www.webtamilan.com
Every thing that you want Information Technology E-Bussiness(Hosting,Domain Name Registration) Tamilealam Neethi Chat
Home Page Go to the Previous page  

சர்வ கட்சிகளின் சந்தையாகிவிட்ட வடக்கு கிழக்கு தேர்தல் களம்

வடக்கு கிழக்கு மாகாணம் எட்டு நிர்வாக மாவட்டங்களைக் கொண்டபோதிலும் ஐந்து தேர்தல் மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்கள் ஒன்றிணைக்கப்பட்டு யாழ்ப்பாண தேர்தல் மாவட்டமாகவும், வவுனியா, மன்னார், முல்லைத்தீவு ஆகிய மூன்று மாவட்டங்களும் ஒன்றிணைக் கப்பட்டு வன்னித்தேர்தல் மாவட்டமாகவும் உருவாக்கப்பட்டுள்ளன. கிழக்கு மாகாணத் திலுள்ள திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய நிர்வாக மாவட்டங்கள் தனித்தனி தேர்தல் மாவட்டமாக உள்ளன.

எதிர்வரும் பொதுத்தேர்தலில் 2002ஆம் ஆண்டு வாக்காளர் அட்டவணைப்படி 17 லட்சத்து 56 ஆயிரத்து 362 பேர் வாக்களிக்கத் தகுதிபெற்றுள்ளனர். வடமாகாணத்தில் 9 இலட்சத்து 7 ஆயிரத்து 279 பேரும் கிழக்கு மாகாணத்தில் 8 இலட்சத்து 51 ஆயிரத்து 83 பேரும் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

யாழ்ப்பாண மாவட்டத்தில் 62,4479 பேரும், திகாமடுல்ல (அம்பாறை)மாவட்டத்தில் 37,9044 பேரும் மட்டக்களப்பு மாவட்டத்தில் 30,3928 பேரும் வன்னி மாவட்டத்தில் 22,6604 பேரும் திருமலை மாவட்டத்தில் 22,4307 பேரும் எதிர்வரும் நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் வாக்களிக்கத் தகுதிபெற்றுள்ளனர்.

வடக்கு கிழக்கு மாகாணத்தில் 31 உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்படவுள்ளார்கள். யாழ்ப்பாண மாவட் டத்தில் 9 பேரும், திகாம டுல்ல மாவட்டத்தில் 7 பேரும் வன்னி மாவட்டத்தில் 6 பேரும் மட்டக்களப்பு மாவட்டத்தில் 5 பேரும் திருமலை மாவட்டத்தில் 4 பேரும் தெரிவுசெய்யப்பட வுள்ளனர். வடக்கு மாகாணத் தில் 15 நாடாளுமன்ற உறுப்பினர்களும், கிழக்கு மாகாணத்தில் 16 நாடாளு மன்ற உறுப்பினர்களும் தெரிவு செய்யப்படவுள்ளனர்.

வடக்கு கிழக்கு மாகாணத் தில் 17 அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளையும் 5 சுயேச்சைக்குழுக்களையும் சேர்ந்த 989 வேட்பாளர்கள் களத்தில் குதித்துள்ளனர்.

யாழ்ப்பாண மாவட்டத்தில் எட்டு அங்கீகரிக் கப்பட்ட அரசியல் கட்சிகளும் இரண்டு சுயேச் சைக்குழுக்களும் போட்டியிடுகின்றன. ஆனால் இலங்கை தமிழரசுக் கட்சி, ஈ.பி.டி.பி, தமிழர் விடுதலைக்கூட்டணி தலைவர் வீ.ஆனந்தசங்கரி தலைமையிலான சுயேச்சைக்குழு என்பவற்றிற் கிடையில் போட்டி நிலவுவதாக களநிலைக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.

வன்னித்தேர்தல் களத்தில் பத்து அங்கீகரிக்கப் பட்ட அரசியல்கட்சிகளும் ஒன்பது சுயேச்சைக் குழுக்களும் போட்டியிடுகின்றன. எனினும் களநிலவரங்களின்படி இலங்கை தமிழரசுக் கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி, ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி என்பவற்றுக்கிடையில் போட்டி நிலவுகின்றது.

