்க வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப் படுகிறார்கள். இப் பெண்களின் எதிர் காலமும் மிகுந்த ஆரோக்கியமற்றதாகவே இருக்கும்.

இதே நேரம் சில கணவன்மார் நல்ல ஆரோக்கியமான சிந்தனையுடன்
வீட்டுவேலைகளையும் மனைவியுடன் பகிர்ந்து கொண்டு, பிள்ளைகளை வளர்ப்பதிலும் முமுமையான பங்களிப்பை மனைவியுடன் சோந்து செய்து கொண்டு, மனைவியை வெளி உலகத்திலும் சுயமாக நடமாட விடுகிறார்கள்.
இப்படியான கணவன்மார்களுக்கு மனைவியராக வாய்த்த பெண்கள் உண்மையிலேயே கொடுத்து வைத்தவர்கள். இந்தப் பெண்களின் எதிர்காலம் நிட்சயம் பிரகாசமானதாகவும் ஆரோக்கியமானதாகவுமே அமையும்.

அடுத்து, பெற்றோருடன் வாழும் திருமணமாகாத பெண் பிள்ளைகளைப் பார்ப்போமேயானால் அவர்களும் எத்தனையோ பிரச்சனைகளை எதிர் நோக்குகிறார்கள். அவர்களுக்கும் எத்தனையோ தடைக்கற்கள். முட்டுக் கட்டைகள். இவைகளைத் தாண்டுவதற்கிடையில் அவர்கள் படும் கஸ்டங்கள், துன்பங்கள். அது பற்றி இன்னொரு சந்தர்ப்பத்தில் பார்ப்போம்.

சந்திரவதனா
ஜேர்மனி
1999

அனுப்பியவர் Admin

0 கருத்துக்கள்

இன்றைய காலகட்டத்தில் சாமத்தியச்சடங்கு அவசியந்தானா?

பெற்றோரே சிந்தியுங்கள்!
இன்றைய காலகட்டத்தில் சாமத்தியச்சடங்கு அவசியந்தானா..?

புலம்யெர்