www.webtamilan.com
Every thing that you want Information Technology E-Bussiness(Hosting,Domain Name Registration) Tamilealam Neethi Chat
Home Page Go to the Previous page

தாயகக்கவிஞர் புதுவை இரத்தினதுரையின் உலைக்களத்திலிருந்து.......

தாயகத்தை காதல் செய்!

அட பைத்தியக்கார கவிஞனே
தாயகத்தை எப்படியடா காதலிக்க முடியும்?
பெண்ணை ஆணும்
ஆணைப்பெண்ணுமே ஆராதிக்க முடியும்.
மண்ணுக்கு மாலையிட முடியுமா?
கட்டித்தழுவி முத்தமிட முடியுமா?
தாயகத்தைகாதலிக்கச்சொல்லும் கவிஞனே
உனக்கு புத்தி என்ன பேதலித்து விட்டதா?
உண்மைதான்.
அன்னை பூமி மீது எனக்கு அளவற்ற காதல்.
எப்படியென்று எடுத்துச்சொல்ல முடியாது
அது கற்பனை கடந்தது.
என் தாய்மடி எத்தனை அழகு?
காலை சேலை கட்டிவந்து
பூச்சூடி புன்னகைக்கும் போது
காணக்கோடி விழிகள் வேண்டும்.
மாலை வந்து மயக்கும் எழிலில்
என்மனம் வசமிழந்து போகும்
இங்கு வேர்பிடித்த ஒவ்வொரு புல்லையும்
நான் விரும்புகின்றேன்.
விரிந்து கிடக்கும் பரந்த வயல்வெளிகளையும்
வந்துகரைதழுவி
தாயவள் சேலை நனைத்து விளையாடும்
கடலையும் நான் காதலிக்கின்றேன்.
வாசமற்றதாயினும்
பூவரசம்பூக்களை நான்
பெரிதும் விரும்புகின்றேன்.
பனைகளே எனது கற்பனைச் சுனைகள்
தென்திழீழத்தின் திசையை வணங்குவேன்
மட்டக்களப்பின் மடியில் தவழ்வேன்.
அங்கு முழுநிலாக்காலத்தில்
களத்து மேட்டில் கேட்கும் பாட்டும்
கும்மியும்,குரவையும்
அம்மானையும் வசந்தன் பாட்டும்
எனக்கு இறக்கை கட்டிப் பறக்க வைக்கும்.
முறுக்கேறி இராவணன் பூமி
திருக்கோணமலை
அது அழகின் சிகரம்.
நிலத்தின் முலையென நிமிர்ந்த
கோணேசர் மலைக்கு
பின்னரே வெய்யில்"வாணிஸ்".
தம்பலகாமத்து நெல் வயல்களில்
வெட்டியடுக்கிய சூட்டின் வாசம்
மூக்கு நுனியை முத்தமிடும் போதே
நாக்கில் நீரூறும்.
பச்சையரிசி சாதம் படுருசி.
பன்குளத்து தயிருக்கு நிகர்?
வன்னி மண்ணுக்கு என்ன குறை?
கொம்புத்தேனும்
பாலைப்பழக்காலத்துப்பன்றிக்கெழுப்பும்
நந்திக்கடலின் நண்டும்
உண்டு மகிழ்ந்தவனுக்கே உண்மை தெரியும்
"வங்கம் மலிகின்ற கடல் மாதோட்டம்"
எங்களது என்ற
தேவாரப்பாட்டைக் காதோரம் ஏற்று.
பாலாவியின் கரையில் பாடு:
காற்றில் கலந்து உலகமெங்கும் உலாவரட்டும்.
தாயகத்தைக் காதல் செய் என்றேன்.

நிலத்தைக் காதலிப்பது எப்படியென்று
நீ என்னைக்கேட்கின்றாய்.
தமிழனே!
தாய்மடியில் நீ புரண்டெழவில்லை.
அன்னை மண்ணை அன்பு செய்யவில்லை.
தாயகத்தை காதலிக்கவில்லை.
அதனாற்தானே...
ஆறுகோடி தமிழர்கள் இருந்தும்
உனக்கொரு 'தனி வீடு' கிட்டவில்லை.
அகதியாகி
எத்தனை தெருக்களில்
அலைகின்றாய்.
இரவற்திண்ணையிற்தானே
இன்றும் படுக்கின்றாய்.
மூக்குச்சீறக்கூடப்பயந்து
பேச்சிழந்து கிடக்கின்றாய்.
பகைவனின் பாதனிகளுக்குக்கூட
பூசை செய்கின்றாய்.
குடங்கிக்குடங்கி கூனாகிப்போனாய்.
அடதமிழனே!
தாய்நிலத்தைக் காதல்செய்து பார்.
உன் மேனியில் இருந்து பன்னீர் விசுறும்.
நரைத்த மயிர்கூடக்கறுக்கும்.
ஆயிரம்கோடிச் சூரியப்பிரகாசம்
உன்கண்ணிலிருந்து வீசும்.
நீ எடுத்து வைக்கும்
ஒவ்வொருகாலடிக்குள்ளேயும்
நிலம் கசிந்து நீரூறும்.
கீரிமலைக்கேணியை
யாரிடமோ கொடுத்து விட்டு
தாயகத்தை காதலிப்பது எப்படியென்று
என்னிடம் கேட்கின்றாய்.
தாயகம் பேசாது.
ஓரக்கண்ணால் வெட்டி உருவேற்றாது.
கடிதம் எழுதாது.
கட்டியணைத்து முத்தமிடாது.
இந்தநான்கும் இல்லையென்றால்
காதலிக்க முடியாதா?
எந்தப்பேயன் சொன்னவன்?

தாயகம் என்தாய்.
தாயகம் என் சக்தி.
தாயகம் என் மூச்சு.
வேறொருவன் வீட்டில் விருந்தாளியாக
பட்டுவெட்டியுடன் இருப்பதிலும்பார்க்க
சொந்தவீட்டில்
கோவணத்துடன் இருப்பதே சுகம்;.
இறந்தபின்னர் என்னை எரிக்கக்கூடாது.
ஏன்தெரியுமா?
என் தாயகம் எரிகாயங்களுக்கு உள்ளாகக்கூடாது.
என்னைப்புதைப்பதையே விரும்புகின்றேன்.
புதைக்கும் போது புற்களின் வேரறுந்து போகாமல்
குழிவெட்டுங்கள்.
உப்புப்போட்டு புதையாதீர்.
நிலம் உவராகிவிடும்.
மண்போட்டு மூடினால் போதும்.
மழைபெய்ததம்
வேர்கள் துளிர்த்துக்கொள்ளும்.
என்மண்ணில் நிற்கும் போதுதான்
எனக்கு இறக்கை முளைக்கிறது.
உனக்கும் அப்படித்தான்
உணர்ந்து கொள்.
ஒரு பெண் உன்னையும்
நீ ஒரு பெண்ணையும்
ஒரு ஆண் உன்னையும்
நீ ஒரு ஆணையும்
காதலிப்பது உன் உரிமை.
ஆனால்
மண்ணைக்காதலிப்பதே உன்னதம்.
தமிழனே!
தாயகத்தை காதல் செய்......!

-வியாசன்

All rights Reserved for Webtamilan.com© (2003) [Used Font is Unicode]