திருமலை மாவட்டத்தில் பத்து அங்கீகரிக்கப் பட்ட அரசியல்கட்சிகளும் ஆறு சுயேச்சைக் குழுக்களும் போட்டியிட்டாலும் இலங்கை தமிழரசுக் கட்சி, சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஐக்கிய தேசிய கட்சி, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி என்பவற்றிற்கிடையில் கடுமையான போட்டி நிலவுவதாக தேர்தல் கள நிலவரங்கள் குறிப்பிடுகின்றன.

மட்டக்களப்பு மாவட்டத்தில் 14 அங்கீகரிக்கப் பட்ட அரசியற்கட்சிகளும் எட்டு சுயேச்சைக் குழுக்களும் போட்டியிடுகின்றபோதிலும் இலங்கை தமிழரசுக் கட்சி, சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி என்பவற்றுக்கிடையில் போட்டி நிலவுகின்றது.

திகாமடுல்ல மாவட்டத்தில் 14 அங்கீகரிக்கப் பட்ட அரசியல்கட்சிகள் 27 சுயேச்சைக் குழுக்க ளையும் சேர்ந்த வேட்பாளர்கள் களத்தில் இறங்கி யுள்ளபோதிலும் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, ஐக்கிய தேசியக் கட்சி, இலங்கை தமிழரசுக் கட்சி என்பவற்றிற்கிடையில் போட்டி நிலவுவதாக கள நிலவரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த மாவட்டமே பலத்தபோட்டி நிலவும் மாவட்டமாக உள்ளது. இங்கு 410 வேட்பாளர் கள் போட்டியிடுகிறார்கள். சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம், "நுஆ' தலைவி பேரியல் அஷ்ரப், சுகாதார அமைச்சர் பி.தயாரத்ன, பிரதியமைச்ச ராகவிருந்த அதாவுல்லா ஆகியோருக்கு முக்கிய பரீட்சைக்களமாகவுள்ளது. குறிப்பாக சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்கு கௌரவப்பிரச்சி னையாக இத் தேர்தல் அமைகிறது.

அதேபோல ஈ.பி.டி.பி. செயலாளர் நாயகமும் முன்னாள் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா, தமிழர் விடுதலைக் கூட்டணி தலைவர் வீ.ஆனந்தசங்கரி ஆகியோர் யாழ்.மாவட்டத்தி லும் ரெலோ தலைவர் செல்வம் அடைக்கல நாதன், புளொட் தலைவர் த.சித்தார்த்தன் ஆகியோர் வன்னியிலும், தமிழர் விடுதலைக் கூட்டணி செயலாளர் நாயகம் ஆர்.சம்பந்தன் திருமலை மாவட்டத்திலும் தமிழர் விடுதலைக் கூட்டணி சிரேஷ்ட உபதலைவர் ஜோசப் பரராஜசிங்கம், முன்னாள் பிரதியமைச்சர்களான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், பஷீர் சேகுதாவூத் ஆகியோர் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடுகிறார்கள்.

இலங்கை தமிழரசுக் கட்சி, ஈ.பி.டி.பி., புதிய இடதுசாரி முன்னணி, ஜாதிக ஹெல உறுமய, றுகுணு மக்கள் கட்சி ஆகிய கட்சிகள் வடக்கு கிழக்கின் சகல மாவட்டங்களிலும் போட்டியிடு கின்றன. ஐக்கிய தேசியக் கட்சி, ஐக்கிய மக்கள் சுதந்திரமுன்னணி என்பன யாழ்.மாவட்டம் தவிர்ந்த சகல மாவட்டங்களிலும் போட்டியிடு கின்றன. சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி வன்னியில் ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்தும் ஏனைய மாவட்டங்களில் தனித்தும் போட்டியிடுகின்றன. ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி வன்னி, மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் போட்டியிடுகின்றது.

