புலிகளின் முடிவை நாம் மகிழ்ச்சியோடு வரவேற்கலாம்!
-மடிப்பகம் வலைப்பூ-
ராஜிவின் மரணத்துக்கு புலிகள் அமைப்பு மன்னிப்பு கேட்கிறது என்று புலிகள் அமைப்பின் அரசியல் ஆலோசகர் பேட்டி அளித்திருக்கிறார்....
மன்னிப்பு கேட்பது என்பது உயர்ந்தப் பண்பு.... தமிழன் எங்கேயும் தவறு செய்திருந்தால் மன்னிப்பு கேட்கத் தவறியதில்லை என்பது வரலாறு.... விடுதலைப்புலிகள் "மன்னிப்பு" என்ற வார்த்தையைப் பயன்படுத்தி இருப்பதன் மூலம் மிகவும் உயர்ந்திருக்கிறார்கள்.... தாழ்ந்து ஒன்றும் போய் விடவில்லை....
புலிகள் இப்போது இந்திய மனங்களை வென்றிருக்கிறார்கள் என்று சொன்னால் அது மிகையாகாது....
இந்தியாவே இந்த மாற்றத்தை எதிர்பார்க்கவில்லை என்பதே உண்மை.... இது இந்தியாவுக்கு கிடைத்த இன்ப அதிர்ச்சி தான்..... இன்னொரு விஷயம்.... இந்திய அரசின் ஒப்புதல் இல்லாமல் என்.டி.டி.வி புலிகளின் அரசியல் ஆலோசகரை பேட்டி கண்டிருக்க முடியுமா என்பதை கொஞ்சம் எண்ணிப் பார்க்க வேண்டும்.... புலிகளுக்கும் - இந்திய அரசுக்கும் பரஸ்பர நல்லெண்ணம் ஏற்படவே இந்தப் பேட்டி என்பதைப் புரிந்து கொள்ளலாம்....
இந்தியா இனியும் அமைதி காக்காமல் உடனடியாக இலங்கைப் பிரச்சினைக்கு (இராணுவரீதியாக அல்ல) பேச்சுவார்த்தைக்கு மத்தியஸ்தம் செய்ய வேண்டும் என்பதே இந்திய மக்களின் எதிர்பார்ப்பு.... புலிகளுக்கு எந்தவித அச்சுறுத்தலும் இல்லாத நியாயமான பேச்சுவார்த்தை நடத்த இலங்கை அரசை இந்தியா வற்புறுத்த வேண்டும்....
இந்திய மக்கள் இந்தப் பேட்டியை தாராளமாக வரவேற்கலாம்.... இதுவரை இந்தியாவில் ஈழத்தமிழரை ஆதரிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள் காண்பித்த நொண்டிச்சாக்கு "ராஜிவ் மரணம்".... இனி அவர்களால் இந்த நொண்டிச் சாக்கை சொல்ல முடியாது.... 1983ல் தமிழ்நாட்டிலும், இந்தியாவிலும் ஈழத்தமிழருக்கு ஆதரவாக இருந்த ஒரு அலையை ஆண்டன் பாலசிங்கம் இந்தப் பேட்டி மூலமாக மீண்டும் ஏற்படுத்தப் போகிறார் என்பது என் கணிப்பு.... சோ போன்றவர்கள் வாய்க்கு இனி அவல் இருக்காது.... வேறு அவல் வாங்கிப் போட்டுக் கொள்ள வேண்டியது தான்....
தமிழக அரசுத் தலைமையும் இனி எந்த நெருடலும் இன்றி மத்திய அரசை நெருக்கலாம்.... சோனியாவைப் பொறுத்தவரை ராஜிவின் மரணத்தை அவர் எப்போதே மறந்து மன்னிக்கத் தயாராகி விட்டார்.... நளினியின் கருணை மனுவை ஜனாதிபதி ஏற்றுக் கொள்ளவேண்டும் என்று சொன்னபோதே சோனியா தமிழருக்கு எதிரானவர் அல்ல என்பது புரிந்து விட்டது....
அமைதிப்படை செய்த பாவத்துக்கு புண்ணியம் தேடிக்கொள்ளவே சோனியா விரும்புவார்... அனேகமாக இந்திய அரசு நேரடியாக பேச்சுவார்த்தையில் தமிழருக்கு ஆதரவாக பங்கேற்கும் என்று தெரிகிறது... இதனால் அது அமெரிக்கா போன்ற நாடுகளின் பகையையும் சம்பாதிக்கவும் தயாராகி விட்டது என்றும் புரிந்துகொள்ளலாம்....
ஆனாலும், ஐ.நா. செயலர் பதவியை இலங்கை வேட்பாளர் பெற்று விட்டால் அது இந்தியாவுக்கும் சரி.... ஈழத்தவர்க்கும் சரி பின்னடைவாகவே முடியும்.... சசி தரூர் கேரளாவைச் சார்ந்தவர்.... ஈழத்தில் நடந்த பேரினவாத படுகொலைகளை நன்கு அறிந்தவர்....
இதுபோலவே இந்திய அரசும் கவுரவத்தை விட்டு அமைதிப்படையின் அராஜகத்துக்கு ஒருமுறை மனம் திறந்து மன்னிப்பு கேட்டால் எந்தவித மனஸ்தாபமும் இருக்காது என்பது எனது தனிப்பட்ட கருத்து....
தனி ஈழம் வெகு விரைவில் அமையும்.....








0 கருத்துக்கள்:
உங்கள் கருத்துக்களை அனுப்ப Post a Comment
முகப்பு