என் சாளரத்தின் வெளியில் .. நீ
-ஆ. மணவழகன் : திண்ணை-
----
நான் உன்னைப் பார்க்கிறேன்..
நீ அழகாக இருக்கிறாய்!
மீண்டும் உன்னைப் பார்க்கிறேன்
நீ அழகாகவே இருக்கிறாய்!
மேகம் மூடிய நீ - வாழ்வின்
சோகம் சூடிய சுவடு என்றான்
ஒருவன்!
நீ தேய்வது ..
நிச்சயித்து நிரந்தரப்படுத்துவது - இப்புவியில்
ஏதுமில்லை என்பதால் என்றான்
ஒருவன்!
நீ வளர்வது..
வந்த துன்பம் வாழ்வில் என்றும்
நிலைப்பதில்லை என்பதால் என்றான்
ஒருவன்!
நீ தேய்வதும் தேய்ந்தும் வளர்வதும்
இன்ப துன்பத்தின் சமநிலை என்றான்
வாழ்ந்து பார்த்த
ஒருவன்!
தன்னுள் களங்கம் வைத்து - அது
உன்னுள்ளும் உள்ளதென்றான்..
வாழத்தெரிந்த
ஒருவன்!
இல்லாமல் போவது
உனக்கும் இருக்கிறதாம்
தேற்றிக்கொண்டான் - தன் தேவையுணர்ந்த
ஒருவன்!
உன்னை,
விட்டெறிந்த இட்லி என்றான்...
வெட்டிப் போட்ட நகம் என்றான்..
சுட்டெறிந்த அப்பளம் என்றான்..
வானிற்குத் தோன்றிய கொப்புளம் என்றான்..
தோழியர் சூழ வரும் மங்கை என்றான்..
தோழர் சூழ வரும் மன்னன் என்றான்..
---- ---- ---- என்றான்..
---- ---- ---- என்றான்..
எப்போதும் போல என் சாளரத்தின் வெளியில் நீ!
எல்லோரும் உன்னைப் பார்க்க - நீ
மட்டும் என்னைப் பார்க்கிறாய்!
நான் நிலவைப் பார்க்கிறேன் - அது
அழகாக இருக்கிறது - அது
அதுவாக இருக்கிறது!
***
ஆ. மணவழகன்
manavazhahan_arumugam@yahoo.com








0 கருத்துக்கள்:
உங்கள் கருத்துக்களை அனுப்ப Post a Comment
முகப்பு