இம்முறை தேர்தலில் பெண் வேட்பாளர்களும் அதிகளவில் போட்டியிடுவது முக்கிய அம்சமாகும். திகாமடுல்ல மாவட்டத்தில் திருமதி பேரியல் அஷ்ரப், தமிழரசுக் கட்சி சார்பில் மட்டக்களப்பு மாவட்டத்தில் செல்வி தங்கேஸ்வரி கதிராமன், யாழ் மாவட்டத்தில் பத்மினி சிதம்பரநாதன் ஆகியோர் முக்கியமான வேட்பாளர்கள் ஆவர். 1989 ஆம் ஆண்டிற்குப் பின்னர் தமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழரசுக் கட்சியில் இரண்டு முஸ்லிம் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றார்கள். திருமலை மாவட்டத் தில் அப்துல் ஹசன் சாஹுல் ஹமீட், வன்னியில் நுர்முகமட் அப்துல் சஜானி ஆகியோர் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.

வடக்கு கிழக்கு மாகாணத்தில் திகாமடுல்ல மாவட்டத்தில் 2 அடி 4 அங்குல நீளமான வாக்குச் சீட்டு அச்சிடப்பட்டுள்ளது. இலங்கையில் நீளமான வாக்குச்சீட்டு இது என்பது குறிப்பிடத் தக்கது.

வடக்கு கிழக்கு மாகாணம் இதுவரை பன்னிரண்டு பொதுத்தேர்தல்களைச் சந்தித் துள்ளது. இதில் நான்கு தேர்தல்கள் விகிதாசார பிரதிநிதித்துவத்தின் கீழ்நடைபெற்றன.

1989 பெப்ரவரி 15 இல் நடைபெற்ற முதலாவது விகிதாசார தேர்தலில் ஈரோஸ் ஆதரவு சுயேச்சைக்குழு மாவட்ட மட்டத்தில் 12 ஆசனங்களையும் தேசியப் பட்டியலில் ஒரு ஆசனத்தையும் பெற்று பிரதான கட்சியாக திகழ்ந்தது, தமிழர் விடுதலைக்கூட்டணி மாவட்ட மட்டத்தில் ஒன்பது ஆசனங்களையும் தேசியப் பட்டியலில் ஒரு ஆசனத்தையும், சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்கட்சி மாவட்ட மட்டத்தில் மூன்று ஆசனங்களையும் தேசியப்பட்டியலில் ஒரு ஆசனத்தையும் பெற்றது. ஐக்கிய தேசிய கட்சி ஐந்து ஆசனங்களையும் சிறீலங்கா சுதந்திரக்கட்சி ஒரு ஆசனத்தையும் வடக்குகிழக்கில் பெற்றன.

1994 ஆகஸ்ட் 16 இல் நடைபெற்ற தேர்தலில் ஈ.பி.டி.பி. சுயேச்சைக்குழு 9 ஆசனங்களை வென்று நாடாளுமன்றத்தில் தமிழர் தரப்பில் ஆகக்கூடிய உறுப்பினர்களைக் கொண்டிருந்தது. தமிழர் விடுதலைக்கூட்டணி மாவட்ட மட்டத்தில் 4 ஆசனங்களையும் தேசியப்பட்டியலில் ஒரு ஆசனத்தையும் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி மாவட்ட மட்டத்தில் 6 ஆசனங்களையும் தேசியப்பட்டியலில் ஒரு ஆசனத்தையும் புளொட் மூன்று ஆசனங்களையும் பெற்றன. தேசியக் கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சி 7 ஆசனங்களை யும் பொதுஜன ஐக்கிய முன்னணி இரு ஆசனங்களையும் பெற்றன.

2000 அக்டோபர் 10ஆம் திகதி நடைபெற்ற தேர்தலில் தமிழர் விடுதலைக்கூட்டணி ஐந்து ஆசனங்களையும் ஈழமக்கள் ஜனநா யகக் கட்சி 4 ஆசனங்களையும் ""நுஆ'' இரண்டு ஆசனங் களையும் மாவட்ட மட்டத் திலும் ஒரு ஆசனத்தை தேசியப்பட்டியலிலும் பெற்றன.

