www.webtamilan.com
Every thing that you want Information Technology E-Bussiness(Hosting,Domain Name Registration) Tamilealam Neethi Chat

சிந்திப்போம்!

சிறீலங்காவின் தேசக்கொடியானது அறியாமையின் சின்னமா? -1

-யாழில் இருந்து வல்லபை -[மூலம்:சூரியன்.கொம்]
(Is the National Flag of Sri Lanka a
Symbol of Ignorance? Part 1 By Vallapai From Jaffna)
இலங்கையில் பௌத்தத்தைக் காப்பவர்கள் தாங்களே எனக் கூக்குரல் இட்டுவருபவர்கள், புத்தபெருமானையும், பௌத்தத்தையும் கேவலப்படுத்துவது துன்பமானது.

இலங்கையின் அரசியல் பிரச்சனைக்கு அறிவியல் ரீதியாக, பேச்சுவார்த்தையூடாகத் தீர்வு காண முற்பட்டு, நாட்டின் அரசியல் யாப்பினிலும் மாற்றங்களை ஏற்படுத்த முற்பட்டிருக்கும் நிலையில், தேசக்கொடியில் மாற்றங்களை ஏற்படுத்துவதும் தவிர்க்கப்படமுடியாதது.
1. நுழைவு:

கொடிகள் (Flags) பண்டைக்காலம் முதல் பயன்பாட்டில் இருந்து வந்துள்ளனவென ஆராய்வாளர்கள் கூறுவர். பண்டைய இலக்கியங்களிலும், நூல்களிலும் கொடிகள் பற்றிக் கூறப்பட்டு, இருப்பதையும், பாறைச் சிற்பங்களிலும், ஓவியங்களிலும், சிலைகளிலும், ஏனைய தொல்பொருட்களிலும், கொடிகளின் அடையாளங்கள் இடப்பட்டிருப்பதையும் வைத்தே, ஆராய்வாளர்கள் இந்த முடிவுக்கு வந்துள்ளனர்.

சில உதாரணங்களாக:
தொல்காப்பியம் என்ற, காலத்தால் மிகவும் முற்பட்டதெனக் கூறப்பட்டுவரும் தமிழ் இலக்கண நூலின் பொருளதிகாரத்தின் மரபியலில், அரசர்க்குரியவை என்பதில், பின்வருமாறு கூறப்பட்டுள்ளது:

படையும், கொடியும், குடையும், முரசும்,
நடைநவில் புரவியும், களிறும், தேரும்,
தாரும், முடியும் நேர்வன பிறவும்,
தெரிவு கொள் செங்கோல் அரசர்க்குரிய.

தென்னிந்தியாவின் சேர, சோழ, பாண்டிய அரசர்கள், முறையே வில், புலி, மீன் அடையாளங்களைப் பொறித்த கொடிகளைக் கொண்டிருந்ததைத் தமிழ் இலக்கியங்களுடாக அறிய முடிகிறது. தமிழகத்துக் கல்வெட்டுக்களில் இந்த மூன்று அடையாளங்களும் காணப்படுகின்றன.

அரசர்களை விட, கடவுள்களும் கொடிகளைக் கொண்டிருந்ததாக, தமிழ் இலக்கியங்களில் கூறப்பட்டுள்ளது. முருகனைச் சேவலங்கொடியோன் எனத் தமிழ் இலக்கியங்கள் குறிப்பிட்டுள்ளன. முருகனைக் கம்பன், கோழியான் எனவும் பாடியுள்ளான்.

இலக்கியங்கள், விஞ்ஞான நூல்களைவிட, பண்டைய பாறைச் சிற்பங்களிலும், ஓவியங்களிலும், சிலைகளிலும், கொடிகளைக் காணமுடிகிறது.

உதாரணமாக: தென்னிலங்கையின் தம்புள்ள (Dambulla) எனுமிடத்தில் உள்ள பாறைக் கற்கோயிலில், காணப்படும் ஓவியங்களுள் ஒன்றானது, போரில் வென்ற துட்டகாமணீ என்ற அரசன், வாளேந்தும் ஆண்சிங்கம் பொறிக்கப்பட்ட கொடியினை கையில் ஏந்தி நிற்பதாகக் கூறப்படுகிறது.

