www.webtamilan.com
Every thing that you want Information Technology E-Bussiness(Hosting,Domain Name Registration) Tamilealam Neethi Chat
Home Page Go to the Previous page

தாயகக்கவிஞர் புதுவை இரத்தினதுரையின் உலைக்களத்திலிருந்து.......

குந்த ஒரு குடிநிலம்

வெறும் சடப்பொருளான மண்ணுக்காக
எத்தனை சாவுகள்?
ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வதற்கு
ஊடகமான மொழிக்காகவா
இத்தனை மரணங்கள்?
இப்படி அங்கலாய்ப்போர் இருக்கின்றனர்.
இந்தப்போரினால் இறந்து போனவர்களுக்குள்ளே
எத்தனை பாரதிகள்
எத்தனை மக்சிம் கார்க்கிகள்
எத்தனை டால்ஸ்டாய்கள்
எத்தனை மார்கோனிகள்
இன்னும் ஐசாக் நியூட்டன்கள்
மேரிகியூரி அம்மைகள்
எத்தனைபேர் இருந்தார்களே?
அத்தனைபேரும் அழிந்துவிட்டார்களே!
இப்படி மூக்குநீர் சிந்தி
முட்டைக் கண்ணீர் வடிப்போருண்டு
விரிந்த இந்த உலகமே
மனிதன் வாழ்வதற்காககத்தானே
இதில் தமிழனுக்குத் தனிநாடு வேண்டுமா?
இப்படிக் கேட்போர் இன்றும் இருக்கின்றனர்.
கல்தோன்றி மண் தோன்றாக் காலத்துக்கு
முன்தோன்றியது தமிழென்றால்,
அந்த முதற் தமிழன்
காலெடுத்து நடந்த நிலம் எது?
அவன் மலம் கழித்துவிட்டு கழுவியது எதனால்?
இப்படி அங்கதம் கமழ ஆரவாரிப்போர் உண்டு.
எல்லாவற்றையும் சோத்துக் கோர்த்தால்....
இவர்கள் எழுப்புவதும்
எதிரொலிப்பதும் என்ன?
சரியாக நிலம் வெளிக்காத ~இளம்காலைப் பொழுதுகள்
பகலாகாது@ இரவானது கொடுமையாம்.
சரி,
அப்படியே இருந்துவிட்டுப் போகட்டும்.
ஆனால்....
உயிர்ப்புடன் பிறந்தலையெல்லாம் போராடுகின்றன
இந்தத் தத்துவம்
இவர்களுக்கு மட்டும்
புதைந்துபோன செப்பேடுகள் ஆனது ஏன்?
போராட்டம் பூப்பறிக்கும் வேலையென்று
இவர்களுக்கு பாடம் கற்பித்த பரமபிதா எவன்?
குருதி சொரியாது உரிமை பெற்றதுக்கு
ஒரு உதாரணம் சொல்லட்டும் பார்க்கலாம்.
தமிழீழம்
இவர்களுக்கு கனவாக இருக்கலாம்.
போராடும் எங்கள் மக்களுக்கு
கையள்ளி மகிழும் காலடி மண்தான்
எட்டிப்பிடிக்கக்கூடிய தாயின் மடிதான்.
விரிந்த காலுடைய கும்பிடு பூச்சிகளான
இவர்களுக்கு
ஆபிhக்கா அத்தை வீடாகவும்,
அமெரிக்கா அக்கா வீடாகவும் இருக்கலாம்.
எங்கே, இந்தச் சர்வதேச வாதிகள்
அத்தை வீட்டுக்குள்ளே...
அனுமதியின்றி நுழையட்டும் பார்க்கலாம்?
இவர்களுக்கு
உலகம் ஒரே கூரையின் கீழ் உறங்குகிறதாம்.
ஆனால்....
கூரை ஒன்றானாலும்
குடியிருப்புகள் வேறு வேறு என்பது
