www.webtamilan.com
Every thing that you want Information Technology E-Bussiness(Hosting,Domain Name Registration) Tamilealam Neethi Chat
Home Page Go to the Previous page

இலக்கிய முயற்சியாளர் வாசுகி சொக்கலிங்கத்துடனான சந்திப்பு

பெண்ணினம் சார்ந்த கருத்து நிலையில் உங்களுடைய இலக்கிய முயற்சிகளுக்குப் பின்னணியாக இருந்து கல்வி நிலைகள் பற்றிக் கூறமுடியுமா?
ஆரம்பக்கல்வியை மகேஸ்வரி வித்தியாசாலையிலும் இடைநிலைக்கல்வியை இந்து மகளிர் கல்லூரியிலும், உயர் கல்வியை யாழ் பல்கலைக்கழகத்திலும் கற்றேன். தமிழ் பாடத்தை சிறப்புப் பாடமாககொண்டு, இரண்டாம் வகுப்பில் சித்திபெற்றேன். தற்போது சுண்டுக்குளி மகளிர் கல்லூரியில் ஆசிரியராகக் கடமையாற்றுகின்றேன்.

பல்கலைக்கழகத்தில் கிடைத்த வாய்ப்புக்களைப் பெரிதும் பயன்படுத்திக்கொள்ளவில்லை. தற்போது பணிபுரியும் பாடசாலையில் எனக்கு நிறைய வாய்ப்புக்கள் கிடைத்திருக்கின்றன. இலக்கியப் பணி செய்வதற்குள் களம் அமைத்துத்தந்ததாக, எனது ஆசிரியப் பணியையே கூறலாம்.தமிழ் ஆசிரியர் என்ற வகையில் எனக்கு தமிழ் இலக்கியப் பணியைச் சயெயக்கூடிய வாய்ப்பு பாடசாலைக்கு ஊடாக வளர்ந்திருக்கின்றது என்றுதான் கூறுவேண்டும். சுண்டுக்குளி மகளிர் கலலூரியில் கலை நிகழ்வுகளை ஏற்பாடு செய்யும்போது நாடகம் நடைபெறுவது வழக்கமாகும். குழந்தை சண்முகலிங்கம் பெரும்பாலும் நாடகத்தை எழுதுவார். அவரோடு சேர்ந்து பணியாற்றியபோது, எனக்கு நாடகம் பற்றிய அனுபவங்கள் நிறையக் கிடைக்கின்றது.

"கவிதா நிகழ்வ"என்ற நிகழ்வை நாங்கள் எமது பாடசாலைகளில் நடத்தி வந்தோம். அங்கு கவிதா நிகழ்ச்சிக்கு ஊடாக நாடகத்துறையில் காலடி வைக்கமுடிந்தது.பல்கலைக்கழகத்தில் படிக்கின்ற காலத்தில் பேராசிரியர் கா.சிவத்தம்பியிடம் கற்ற இலக்கியப் பார்வைகள் நான் பணிபுரிகின்ற பாடசாலையில் கலை நிகழ்ச்சிகளைச் செய்யும்போது பயன்படுகின்றன.பல்கலைக்கழகங்களில் தமிழைச் சிறப்புப் பாடமாக எடுப்போர் தொகை குறைவாக இருந்த காரணத்தினால், சிவத்தம்பி ஆசிரியருடன் நிறையக்கலந்துரையாடிக் கருத்துக்களைப் பெறக்கூடியதாக இருந்தது. அவருடன் அவ்வாறு கலந்துரையாடிப்பெற்ற அழகியல் பார்வைகள் எனக்கு இப்போது பல வழிகளில் பயன்படுகின்றன.