அரசர்களும், கடவுள்களும் ஏன் குறிப்பிட்ட சில அடையாளங்கள் இடப்பட்ட கொடிகளைக் கொண்டிருந்தனர் என்பதற்கு, இன்றைய ஆராய்வாளர்கள் பல்வேறு விளக்கங்களைக் கொடுத்து வருகின்றனர். உதாரணமாக: தம்புள்ள பாறைக் கோயிலிலுள்ள ஓவியமானது, துட்டகாமணீ என்ற சிங்கள அரசன் தமிழர்களைப் போரில் வென்று, முழு இலங்கையையும்; ஒரு குடைக்கீழ்க் கொணர்ந்த பின்னர், சிங்கள இனத்தவர்களை அடையாளப்படுத்தும் வாளேந்தும் ஆண்சிங்க அடையாளம் பொறித்த கொடியினை உயர்த்தினான் எனக் கூறுவர். ஆனால், சேர, சோழ, பாண்டிய அரசர்கள் ஏன் தமது கொடிகளில் முறையே வில், புலி, மீன் அடையாளங்களை இட்டனர் என்பதற்கான விளக்கங்களை இன்றைய ஆராய்வாளர்களால் அறிய முடியவில்லை. அதேவேளையில், மயிலை வாகனமாகக் கொண்ட முருகனது கொடியில் ஏன் சேவல் அடையாளம் இடப்பட்டுள்ளது என்பதற்கும், ஆராய்வாளர்களால் விஞ்ஞான hPதியிலான விளக்கங்களை ஏற்படுத்த முடியவில்லை.

வாளேந்தும் ஆண்சிங்க அடையாளம் பொறித்த கொடியினை, இலங்கையில் சிங்களத் துட்டகாமணீ என்பவன் மாத்திரம்தான் கொண்டிருந்தான் என்பதற்கில்லை. கண்டி இராச்சியத்தின் கடைசி அரசனும், தமிழ் அரசனுமான ஸ்ரீ விக்கிரமராஜசிங்கனும், கண்டி இராச்சியமும் பிரித்தானியரால் கைப்பற்றப்பட்ட பின்னர், கைப்பற்றப்பட்ட பொருட்கள் பிரித்தானியாவுக்குக் கொண்டு செல்லப்பட்டு, அவற்றுள் சில லண்டனில் Royal Military Hospital Chelsea இல் வைக்கப்பட்டிருந்தன. அவற்றுள் வாளேந்தும் ஆண்சிங்கக் கொடியும் அடங்கும் எனவும், பின்னர் அது இலங்கைக்கு 20ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதிவரையில் கொண்டுவரப்பட்டது எனவும் கூறுவர்.

தென்னிலங்கை ஆராய்வாளர்கள் வாளேந்தும் ஆண் சிங்கமானது சிங்கள இனத்தவர்களை அடையாளப்படுத்துகிறது என்ற விளக்கத்தினை இன்று கொடுத்துவரும்போதும், கண்டியின் கடைசி அரசனான ஸ்ரீவிக்கிரம இராஜசிஙகன் தமிழனாக இருந்தபோதும், ஏன் அவன் சிங்கள இனத்தவரை அடையாளப்படுத்தும் வாளேந்தும் ஆண்சிங்கக் கொடியிகைத் தனது கொடியாகக் கொண் இருந்தான் என்ற கேள்விக்கு, விஞ்ஞான ரீதியிலான விளக்கத்தினை அவர்களால் கொடுக்க முடியவில்லை.

ஆனால், இரு கொடிகளிலும் காணப்படும் ஆண்சிங்கத்தின் வலது முன்னங்கால் ஆனது சிறிது மேலே உயர்த்தப்பட்டு, அதில் நிலைக்குத்தாக வாள் வைக்கப்பட்டுள்ளது. மேலும், இரு ஆண் சிங்கங்களும், எமது இடது கைப்பக்கத் திசையை நோக்கியிருக்கும் விதத்தில்தான் வைக்கப்பட்டுள்ளன. எதுவிதத்திலும், தம்புள்ள ஓவியத்தில் காணப்படும் கொடியின் அமைப்பானது படம்-1இல் காட்டியவாறு காணப்படுகையில், கண்டியின் தமிழ் அரசனான ஸ்ரீவிக்கிரமராஜசிங்கனின் கொடியின் அமைப்பானது, படம்-2இல் காட்டியவாறு காணப்படுகிறது. படம்-1இல், சூரியனும், சந்திரனும் காணப்படுகின்றன. இந்த இரண்டு கொடிகளினது அமைப்புக்களும் ஏன் வேறுபடுகின்றன என்பதற்கோ, ஏன் சிங்கமானது தம்புள்ள ஓவியத்தில் இரு முக்கோணம் போன்ற பகுதிகளின் மையமான இடத்தில் வைக்கப்பட்டுள்ளது என்பதற்கோ ஆராய்வாளர்களால் விளக்கத்தினை ஏற்படுத்த முடியவில்லை. மேலும், ஏன் இரண்டு கொடிகளிலும், ஆண் சிங்கமானது எமது வலது கைப்பக்க திசையை நோக்கியிருக்க வைக்கப்படாது, எமது இடது கைப்பக்கத் திசையை நோக்கியிருக்கும் விதத்தில் வைக்கப்பட்டுள்ளது என்பதற்கும் ஆராய்வாளர்களால் விளக்கத்தினை ஏற்படுத்திக்கொள்ள முடியவில்லை.


