www.webtamilan.com
Every thing that you want Information Technology E-Bussiness(Hosting,Domain Name Registration) Tamilealam Neethi Chat

விளையாட்டு செய்திகள்

ஒரு நாள் போட்டிகளுக்கு ஷேன் வார்ன் திரும்பலாம்!

திங்கள், 15 டிசம்பர் 2003
ஊக்கமருந்து எடுத்துக் கொண்டதற்காக 12 மாத தடை விதிக்கப்பட்டிருந்த ஷேன் வார்ன் பிப்ரவரி மாதம் ஒரு நாள் போட்டிகளுக்கு திரும்பலாம் என்று அவரது பயிற்சியாளர் டெர்ரி ஜென்னர் நேற்று அடிலெய்டில் தெரிவித்தார்.

நேற்று அதிகாரப்பூர்வமாக முதல் வலைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்தார் ஷேன் வார்ன். இயன்ஹீலி விக்கெட் கீப்பிங் செய்ய ஷேன் வார்ன் சில மணி நேரம் பந்து வீச்சு பயிற்சியில் ஈடுபட்டிருந்தார்.

இத்தகவல் ஷேன் வார்ன் என்னிடம் கூறியதல்ல என்று கூறிய டெர்ரி ஜென்னர், இது தனது எதிர்பார்ப்பே என்று கூறினார்.

முன்னதாக ஷேன் வார்ன் 2003 உலகக் கோப்பை முடிந்தவுடன் ஒரு நாள் சர்வதேசப் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறப்போவதாக கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

எது எப்படி இருப்பினும் மார்ச் மாதம் ஆஸி.யின் இலங்கை சுற்றுப்பயணத்தின்போது ஷேன் வார்ன் மீண்டும் சர்வதேச கிரிக்கெட்டிற்கு திரும்புவார் என்று நம்பலாம்.

அனுப்பியவர் வெப்தமிழன்

நிடினி 3 விக்கெட்! மே.இ. தீவுகள் திணறல்!!

செவ்வாய், 16 டிசம்பர் 2003
வெற்றி பெற 378 ரன்கள் தேவைப்படும் நிலையில் நேற்று 4ம் நாள் ஆட்ட முடிவில் மேற்கிந்திய அணி தனது 2வது இன்னிங்சில் 3 விக்கெட்டுகளை இழந்து 31 ரன்கள் எடுத்து திணறிக் கொண்டிருக்கிறது.

3 விக்கெட்டுகளையும் மகாயா நிடினி கைப்பற்றினார். முன்னதாக 151 ரன்கள் முதல் இன்னிங்சில் முன்னணி பெற்ற தென்ஆப்ரிக்கா தனது 2வது இன்னிங்சில் 6 விக்கெட் இழப்பிற்கு 226 ரன்கள் எடுத்து இன்னிங்சை முடித்துக் கொண்டதாக அறிவித்தது.

ஸ்மித், ரூடால்ஃப் காலிஸ் முறையே 44 ரன்கள் எடுத்தனர்.

மேற்கிந்திய அணி 2-வது இன்னிங்சில் களமிறங்கிய போது 10 ஓவர்கள் மீதமிருந்தன. ஹைன்ட்ஸ், ட்ரேக்ஸ் நிடினி பந்தில் பௌல்டு ஆக கங்கா நிடினி பந்தில் எல்.பி.டபிள்யூ. ஆனார்.

ஆட்ட முடிவில் லாரா பூஜ்யத்துடனும், சர்வான் 6 ரன்களுடனும் களத்திலிருக்கின்றனர். வெற்றி பெற மேற்கிந்திய அணிக்கு 347 ரன்கள் உள்ளது.

ஆட்ட நிலவரம் :

தென்ஆப்ரிக்கா - 561 மற்றும் 226 / 6 (டிக்ளேர்)

ஸ்மித் - 44
ருடால்ஃப் - 44
காலீஸ் - 44

பந்து வீச்சு :

ஹைன்ட்ஸ் - 2 /55
மே.இ. 410 மற்றும் 31/3
லாரா - 202
கங்கா - 60
நிடினி - 5 / 94 மற்றும் 3/12

அனுப்பியவர் வெப்தமிழன்

ஆஸ்ட்ரேலியாவை வென்றது இந்தியா!

செவ்வாய், 16 டிசம்பர் 2003
உலகின் தலைசிறந்த அணியாகக் கருதப்படும் ஆஸ்ட்ரேலியாவை அந்த மண்ணிலேயே 22 ஆண்டுகளுக்குப் பிறகு வென்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது இந்திய அணி!