பெண்ணியம் சார்ந்த படைப்புக்களை எழுதியுள்ளீர்களா?
நான் எழுதிய "மருதத்திணை" என்ற நூலில் பெண்ணியம், சங்ககாலத்தில் இருந்து எவ்வாறு வளர்ந்து வந்திருக்கின்றது என்பதும் சாத்தியம். எவ்வாறு நோக்கப்பட்டிருக்கின்றது என்பது பற்றியதுமாக கருத்துக்களின் ஆய்வுகளின் சமூகவியற்பார்வையைச் சிவத்தம்பியிடம் பெற்றதன் பலன் என்றே கூறலாம்.பெண் எவ்வாறு காலங்காலமாக ஒடுக்கப்பட்டிருக்கின்றாள் என்பதையும், பொருளாதாரக் கட்டமைப்புக்களின் ஊடாக சாதியம் எவ்வாறு வளர்ச்சிபெற்று வந்தது என்பதையும், எனது "மருதத்திண" நூலின் மூலமாகக் கறிப்பிட்டுள்ளேன். அவ்வாறான எனது ஆய்வு முயற்சிக்குச் சிவத்தம்பி ஆசிரியரிடம் கற்றமை துணைபுரிந்தது.

தங்களுடைய இலக்கிய முயற்சியின் ஆக்கங்கள் பற்றி....?
சிறுகதைகளும் எழுதியுள்ளேன். தற்போதும் எழுதிவருகின்றேன். எனது தந்தையாரைப்போல எழுதுவதாகக் குறிப்பிடமுடியாது. "ஊனம்" என்ற கருத்தில், நான் எழுதிய முதலாவது சிறுகதை அமைந்துள்ளது.ஷெல்வீச்சில் இறந்த சிறுவனைப்பற்றியது அது. அக்கதையில் இறந்தவர் என்பதை மாற்றி ஒரு கால் ஊனம் அடைந்தவன் என்பதைக்குறிப்பிட்டுள்ளேன்.என்னுடைய சிறுகதைகள் பொதுவாக சமுதாயப்பார்வை உடையவையாகவே விளங்குகின்றன. "கொட்டில்" என்ற சிறுகதையை ஆசிரியராகப் பணிபுரிந்த காலத்தில் எழுதியுள்ளேன். அக்கதையில் தகப்பன், தான் வாழ்ந்த கொட்டிலை விற்கக்கூடாது என்ற நோக்கினை உடையவர். அவருடைய மகள் கொட்டிலை அகற்றவேண்டும். கொட்டில் பார்க்கிறதுக்கு ஒரு மாதிரி இருக்கிறது என்ற மனப்பாங்கு உடையவள், பழமையை பேணாமல், பழமையைத் தூக்கி எறிந்து புதுமையை விரும்புகிறவர்களுக்காக எழுதப்பட்ட அந்தக்கதை எனக்கு ஒரு மாணவி சொன்ன கதையாகும்.

"பாப்பாவுக்கு ஒருநாள் கழிந்தது" என்ற கதையில் புலமைப்பரிசில் பரீட்சையில் பிள்ளையைப் படிக்குமாறு எவ்வாறு பெற்றோர் வருத்துகிறார்கள் என்பதை விளக்கியுள்ளேன்.சமகாலத்தில் அரச, தனியார் போக்குவரத்து பஸ்களுக்கு இடையே நடக்கின்ற போட்டிகளை மையமாக வைத்து, எனது சொந்த அனுபவத்திலம் கதையை எழுதியுள்ளேன்.கவிதைகளைப் பொறுத்தளவில், நான் கவிதை நு}ல்தொகுதி எதையும் வெளியிடவில்லை. கவிதா நிகழ்வினை நான் கற்பிக்கும் பாடசாலையில் நிகழ்த்தி வருகின்றேன். கவிதைகளைப் பெருமளவில் எழுதிவைத்துள்ளேன். அவற்றை வெளியீடு செய்யவில்லை. அதைவெளியிட முயற்சி செய்கின்றேன்.புதுக்கவிதை மரபுக்கவிதை என்றும் இரு பிரிவுகளிலும் கவிதைகளை எழுதியுள்ளேன். இக்கவிதைகள் மாணவர் பிரச்சினை, சமகாலப்பிரச்சினை, போர் என்பவற்றை உள்ளடக்கமாகக் கொண்டுள்ளது.