படம்-1 தம்புள்ள ஓவியத்தில் காணப்படும் கொடியின் அமைப்பு


படம்-2 ஸ்ரீவிக்கிரமராஜசிங்கனின் கொடியின் அமைப்பு


படம்-3 தற்போதைய ஸ்ரீ லங்காவின் தேசக்கொடி


2. சிறீ லங்காவின் இன்றைய தேசக் கொடி:

சுதந்திர இலங்கையின் தேசக் கொடியினை நிர்ணயிக்கவென, S.W.R.D பண்டார நாயக்க, சேர் ஜோன் கொத்தலாவல, J.R. ஜயவர்த்தன, டாக்டர் L.A. ராஜபக்ஸ என்ற நான்கு சிங்களவர்களையும் G.G. பொன்னம்பலம், S. நடேசன் என்ற இரு தமிழர்களையும் T.B. ஜயா என்ற இசுலாமியரையும் கொண்ட விசேட நாடாளுமன்றக் குழுவொன்று அமைக்கப்பட்டது. இக்குழுவிற்கு பண்டாரநாயக்க Chairmanஆக நியமிக்கப்பட்டார். பிறகாலத்தில், அன்று Commissioner of Archeologyயாக இருந்த S. பரணவிதான குழுவின் Secretaryஆக நியமிக்கப்பட்டார். இந்த விசேட குழுவில் நான்கு சிங்களவர்களும், இரண்டு இலங்கைத் தமிழர்களும், ஒரு இசுலாமியரும் நியமிக்கப்பட்டிருந்தமையானது, இறுதி முடிவானது சிங்களவர்களால்தான் ஏடுக்கப்படும் நிலை அங்கு காணப்பட்டத்தை உறுதிப்படுத்துகிறது.

மேலும், வாளேந்தும் ஆண் சிங்கமானது சிங்கள இனத்தவர்களைக் அடையாளப்படுத்தப்படுகிறது என்ற முடிவிற்குச் சிங்களவர்கள் ஏற்கனவே வந்து, சுதந்திரத்தின்போது பிரித்தானியரின் தேசக்கொடியான Union Jack கொடி இறக்கப் பட்டபோது, வாளேந்தும் ஆண்சிங்கக் கொடியே ஏற்கப்பட்டிருந்தது. இந்தநிலையில், இசுலாமியரும், இலங்கைத் தமிழரும் கொடியில் எப்படி அடையாளப்படுத்தப்படுவது, மேலதிகமாகக் கொடியில் ஏதாவது வலியுறுத்தப்படவேண்டுமா என்பவைகள் தொடர் பாகவே முடிவெடுக்கப்படவேண்டியிருந்தது.

இரண்டுவருடகாலங்களின் பின்னர், அந்த விசேட குழு அதனது இறுதி அறிக்கையைச் சமர்ப்பித்தது. ஆனால், S. நடேசன் அந்த அறிக்கையை ஏற்க மறுத்து, தனித்தவொரு அறிக்கையைச் சமர்ப்பித்திருந்தார். அவரது கருத்துப்படி, தேசக்கொடியினில் எல்லா மக்களுக்கும் பொதுவாக ஒரு அடையாளம் இருந்தால் போதுமானது, அது இலங்கைப் பிரஜைகள் அனைவரையும் ஒன்றிணைக்க உதவும் என்பதாகும்.

இவர்களது ஆய்வுகளின் முடிவுக்கிணங்க உருவாக்கப்பட்ட சிறீலங்காவின் இன்றைய தேசக் கொடியானது, படம்-3இல் காட்டியவாறு அமைந்தது.