இவர்களின் அகராதியில் மட்டும்
அச்சழிந்து போய்விட்டதா?
தமிழீழம் வெறும் மண்ணாகவா
இவர்களின் கண்களுக்குத் தெரிகிறது?
இந்த மண்ணில் தானே
எங்கள் நு}று தலைமுறையே புதைந்து கிடக்கிறது.
மூன்றடி தோண்டினால் போதுமே
நம் முன்னோர்களின் எலும்புக்கூடுகள் தலைநிமிர்த்தும்.
இங்கு வீசும் காற்று வெறும் காற்று மட்டும் தானா?
எங்கள் பரம்பரையின் மூச்சும் அதில் கலந்திருப்பது
இவர்களின் சுவாசத்துக்கு ஏன் தெரியாமல் போனது?
முற்றத்தில் நிற்கும் பலா மரத்தைக் கீறினால்...
வடிவதும் பால் மட்டும் தானா?
எங்கள் முந்தையரின்
குருதியும், வியர்வையும் கொப்பளிப்பது
இவர்களுக்கு மட்டும் ஏன் தெரியவில்லை?
எங்கள் கோவில் வீதிகள்
வெறிச்சோடிப்போன வெறும் வெளிமட்டும் தானா?
யார் சொன்னது?
எமது பாட்டன் ராமன் வேடம் தரித்து
மேடையில் நின்றபோது
பாட்டி தன்னை சீதையாக உருவகித்து
மனதுக்குள்ளே....
மாயமான் கேட்டு நின்ற மண்ணல்லவா?
எப்படி எங்கள் தாய் நிலமும்
அரபுப் பாலைவனமும் ஒன்றாக முடியும்?
இவர்களுக்கு எல்லைகள் தொல்லைகளாக இருக்கலாம்
ஆனால் எல்லாவற்றிற்கும் எல்லைகள் இருக்கின்றனவே.
கடலுக்கு நிலமும்,
நிலத்திற்கு கடலும் எல்லைகள் ஆகும்போது
எங்கள் தாய் நிலத்துக்குமட்டும்
வேலிகள் வேண்டாமா?
வெள்ளிக்கிழமை விரதச் சாப்பாட்டின் பின்னர்,
சாணிமெழுகிய திண்ணையில்
சரிந்து படுக்கின்ற இன்பம் இருக்கிறதே.
இது இங்கன்றி
வேறு எந்த மண்ணில் ஏற்படும்?
தாய் மடிதானே சந்தோசம்.
அழகில்லை என்பதற்காக
என்னைப் பெற்ற ஆச்சி
எப்படி அடுத்த வீட்டுக் கிழவி ஆகமுடியும்?
அழகானவள் என்பதற்காக
அடுத்த வீட்டுக் கிழவி
என்னைப் பெற்றவள் ஆகமுடியுமா?
ஊத்தை உடுப்பென்றாலும்
ஆச்சியுடன் ஒட்டியிருக்கும் சுகமிருக்கிறதே
அதைவிடச் சுகம் எதுவுமே இல்லை.
சப்த சமுத்திரங்களுக்கும் சொந்தம் கொண்டாடும்
சர்வதேச வாதிகளுக்கு
மட்டக்களப்பு வாவியின் மகிமை தெரியாது.
நைல் நதி தீரமும் நமதென்று சொல்பவர்களுக்கு
கீரிமலைக் கேணியின்
ஊற்று நீரின் உன்னதங்கள் புரியாது.
அல்ப்ஸ் மலை அழகுதான்
அதற்காக
கோணமலை கோரமலை ஆகிவிடாது.
எங்களுக்கு....
பாய் விரித்துப் படுத்துறங்கவும்,
அச்சமின்றி ஆடிப்பாடவும்,
குந்த ஒரு குடிநிலம்
சொந்தமாக வேண்டும்.
எல்லைபோட்ட கொல்லை
இதுதான் எங்கள் குறிக்கோள்!.

-வியாசன்

All rights Reserved for Webtamilan.com© (2002) [Used Font is Unicode]