நான் "இருகுயில்கள" என்ற ஒரு கவிதாநிகழ்வை அரங்கேற்றியிருந்தேன். பாரதியின் குயிற்பாட்டையும், பெண்ணியற் கருத்துக்களையும், புதுக்கவிதைகளையும் புகுத்தி ஒரு புதுவகை முயற்சியாக நான் அந்த நிகழ்வைச் செய்திருந்தேன்.இதன் காரணமாக, வழமையாக நாடகங்களைக் குழந்தை சண்முகலிங்கத்தைக் கொண்டு நடத்தியும், நெறிப்படுத்தியவர் தற்போது நாடகத்தை என்னிடமே ஒப்படைத்துள்ளார். அது ஒரு வகையில் மகிழ்ச்சிக்குரியது என்றபோதும், அவரோடு இணைந்து செய்த பணிதான் இன்று என்னை இவ்வளவு தூரம் நாடகம் ஒன்றை நெறிப்படுத்தும் அளவிற்குக் கொண்டுவந்துள்ளது. எனவே நன்றிக்கும், பெருமைக்கும் உரியவர் அவர் என்றே கூறவேண்டும். இப்போது நாடகப்பிரதி எழுதும் அளவிற்கு ஒரு துணிவு வந்துள்ளது. எனது அதிபரும் என்னை ஊக்குவித்தார். நான் நாடகப் பிரதியொன்றை எழுதியபோதும், சண்முகலிங்கம் ஆசிரியருடைய பாணியில், அவரிடம் இருந்தும் ஆலோசனைகளைப் பெற்றே எழுதுகின்றேன் என்பது குறிப்பிடத்தக்கது.

"சக்தி தன்னைக் கருவியாக்கு" என்ற பெயரில் நாடகப்பிரதியை எழுதினேன். இந்த நாடகத்தில் பெண்ணியல் தொடர்பான கருத்தினை முன்வைத்தேன். பெண்களை மூன்று நிலைகளில் வைத்து எழுதியுள்ளேன்."ரீன்ஏஜ்" வயதிலுள்ள பெண்கள் திருமணத்திற்காகக்காத்துக்கொண்டு காலம் தள்ளுகின்ற ஒருபெண், குடும்ப அமைப்பில் சென்று தான் ஒரு ஆசிரியராகவும் தன்கணவன் கடமைக்குச்செல்வதாகவும் இருக்கும்போது, பெண் எவ்வாறு குடும்பப் பொறுப்புக்களைப் பார்க்கின்றாள் என்ற வகையிலுமாக மூன்று பருவப்பிரச்சினைகளை எடுத்துக்காட்டி, எனது நாடகத்தை ஆக்கியுள்ளேன்.

சமகாலத்துப் பெண்ணிய எழுத்தாளர்கள் பற்றி என்ன கூற விரும்புகின்றீர்கள்?
பெண்ணியத்தைப் பற்றி என்னுடைய கருத்தில் நோக்குவது என்னவென்றால், குடும்ப அமைப்பு உடையாமலும், சமூகஅமைப்பு உடையாமலும் ஆண்களை விமர்சிப்பதாக மட்டுமே அமைந்ததும் அல்லாமல், மனிதம் என்ற பொதுமைக்குள் இருக்கும் அந்தப்பெண்மையையே பெண்ணியம் எனக்கருதுகின்றேன்.
இதைத்தான் நான் எனது "சக்தி தன்னைக் கருவியாக்கு" என்ற நாடகத்தில் வலியுறுத்தியுள்ளேன். பெண்கள் மனித முன்னேற்றத்திற்கு வழிசமைக்கும் வகையில் பயன்படுத்தக்கூடிய வகையில், செயல்புரிவதையே அந்த நாடகத்தின் மூலம் குறிப்பிட்டேன்.எனது தந்தையார், என்னுடைய கலைஇலக்கிய முயற்சிகளுக்குப் பெரிதும் ஒத்துழைப்பு வழங்கியுள்ளார். தனது துறையில் இன்னொருவர் வரவேண்டும் என்ற ஆதங்கம் அவருக்கு இருப்பதால், அவர் என்னைப் பல வழிகளிலும் ஊக்கப்படுத்தினார்.சமகாலத்தில் பெண்ணியம் தொடர்பாக எழுதுகின்ற எழுத்தாளர்கள், பெண்களின் பிரச்சினைகளை வெளிப்படுத்துகின்றார்கள். பெண்களின் உடல்ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் ஒடுக்கப்பட்டு வருவதைச் சித்திரிக்கின்றார்கள்.