அடிலெய்ட் ஓவலில் நடைபெற்ற இரண்டாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் ஆஸ்ட்ரேலிய அணியை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி வென்றது. இந்த வெற்றியின் மூலம் நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற வெற்றி கணக்கில் இந்திய அணி முன்னிலைக்கு வந்துள்ளது.

1981ம் ஆண்டு கவாஸ்கர் தலைமையில் ஆஸ்ட்ரேலிய சென்ற இந்திய அணி, மெல்பேர்னில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் ஆஸ்ட்ரேலிய அணியை வென்றது. அதற்குப் பிறகு இன்றுதான் ஆஸ்ட்ரேலிய அணியை அந்த மண்ணில் வென்று இந்திய அணி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

விக்கெட் ஏதும் இழக்காமல் 37 ரன்கள் எடுத்திருந்த இந்திய அணி, மேலும் 193 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இன்று காலை களமிறங்கிய இந்திய அணி மேலும் 11 ரன்கள் சேர்த்த நிலையில் ஆகாஷ் சோப்ராவை (20 ரன்கள்) இழந்தது.

அதன்பிறகு அதிரடியாக ஆடி அரை சதத்தை நெருங்கிக் கொண்டிருந்த வீரேந்திர ஷேவக் 47 ரன்கள் எடுத்திருந்தபோது ஆஸ்ட்ரேலிய அணியின் சுழற்பந்து வீச்சாளர் மெக்கில்லின் பந்தை தூக்கி அடிக்க முயன்று ஸ்டம்ப்ட் அவுட் ஆனார்.

79 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்திருந்த நிலையில் இணை சேர்ந்த திராவிடும், சச்சினும் பொறுமையாகவும், அதே நேரத்தில் அடிக்க வேண்டிய பந்துகளை அடித்தாடியும் ரன்களைக் குவித்து 150 ரன்களை நெருங்கிக் கொண்டிருந்த தருவாயில் சற்றும் எதிர்பாராத வண்ணம் மெக்கில்லின் பந்திற்கு எல்.பி.டபிள்யு. ஆகி 37 ரன்களுக்கு சச்சின் ஆட்டமிழந்தார்.

அடுத்து வந்த கங்குலி சிறிது நேரமே நீடித்தார். 12 ரன்கள் எடுத்திருந்த அவர் பிக்கலின் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.

திடீரென்று முதல் இன்னிங்சில் ஏற்பட்டதுபோன்ற ஒரு நெருக்கடி நிலை உருவானது. அப்பொழுது களமிறங்கிய வெங்கட்சாய் லக்ஷ்மண், அவருக்கே உரித்தான பாணியில் மெக்கில்லின் ஒரே ஓவரில் 3 பவுண்டரிகளை அடித்து நம்பிக்கையை ஏற்படுத்தியது மட்டுமின்றி, வேகமாக அடித்தாடி அணியின் எண்ணிக்கையை 200 ரன்கள் கடக்கச் செய்தார். தன் பங்கிற்கு திராவிடும் இரண்டு பவுண்டரிகளை அடித்து அரை சதத்தை எட்டினார்.

வெற்றி பெற 9 ரன்கள் மட்டுமே இருந்தபோது லக்ஷ்மண் ஆட்டமிழந்தார். அதன்பிறகு ஆட வந்த பார்த்தீவ் பட்டேல் வெற்றிக்கு ஒரு ரன் மட்டுமே தேவை என்ற போது ஆட்டமிழந்தார்.

அதன்பிறகு மெக்கில் வீசிய 25வது ஓவரின் 4வது பந்தை பவுண்டரிக்கு அடித்து வெற்றியை நிலைநாட்டினார் ராகுல் திராவிட். முதல் இன்னிங்சில் 223 ரன்களை எடுத்த ராகுல் திராவிட், இரண்டாவது இன்னிங்சில் 170 பந்துகளை எதிர்கொண்டு 7 பவுண்டரிகளுடன் 72 ரன்களை எடுத்து ஆட்டமிழக்காமல் பெவிலியன் திரும்பினார்.

இந்த டெஸ்ட் போட்டியின் ஆட்ட நாயகனாக ராகுல் திராவிட் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அனுப்பியவர் வெப்தமிழன்

கும்ளே 5 விக்கெட்! ஆஸ்ட்ரேலியா 556க்கு ஆட்டமிழந்தது!