சிறீலங்காவின் தேசக்கொடியில் காணப்படும் பச்சை நிற வரியானது, இசுலாமிய மக்களை அடையாளப்படுத்துவதாகவும், காவி நிற வரியானது, இலங்கைத் தமிழர்களை அடையாளப்படுத்துவதாகவும் வாளேந்தும் ஆண் சிங்கமானது, சிங்கள இனத்தவர்களை அடையாளப்படுத்துவதாகவும், தேசக்கொடி பற்றிய சிங்கள, ஆங்கில நூல்களிலும், பத்திரிகைகளின் கட்டுரைகளிலும், மாணவர்களுக்குக் கற்பிக்கப்படும் நூல்களிலும் கூறப்பட்டுவருகிறது.

சிங்கத்தை உள்ளடுக்கும் விளிம்பிலுள்ள பொன் நிறப் பெட்டியானது பௌத்த சங்கவைக் குறிக்கும் எனவும், ஆண் சிங்கம் இருக்கும் நீள சதுரப்பெட்டியின் முலைகளில் உட்புறமாக வைக்கப்பட்டுள்ள நான்கு பொன் நிற வெள்ளரசமிலைகள் Metta, Karuna, Muditta, Upekkha என்பவைகளை அடையாளப்படுத்துவதாகவும் கூறப்படுகிறது.

இலங்கையின் அரசியல் யாப்பு வெளியீடுகளில் இலங்கையின் தேசக் கொடியின் நிறப்படம் கொடுக்கப்பட்டும், சிறீலங்காவின் தேசிய கீதம் கொடுக்கவும் பட்டும், அதன் சொற்கள் பாடும்போது எப்படிச் சரியாக உச்சரிக்கப்படவேண்டும் என்பது பற்றிய விளக்கமும் கொடுக்கப்பட்டுள்ளபோதும், தேசக் கொடியில் காணப்படும் அடையாளங்கள் எவற்றை அடையாளப்படுத்துகின்றன என்பது பற்றி எதுவும் கூறப்படவில்லை.

இந்தநிலையில், சிங்கள, ஆங்கில நூல்கள், ஊடகங்களிலும், பாட நூல்களிலும் தொடுக்கப்பட்டுவரும் விளக்கங்கள் எந்தவொரு அரசினாலும் அதிகார பூர்வமாக நிராகரிக்கப்படாத நிலையில், சரியானவை என்றே கருதவேண்டியுள்ளது.

ஆனால், வாளேந்தும் ஆண்சிங்கம் அடையாளம் தொடர்பாகப் பல கேள்விகள் எழவே செய்கின்றன.

1. இலங்கையின் சிங்கள அரசர்கள், வாளேந்தும் ஆண்சிங்க அடையாளத்தை மாத்திரம்தானா பண்டைய காலம் முதல் ஸ்ரீவிக்கிரமராஜசிங்கன் காலம்வரை பயன்படுத்தி வந்திருந்தனர்? அப்படியானால், தென்னிலங்கையில் காணப்படும் பிராமி எழுத்து நாணயங்களிலும், ஏனைய நாணயங்களிலும், சிற்பங்களிலும், ஏனையவைகளிலும் காணப்படும் ஆண்யானை, ஆண்குதிரை, எருது, ஆமை, மயில், அன்னம், சேவல், மீன் மற்றும் அடையாளங்கள் எந்தெந்தச் சமூகங்களை அடையாளப்படுத்துகின்றன?

2. சிங்கள அரசர்களைத் தவிர்ந்த ஏனையவர்கள் ஆண்சிங்க அடையாளத்தையும், வாளேந்தும் ஆண்சிங்க அடையாளத்தையும் பயன்படுத்தியிருக்கவில்லையா?

3. சிங்கம் வீரமானது, வலிமையானது. ஆப்படியாயின், வலிய, வீர சிங்கத்திற்கும், வாளுக்கும் (Sword) என்ன தொடர்பு?

4. வாளேந்தும் ஆண்சிங்கம் ஏன் எமது வலது கைப்பக்கம் பார்த்தவண்ணம் வைக்கப்படாது, துட்டகாமணீயின் கொடியிலும், கண்டி இராச்சியக் கொடியிலும் எமது இடது கைப்பக்கம் பார்த்வண்ணம் வைக்கப்பட்டுள்ளது?