பெண்களின் பிரச்சினைகளை நன்றாகவே விபரிக்கின்றார்கள். ஆனால் முடிவுகளைச் சொல்லும்போது பெண்கள் சமுதாயக் கட்டமைப்பு, குடும்பக் கட்டமைப்புக்களை உடைத்துக்கொண்டு வெளியே வர வேண்டும் என்பதான தீர்வினைத் தருகின்றார்கள்.இத்தகைய முடிவுகள் சமுதாயத்திற்கு என்ன பயனைத் தரப்போகின்றன என்பது தான் கேள்விக்குரிய விடயம்.அது சமுதாயத்துக்குப் பயன்தரும் வகையில் ஆண், பெண் பால்வேறுபாடுகள் களையப்படவேண்டும். பால் சமநிலை பேணப்படவேண்டும் என்பதே பெண்ணியம் தொடர்பாக எழுதுபவர்களுக்குக் கூறக்கூடிய விடயமாகும்.

உங்களுடைய எதிர்கால இலட்சியம் மற்றும் இலக்கிய முயற்சிகள் பற்றி ஆசிரியர் என்றரீதியில், மாணவர்களுக்கு நீங்கள் கூறவிரும்பும் கருத்துப் பற்றிக் கூறுங்கள்?
எதிர்காலத்தில் தமிழ் இலக்கிய வளர்ச்சியோடு இணைந்து கல்வியியலையும் கற்பது என்பது, பெண்ணியம் என்ற ஒரு வரையறைக்குள் இல்லாமல்கவிதை,கதை,நாடகங்களை அந்தந்த வரையறைக்கள் எழுதுவதும், என்னுடைய எதிர்காலத்திட்டங்களாகவுள்ளன.இசைத்துறையில், எனது சகோதரி இராமநாதன் அக்கடமியில் இசை பயிற்றுவிக்கிறார். ஒரு சகோதரி பாடசாலை ஆசிரியையாகவும் உள்ளார். எனது அப்பா ஒரு தமிழ் அறிஞர் என்பது அனைவருக்கும் தெரிந்த விடயமாகும்.

பாடசாலையில் ஆசிரியராக இருக்கும் காரணத்தால் - மாணவர்களுக்குச் சொல்வதற்கு நிறைய உண்டு. மாணவர்களிடையே நிறைய ஆற்றல்கள் இருந்தும், அவற்றை வெளிப்படுத்துகின்ற ஆர்வம் அவர்களிடையே குறைகின்றன என்பதே எனது கருத்து.மாணவர்களுக்குக் கிடைக்கவேண்டிய வாய்ப்புக்கள் கிடைக்கவில்லையே என்ற வருத்தத்தைக் காட்டிலும் - கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்தி, அதில் பலன்களை எவ்வளவு தூரம் பெறலாம் என்ற முயற்சியே. ஒருவருக்குத் தேவை. ஒரு கொள்கையில்தான் நான் எப்போதும் உறுதியாய் இருக்கின்றேன்.

நன்றி நமதுஈழநாடு(22-08-2003)

All rights Reserved for Webtamilan.com© (2002) [Used Font is Unicode]