ஒரே ஓவரில் ரிக்கி பான்டிங்கையும், அடுத்த ஆட வந்த பிராட் வில்லியம்ஸ், டூவர்ட் மெக்கில் ஆகியோரை ஆட்டமிழக்கச் செய்து ஆஸ்ட்ரேலிய அணியை 556 ரன்களுக்கு நிறுத்தினார் இந்தியாவின் சுழற்பந்து வீச்சாளர் அனில் கும்ளே!

பான்டிங்கு, கில்லஸ்பியும் இணைந்து 8-வது விக்கெட்டுக்கு 80 ரன்களை குவித்துவிட்ட நிலையில், ஆஸ்ட்ரேலிய அணி 600 ரன்களை தாண்டுமோ என்ற அச்சத்தோடு எதிர்பார்த்திருந்த நிலையில் ஒரே ஓவரில் இந்தியா எதிர்பார்த்திருந்த அந்த திருப்பத்தை கொண்டு வந்தார் அனில் கும்ளே.

ஆஃப் ஸ்டம்பிற்கு பிட்ச் ஆகி நன்றாக மேலெழும்பிய கும்ளேயின் பந்தினை ஸ்லிப் திசையில் தட்டிவிட முயன்றார் பான்டிங். ஆனால் பந்து அவரது மட்டையின் விளிம்பில் பட்டு மெலெழும்பிச் சென்றது. அதனை டிராவிட் பிடித்துவிட 242 ரன்கள் எடுத்திருந்த ரிக்கி பான்டிங் ஆட்டமிழந்தார்.

அவரைத் தொடர்ந்து ஆட வந்த பிராட் வில்லியம்ஸ், 3வது பந்திலேயே கும்ளேயின் கூக்ளிக்கு கிளீன் போல்ட் ஆனார். அடுத்து ஆட வந்த மெக்கில், கும்ளேயின் பந்தை தடுத்தாட முயன்று எல்.பி. டபிள்யூ ஆனார்.

அவ்வளவுதான் ஆஸ்ட்ரேலிய அணியின் முதல் இன்னிங்ஸ் 556 ரன்களுக்கு முடிந்தது.

அனுப்பியவர் வெப்தமிழன்

இலங்கை - இங்கிலாந்து : இலங்கை 214 ரன்கள் முன்னணி!

கண்டி கிரிக்கெட் டெஸ்ட்டில் இலங்கை 2வது இன்னிங்சில் சற்று முன் வரை 2 விக்கெட் இழப்பிற்கு 126 ரன்கள் எடுத்து 214 ரன்கள் முன்னணி வகிக்கிறது!

தில்ஷான் 60 ரன்களுடனும், ஜெயவர்தனே 21 ரன்களுடனும் களத்திலிருக்கின்றனர்.

முன்னதாக இங்கிலாந்து தனது முதல் இன்னிங்சில் நேற்று 294 ரன்களுக்கு சுருண்டது. முரளிதரன் 4 விக்கெட்டுகளும், வாஸ் 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

போட்டி : இலங்கை - இங்கிலாந்து
இடம் : கண்டி
பூவா-தலையா : இலங்கை

ஆட்ட நிலவரம் :

இலங்கை (முதல் இன்னிங்ஸ்) - 382
இல்ஷான் - 63
ஃபர்னான்டோ - 51 (அவுட் இல்லை)

பந்து வீச்சு - ஜைல்ஸ் - 5 / 116
பிளின்டாஃப் - 2/60

இங்கிலாந்து - 294 /10
த்ரோப் - 57
வான் - 52

பந்து வீச்சு
வாஸ் - 4/77
முரளிதரன் - 4/60



அனுப்பியவர் வெப்தமிழன்

கங்குலி சதம்! லக்ஷ்மண் அபாரம்! ஆஸி.க்கு இந்தியா சரியான பதிலடி!!

இந்திய அணித்தலைவர் சௌரவ் கங்குலியின் அற்புதமான சதமும், வெங்கட் சாய் லக்ஷ்மணின் அழகான ஆட்டமும், வீரேந்திர ஷேவக் கொடுத்த அதிரடித் துவக்கமும் ஆஸ்ட்ரேலிய அணிக்கு எதிர்பாராத, சரியான பதிலடியாக அமைந்தது!