5. பௌத்தமானது ஆண்களுக்கும், பெண்களுக்கும் சம உரிமைகளைக் கொடுப்பது. மஹாவம்ஸவில் தேவநம்பியதிஸ்ஸவின் ராணியான அனுலாவும், அவளது பரிவாரங்களும் பிக்குணிகளாகக் கி.மு. 3ஆம் நூற்றாண்டிலேயே மாறியதாகக் கூறப்பட்டுள்ளது. இந்தநிலையில், பௌத்த இலங்கையில் எப்படிச் சிங்கள இனத்தவர்களை அடையாளப்படுத்தவென ஆண்சிங்கம் பயன்படுத்தப்பட்டது?

6. ஆண்சிங்கம் சிங்கள இனத்தை அடையாளப்படுத்துவதாயின், கண்டியின் தமிழ் அரசனனான ஸ்ரீவிக்கிரமராஜசிங்கன் ஏன் வாளேந்தும் ஆண் சிங்கத்தினைத் தனது கொடியில் அடையாளமாக வைத்தான்?

7. கண்டியில் தலதா மாளிகாலவில் (Dalada Maligawa) புத்தபெருமானின் புனித தந்ததாது வைக்கப்பட்டுவந்துள்ளது. ஆகவே கண்டியில் புத்தபெருமானின் அற ஆட்சியே இருந்துள்ளது. இந்த நிலையில் கண்டி இராச்சியத்தில் புத்தபெருமானின் அற ஆட்சியை அடையாளப்படுத்தும் கொடிகளே அன்றும் பறக்கவிடப்பட்டிருக்க முடியும். அப்படியானால், வாளேந்தும் ஆண் சிங்கமானது ஏனைய மிருகங்களைக் கொன்று தின்னும் மிருக சிங்கமல்லாது, ஒளிமயமான, அன்புமயமான, அருள்மயமான சிங்கத்தை, புத்தபெருமானைக்த்தான் அடையாளப்படுத்துகிறதா?

8. தம்புள்ள கற்பாறைக் கோயிலானது புத்தபெருமானின் கோயிலாகும். ஆகவே, அக்கோயிலில் புத்தபெருமான் தொடர்பானவையும், பௌத்தம் தொடர்பானவையும் தான் காணப்படமுடியுமேயன்றி, ஒரு இனம், சாதி, குழு போன்றவவைகளை அடையாளப்படுத்தும் விடயங்களும், தமிழர் மீதான சிங்களவரின்; போர் வெற்றிபற்றியோ இருக்கமுடியாது. இந்தநிலையில், போரில் வெற்றிபெற்றதாகக் கூறப்படும் துட்டகாமணீ உயர்த்திய கொடியானது புத்தபெருமானின் அற ஆட்சியானது இலங்கை பூராகவும் நிலைநாட்டுப்பட்டதைக் குறிக்கிறதா? அதாவது, வாளேந்தும் ஆண் சிங்கக் கொடியானது புத்தபெருமானைக் குறிக்கிறதா? ஆந்தக் கொடியில், ஏன் வாளேந்தும் ஆண் சிங்கமானது நடுவு நிலைத் தன்மையையுடையதான முறையில் வைக்கப்பட்டுள்ளது? அது பௌத்தத்தின் அடிப்படைத் தத்துவத்தை வலியுறுத்தவா?

இந்த எட்டுச்சந்தேகங்களுடன் அடுத்த பகுதியில் இந்த இணையத்தளம் (www.Sooriyan.com Email to: Vallapai@Sooriyan.com ) ஊடக மீண்டும் சந்திப்போம் அது வரை சிந்திப்போம்.

இங்கு ஆராயப்பட்டவை பற்றி ஏனையோருக்கு அறியக் கொடுங்கள். உங்களது கருத்துக்களையும், ஆய்வுகளையும் இந்த இணையத் தளமூடாக முன்வைத்து, வாதியுங்கள். அறிவியலே இலங்கையில் சமூகங்களை நிலைக்க வைக்கும், முன்னேற வைக்கும், மேன்மையான மனித வாழ்க்கையை அமைக்க வைக்கும்.

Abimānasingha(m) Sitthāwathai Uthayakumār(a) B. Sc. (Mech. Eng),
Ex- Legionnaire ( Legion Etrangere- Francaise)

அனுப்பியவர் வெப்தமிழன்

0 கருத்துக்கள்:

உங்கள் கருத்துக்களை அனுப்ப Post a Comment

முகப்பு

அனைத்து உரிமைகளும் வெப்தமிழன்.கொம்© இற்குரியது(2002-2004)
 
[பாவனை செய்யப்பட்ட எழுத்துரு யுனிக்கோட]