www.webtamilan.com
Every thing that you want Information Technology E-Bussiness(Hosting,Domain Name Registration) Tamilealam Neethi Chat
Home Page Go to the Previous page

-வி.வி.ஐ.பி.க்களின் சாய்ஸ்(14.11.2001இல் எழுதப்பட்டது)

என்னதான் கொம்பு முளைத்தவர்களென்றாலும் எல்லோருக்குள்ளுமே ஒரு 'சின்னச்சின்ன ஆசை' இருக்கத்தானே செய்யும். அதுவும் தீபாவளி ரிலீஸ் படங்களைப் பார்க்க மற்றவர்களைப் போலவே இவர்களுக்கும் விருப்பம் இருக்கலாமே. சில வி.வி.ஐ.பி.க்களை சந்தித்து (கற்பனையில்தான்!) இந்த தீபாவளிக்கு ரிலீஸாகலாம் என்ற நிலையில் உள்ள எந்தப் படத்தைப் பார்க்க ஆசைப்படுகிறீர்கள்? என்ற கேள்வியைக் கேட்டோம்.

ஒசாமா பின்லேடன்:

''ஆளவந்தான் படம்தான் என் சாய்ஸ். டைட்டிலே சுண்டியிழுக்குது. என்னைப் பற்றிய படமாத்தான் இருக்கும்னு நினைக்கிறேன். ஒரு பாட்டு வேற சூப்பர். 'கடவுள் கொன்று இரையாய்த் தின்று மிருகம் மட்டும் வளர்கிறதே'. அழகான வரிகள். தவிர நெகடிவ் ரோல் செய்யும் கமலுக்குதான் படத்திலே முக்கியத்துவம்கிறதும், அவர்தான் பேசப்படுவார்ங்கிறதும் அற்புதமான விஷயங்கள். படம் மட்டும் எனக்குப் பிடிச்சிருந்தால் 'அமெரிக்காவுக்கு அடுத்தது இஸ்ரேலும் இந்தியாவும்தான் என் குறி'ன்னு சொன்னதைக் கொஞ்சம் மாத்திக்குவேன். இந்தியாவை நாலாவது இடத்துக்குத் தள்ளிவிட்டு வேறே ஏதாவது நாட்டை ஹிட் லிஸ்டிலே மூணாவதா சேத்துக்குவேன்.''


ஸ்டாலின்:

''ஆண்டான் அடிமைன்ற படத் தலைப்பு எவ்வளவு அழகாக நடப்பைப் படம் பிடிச்சுக் காட்டுது! அதாவது ஒரு காலத்தில் உலகையோ அல்லது அதில் ஒரு பகுதியையோ ஆண்டவங்ககூட சூழ்நிலையாலே அடிமை மாதிரி நடத்தப்படற நிலை வரலாம் இல்லையா? சத்யராஜ் படம்கிறதாலே ஸ்டண்ட் காட்சிகள் இருக்கும். தாராளமா இருக்கட்டும். ஆனால் 'கராத்தே' ஸ்டண்ட் மட்டும் வேணாம். 'ரசிகர்களுக்கும் எங்களுக்கும் ஒரு நல்ல பாலமாக இந்தப் படம் விளங்கும்னு' டைரக்டர் சொன்னது மட்டும் கொஞ்சம் உறுத்துது. 'பாலமாக'ன்ற வார்த்தைக்குப் பதில் 'பிணைப்பாக'ன்ற வார்த்தையைப் பயன்படுத்தியிருக்கலாம்.''

முஷ்ரஃப்:

''ஷாஜஹான்தான் என் சாய்ஸ். என்ன ஒரு அழகான முஸ்லிம் பெயர்! தவிர அவன் நிலையும் எனக்குக் கண்ணிலே நீரை வரவழைக்குது. எவ்வளவு அற்புதமான மாளிகையைக் கட்டினான் அவன். ஆனா பாவம் கடைசியாய் சிறையிலே சாகும்படி ஆனதே. மத்தளம் மாதிரி இப்படி இடி வாங்கிக்கிட்டு ஷாஜஹான் மாதிரி வாழ்வது எவ்வளவு கஷ்டம்கிறது என்னைப் போன்றவர்களுக்குத்தான் தெரியும். விஜய்க்கு இதிலே ஒரே ரோலாமே. அதிலதான் கொஞ்சம் வருத்தம். ரெட்டை வேஷம் போட்டிருந்தா எனக்கு ரொம்ப அப்பீலாகியிருக்கும். ஐயையோ! ஒரு முக்கிய வார்த்தையைச் சொல்லாமலேயே நாலு வாக்கியம் பேசிட்டேனே. இப்ப அதை ரெண்டு தடவை சொல்லி சரி செய்துடறேன். காஷ்மீர், காஷ்மீர்.''