ஆஸ்ட்ரேலியா அணிக்கு எதிராக பிரிஸ்பேன் போன்ற வேகமான ஆட்டக்களத்தில் 50 ஓவர்களாவது இந்திய அணி தாக்குப் பிடிக்குமா என்று கிண்டலாக சந்தேகம் எழுப்பியவர்களுக்கெல்லாம் தங்களுடைய திறனை முழுமையாக வெளிப்படுத்தி இந்திய அணி பதில் தந்து வாயடைத்துவிட்டது.

ஆஸ்ட்ரேலிய வேகப்பந்து வீச்சாளர்களின் பௌன்ஸர்களை தாக்குதல்களை தாங்குவாரா? அவர்களுடைய வேகப்பந்து வீச்சை தாக்குப் பிடிப்பாரா என்றெல்லாம் ஆஸ்ட்ரேலிய பத்திரிகைகள் விட்ட கட்டுக்கதைகளுக்கு அபாரமாக ஆடி சதமடித்து பதில் தந்தார் சௌரவ் கங்குலி.

ஆஸ்ட்ரேலிய அணியை 323 ரன்களுக்கு ஆட்டமிழக்கச் செய்த இந்திய அணி, தனது முதல் இன்னிங்ஸில் 4-வது நாள் ஆட்ட நேர இறுதியில் 6 விக்கெட்டுகளை இழந்து 362 ரன்களை எடுத்துள்ளது.

இன்று காலை இந்திய அணிக்கு ஒரு அதிரடியான துவக்கத்தை தந்தார் வீரேந்திர ஷேவக். 5 பௌண்டரிகளுடன் 51 பந்துகளில் 45 ரன்களை எடுத்த வீரேந்திர ஷேவக்கின் ஆட்டத்தின் உதவியால் முதல் விக்கெட்டிற்கு இந்திய அணி 61 ரன்களை எடுத்தது.

நடுவர் ஸ்டீவ் பக்னரின் தவறான முடிவு!

ஆனால், ஷேவக் ஆட்டமிழந்ததைத் தொடர்ந்து ஆட வந்த ராகுல் திராவிட், கில்லஸ்பி வீசிய அருமையான பந்திற்கு 1 ரன்னிலேயே ஆட்டமிழந்ததும், அதன் பிறகு ஆட வந்த சச்சின் டெண்டுல்கருக்கு நடுவர் ஸ்டீவ் பக்னர் தவறாக எல்.பி.டபிள்யூ கொடுத்து ஆட்டமிழக்கச் செய்ததும் இந்திய அணியை நெருக்கடியில் தள்ளியது.

ஆஃப் ஸ்டம்பிற்கு வெளியே பந்து சச்சின் டெண்டுல்கரின் பேடின் மேல் பகுதியை மட்டுமே தாக்கியது. விதிப்படி அதனை எல்.பி.டபிள்யூ முடிவிற்கு எடுத்துக் கொள்ள வேண்டிய அவசியமில்லை. அப்படியே எடுத்துக் கொண்டாலும் பந்து ஸ்டம்பின் உயரத்திற்கும் மேலே செல்லக் கூடியது என்பது தெளிவாகத் தெரிந்தது. அவ்வாறு இருந்தும் சச்சினுக்கு-மிகத் தாமதமாக-ஸ்டீவ் பக்னர் எல்.பி.டபிள்யூ கொடுத்தது சந்தேகத்தைக் கிளப்பியது.

சோப்ராவின் பொறுப்பான ஆட்டம்!

62 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்திருந்த நிலையில், ஆட வந்த அணித்தலைவர் கங்குலி, எவ்வித தயக்கமும் இன்றி அடித்தாட வேண்டிய பந்துகளை அடித்தாடி ரன்களைக் குவிக்கத் தொடங்கினார். மறுமுனையில், துவக்க ஆட்டக்காரர் ஆகாஷ் சோப்ரா மிகவும் நிதானித்து கங்குலிக்கு உறுதுணையாக நின்றாடினார்.

இவர்கள் இருவரும் இணைந்து அடுத்த 20 ஓவர்களில் 65 ரன்களை எடுத்து அணியை ஸ்திரப்படுத்தினர். அதுவரை மிக நன்றாகக் கணித்து ஆடிக் கொண்டிருந்த சோப்ரா, கில்லஸ்பியின் பந்தை முன்னால் சென்று தடுத்தாட முயன்றபோது, பந்து மட்டையின் விளிம்பைத் தொட்டுக் கொண்டு ஸ்லிப்பில் கேட்ச் ஆனது.

127 ரன்களுக்கு 4-வது விக்கெட்டை இழந்திருந்த நிலையில், லக்ஷ்மண் ஆட வந்தார். இவர்கள் இருவரும் ஆடும் ஆட்டத்தைப் பொறுத்தே இந்தியாவின் தலைவிதி அமையும் என்று உறுதியானது. ஆனால், இருவருமே எவ்வித சிரமமுமின்றி ஆஸ்ட்ரேலிய அணியின் பந்து வீச்சை நன்றாக எதிர்கொண்டு அடித்து ரன்களைக் குவிக்கத் தொடங்கினர்.

அடுத்த 34 ஓவர்களில் கங்குலியும், லக்ஷ்மணும் இணைந்து 5-வது விக்கெட்டுக்கு 146 ரன்களைக் குவித்தனர்.

சௌரவ் கங்குலி அருமையாக ஆடி 130 பந்துகளில் தனது 11-வது டெஸ்ட் சதத்தை எட்டினார். ஆஸ்ட்ரேலிய அணிக்கு எதிராக அவர் எடுத்த முதல் சதம் இது.

ஆனால், கங்குலி சதம் எடுத்த சிறிது நேரத்திலேயே லக்ஷ்மண் ஆட்டமிழந்தார். 113 பந்துகளை மட்டுமே எதிர்கொண்டு 11 பௌண்டரிகளுடன் 75 ரன்களை எடுத்த லக்ஷ்மண், மேக்கில்லின் பந்தை கட் செய்ய முயன்று ஆட்டமிழந்தார்.

சதமடித்த பிறகும் சௌரவ் கங்குலி, நிதானமாகவே ஆடி ரன்களை உயர்த்தத் தொடங்கினார். அடுத்து ஆட வந்த பார்த்தீவ் பட்டேலுடன் இணைந்து 6-வது விக்கெட்டுக்கு மேலும் 56 ரன்களைக் குவித்த பிறகு கங்குலி ஆட்டமிழந்தார்.

ஆஸ்ட்ரேலிய அணியின் இந்தியப் பயணத்தின்பொழுது சிறப்பாக பந்து வீசிய ஆன்டி பிக்கலை ஷேவக்கில் இருந்து கங்குலி, லக்ஷ்மண் வரை அனைவரும் வெளுத்துக் கட்டினர். 23 ஓவர்களை வீசிய பிக்கல், 118 ரன்களைக் கொடுத்துள்ளார்.

இந்திய அணித்தலைவர் கங்குலி 116 பந்துகளில் 18 பௌண்டரிகளுடன் 144 ரன்களை எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார்.

அதன் பிறகு இணை சேர்ந்த பார்த்தீவ் பட்டேலும், அஜித் அகார்கரும் கடைசி வரை நிதானமாக நின்றாடி அணியின் எண்ணிக்கையை 362 ரன்களுக்கு உயர்த்திய நிலையில், மைதானத்தில் போதுமான வெளிச்சம் இல்லாத காரணத்தினால் 4-வது நாள் ஆட்டம் கைவிடப்பட்டது.

இந்திய அணி நாளை 440 முதல் 450 ரன்கள் வரை குவிக்கும் என்று அணித்தலைவர் சௌரவ் கங்குலி நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.

அனுப்பியவர் வெப்தமிழன்

லாங்கர் சதம்! ஆஸ்ட்ரேலியா 262/2! (4 டிசம்பர் 2003 )
இந்தியா - ஆஸ்ட்ரேலியா பிரிஸ்பேன் டெஸ்ட் போட்டியில் முதல் நாளான இன்று ஆஸ்ட்ரேலிய 2 விக்கெட் இழப்பிற்கு 262 ரன்கள் எடுத்துள்ளது. ஜஸ்டின் லாங்கர் 115 ரன்கள் எடுத்து களத்திலிருக்கிறார்!

பூவா - தலையா வென்ற இந்தியா, ஆஸ்ட்ரேலிய அணியை பேட் செய்யப் பணித்தது. லாங்கர், ஹைடன் நிதானமாகத் துவங்கினர். நெஹ்ரா, ஜாகீர்கான், ட்ரைவ் சுலபமாக ஆடும் அளவில் முதலில் பந்து வீசினார்கள்.