கோவிந்தவாசன்:

'உண்மையான தவம்கிறது எப்படியிருக்கணும். சுற்றுப்புறத்தைப் பற்றியே கவலைப்படக் கூடாது. இடி இடிச்சாலும் சரி, பாம்பு உடம்புலே ஊர்ந்தாலும் சரி, மோனத்திலேயே இருக்கணும். அதுதான் நல்லது. எங்கப்பாகிட்டேயிருந்து எனக்குத் தானா வந்த பாடம் அது. அதனாலே 'தவசி'ன்ற தலைப்பே என்னைப் படம் பார்க்கத் தூண்டுது. பஞ்சாயத்துத் தலைவரா வந்து விஜயகாந்த் தீர்ப்பெல்லாம் சொல்றாராமே. தலையை ஆட்டியே தீர்ப்பு சொல்ல முடியாதா என்ன? வார்த்தைகளை எதுக்கு வேஸ்ட் செய்யணும்? 'என் வழியே தனிவழி'ன்றது எங்களுக்கு ஒரு காலத்திலே பிடிச்சிருந்ததுதான். இப்பவும் அதேதான். ஆனா என் வழின்றது அம்மா வழின்னு ஆயிடுச்சு.'

சோ:

''ரொம்ப நாளாச்சு தமிழிலே நல்ல நகைச்சுவைப் படம் வந்து. ஏன்னா நான் நடிப்பதை கிட்டத்தட்ட நிறுத்திட்டேனே. 'நந்தா' ஒரு நல்ல காமெடி படமாக இருக்கும்னு நினைக்கிறேன். மனநிலை சரியில்லாதவனை மையமா வச்சு முதல் படத்தை இந்த டைரக்டர் செய்தவர்ன்றதாலே இது காமெடி படமாத்தான் இருக்கணும். மாறி மாறி முடிவெடுத்து பாலன்ஸ் செய்வதுதானே புத்திசாலித்தனம். இலங்கை அகதியாக கதாநாயகியாம். அப்படின்னா கிட்டவே சேர்த்துக்கக் கூடாதில்லையா? ஆனா இந்த ஹீரோ அவளை விரும்புவான்னு தெரியுது. காமெடி! போதாக்குறைக்கு அவன் தாய்ப்பாசத்துக்கு ஏங்குபவனாம். தாயும் ஒரு பெண்தானே. பெண்களுக்குப் போய் பெரிய மதிப்பெல்லாம் வைப்பது எவ்வளவு பெரிய காமெடி!''

வாஜ்பாய்:

''மனதைத் திருடிவிட்டாய்-ஆஹா, எவ்வளவு கவிதைத்துவமான தலைப்பு இது. பிரம்மச்சாரியான எனக்குதான் இதன் அருமை தெரியும். உவமானமாகப் பார்த்தால் முஷ்ரஃப் என் மனதைத் திருடினார். லாகூருக்கு பஸ் அனுப்பினேன். ஆனால் கார்கிலில் தன் திருட்டுத்தனத்தைக் காட்டினார். ஆர்.எஸ்.எஸ். என் மனதைத் திருடின இயக்கம். எனவே ஐ.நா.சபையில 'நான் முதலில் ஸ்வயம்சேவக்' என்றேன். இதனாலே நான் முஸ்லிம் விரோதின்னு சொன்னாங்க. இதனாலே இனிமே என் மனதை யாரிடமும் கொள்ளை போகவிடக் கூடாதுன்றதிலே குறியாயிருந்து என் வேலையைப் பார்த்து நடந்துக்கிட்டிருப்பேன். ஆனா அப்படி நடக்கிறதுக்குக் காரணமான டாக்டர் ரணாவத் என் மனசைக் கொஞ்சத் திருடிக்கிட்டாரே! அது மட்டும் விதிவிலக்கு.''

பன்னீர்செல்வம்:

''அடக்கம்னு சொல்லுங்க, ஒடுக்கம்னு சொல்லுங்க. நடுக்கம்னு சொல்லுங்க, என்னைப் பொருத்தவரை அம்மாதான் எல்லாமே. 'பார்த்தாலே பரவசம்'. அதே தலைப்பு கொண்ட படம்தான் என் சாய்ஸ். ஆனா ஒண்ணு, ஒவ்வொரு முறையும் அம்மா முன்னே விழத் தோணுதே தவிர, பாண்டுரங்கன் மாதிரி அவங்களைப் பார்க்கும்போதெல்லாம் கன்னத்திலே போட்டுக்கணும்னு நினைக்கிறது மட்டும் அப்போ ஞாபகத்துக்கு வரமாட்டேங்குது. பரவசத்திலே எல்லாமே மறந்துடுது. அடடா; நாலு... வாக்கியம் பேச வச்சுட்டீங்களே! தப்பு தப்பு (தோட்ட திசையைப் பார்த்து மறக்காமல் கன்னத்தில் போட்டுக் கொள்கிறார்)

-ஜி.எஸ்.எஸ். 14.11.2001
நன்றி அம்பலம்.கொம்

All rights Reserved for Webtamilan.com© (2002) [Used Font is Unicode]