லாங்கர் நெஹ்ரா பந்தில் கேட்ச் கொடுத்தார். ஆனால் அது நோ - பாலாக அமைந்தது. பிறகு ஜாகீர்கான் அபாரமாக வீசி பந்து மட்டைகளை கடந்து பல முறை சென்றது. ஆனால் விக்கெட் விழாமல் ஆஸ்ட்ரேலியா பக்கம் அதிர்ஷ்டம் நிரம்பியிருந்தது.

இரண்டு முறை லாங்கர் எல்.பி.டபிள்யூ.விற்கு அருகில் வந்தார். அது அவுட் என்றுதான் வர்ணனையாளர்கள் கூறினார்கள். ஆனால் ஸ்டீவ் பக்னர் மறுத்துவிட்டார்.

ஹைடன் 52 பந்துகளில் 37 ரன்கள் அடித்திருந்தபோது, ஜாகீர் பந்தில் லக்ஷ்மணிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். பான்ட்டிங் இறங்கி எதிர்கொண்ட முதல் பந்து மட்டைக்கும் கால் காப்பிற்கும் இடையே புகுந்து சென்றது.

அஜித் அகார்கர் முதல் ஓவரில் ஆஸ்ட்ரேலிய வீரர்களை திணறடித்தார். ஆனால் அதன்பிறகு 4 ஓவர்களில் 40 ரன்களை அள்ளி வழங்கினார். பந்தை நேராக மட்டைக்கு வீசி வாங்கிக் கட்டிக் கொண்டார் அகர்கர்.

ஆனால் ஒரு ஓவரில் பாண்டிங்கை 5 முறை பீட் செய்ததையும் குறிப்பிட வேண்டும்.

கும்ளேயை உட்காரவைத்து ஹர்பஜனுக்கு முன்னுரிமை அளித்த கங்குலி, நிச்சயம் தவறுக்கு வருந்தியிருப்பார். 14 ஓவர்களில் ஹர்பஜன் 68 ரன்களை கொடுத்தார். பந்து வீச்சில் ஃப்ளைட், டர்ன் எதுவும் இல்லை, மொன்னையாக நேர் நேர் பந்துகளை வீசிக் கொண்டிருக்கிறார் ஹர்பஜன்.

பாண்டிங்கிற்கு இந்தியா ரன்களை வழங்கியது என்றுதான் கூற வேண்டும். 52 ரன்கள் எடுத்த பாண்டிங், ஜாகீரின் பந்தை புல் ஆட முயன்று பார்த்தீவ் பட்டேலிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். ஆஸ்ட்ரேலியா - 162 / 2.

அதன்பிறகு லாங்கர், ஹர்பஜன் மீது தாக்குதலைத் தொடுத்தார். 175 பந்துகளில் 115 ரன்கள் எடுத்து லாங்கர் களத்திலிருக்கிறார். மார்ட்டின் 36 ரன்களுடன் விளையாடிக் கொண்டிருக்கிறார்.

மழையால் ஆட்டம் 1 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெறாததால் இந்தியா 62 ஓவர்களிலேயே இன்று வீச முடிந்தது.


அனுப்பியவர் வெப்தமிழன்

இலங்கை படுதோல்வி : இந்திய

புனேயில் நடைபெற்ற 2-வது கிரிக்கெட் டெஸ்டில், இந்தியா ஏ அணி ஓர் இன்னிங்ஸ் 92 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை ஏ அணியை படுதோல்விக்குள்ளாக்கியது.

இலங்கை முதல் இன்னிங்ஸில் 340 ரன்களும், தொடர்ந்து ஆடிய 2-வது இன்னிங்ஸில் 124 ரன்களும் சேர்த்தது.

இந்தியா தனது முதல் இன்னிங்ஸை 7 விக்கெட்டு இழப்பிற்கு 556 ரன்களைச் சேர்த்திருந்த போது டிக்ளேர் செய்தது.

இந்தியா ஏ தரப்பில் முனாஃப் பட்டேல் 3 விக்கெட்டுகளையும், பந்தாரி 2 விக்கெட்டுகளையும், முரளி கார்த்திக் 4 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார்கள்.

ஆட்ட நிலவரம் :

இலங்கை ஏ - 340 மற்றும் 124 (ஆல் அவுட்)

இந்தியா ஏ - 556/7 (டிக்ளேர்)


அனுப்பியவர் வெப்தமிழன்

அனைத்து உரிமைகளும் வெப்தமிழன்.கொம்© இற்குரியது(2002-2004)
 
[பாவனை செய்யப்பட்ட எழுத்துரு யுனிக்கோட]