அதேவேளை ரெலோ மூன்று ஆசனங்களையும் அகில இலங்கை தமிழ்க் காங்கி ரஸ் கட்சி. அம்பாறை மாவட்ட சுயேச்சைக் குழு என்பன தலா ஒவ்வொரு ஆசனத்தையும் வென்றன. தேசிய கட்சிகளான பொது ஜன ஐக்கிய முன்னணி 9 ஆசனங்க ளையும் ஐக்கிய தேசியக் கட்சி ஆறு ஆசனங்களையும் பெற்றன.

2001 டிசம்பர் 5ஆம் திகதி நடைபெற்ற தேர்த லில் தமிழ் தேசிய கூட்டமைப்பு 14 ஆசனங்க ளையும், ஈ.பி.டி.பி. இரண்டு ஆசனங்களையும் புளொட் ஒரு ஆசனத்தையும் பெற்றன.

தமிழ் தேசிய கூட்டமைப்பு, சிறீலங்கா முஸ் லிம் காங்கிரஸ் கட்சி என்பன தேசியப்பட்டியலில் தலா ஒவ் வொரு ஆசனத்தைப் பெற்றன. தேசியக் கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சி 6 ஆசனங்களை யும் பொதுஜன ஐக்கிய முன் னணி நான்கு ஆசனங்களையும் பெற் றது குறிப்பிடத்தக்கது.

வடக்கு கிழக்கு மாகாணத் திலுள்ள 31 ஆசனங்களில் தேசி யக் கட்சிகள் கணிசமான ஆச னங்களைப் பெற்று வருகின்றன.

1989 இல் 7 ஆசனங்களை யும் 1994 இல் 9 ஆசனங்களை யும் 2000ஆம் ஆண்டு 15 ஆசனங்களையும் கடந்த தேர்த லில் 10 ஆசனங்களையும் பெற் றமை குறிப்பிடத்தக்கது.

எதிர்வரும் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வடக்கு கிழக்கில் 20க்கு குறையாத ஆச னங்களைப் பெறுமென ஆரம்ப கணிப்பீடுகள் கூறியிருந்தன. ஆனால் நியமனப்பத்திரம் தாக் கல் செய்வதற்கு முன்னர் தமிழர் விடுதலைக் கூட்டணி தலைவர் வீ.ஆனந்தசங்கரிக்கும் கட்சியின் பெரும்பாலான செயற்குழு உறுப்பினர் களுக்குமிடையில் ஏற் பட்ட விரிசலும் தற்போது மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களில் கேணல் கருணா அம்மான் விவகாரமும் தேர்த லில் பிரதிபலிப்புகளை ஏற்படுத்தலாமென அஞ்சப்படுகிறது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு யாழ்.மாவட்டத் தில் கூட்டணி தலைவர் ஆனந்தசங்கரி தலைமை யிலான சுயேச்சைக்குழுவுடனும், ஈ.பி.டி.பி.யுட னும் கடுமையாக மோதவேண்டிய நிலையில் உள்ளதால் ஆறு அல்லது ஏழு ஆசனங்களையே பெறலாமெனக் கணிப்பீடுகள் தெரிவிக்கின்றன.

வன்னியில் நான்கு ஆசனங்களும் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேச வாக்காளர்கள் வாக்களித்தால் ஐந்து ஆசனங்களையும் பெறக் கூடிய வாய்ப்பு இருப்பதாக தமிழ்தேசிய கூட்டமைப்பு எதிர்பார்க்கிறது.

கிழக்கு மாகாணத்தில் ஐந்து ஆசனங்களைப் பெறக்கூடிய பிரகாசமான வாய்ப்புள்ளது. விடுத லைப்புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேச வாக்கா ளர்கள் வாக்களிக்கும் பட்சத்தில் இரு ஆசனங் களை அக்கட்சி பெற வாய்ப்புக் கிட்டுமென கூட்டமைப்பு எதிர்பார்க்கிறது.

சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி கிழக்கு மாகாணத்திலும் யாழ்.மாவட்டத்திலும் வன்னி யில் ஐக்கிய தேசியக் கட்சியுடனும் இணைந்து போட்டியிடுகிறது.

திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் கடுமையாக மோதுவதால் எந்தக்கட்சி ஆகக்கூடிய வாக்கு களை பெறுமென ஆருடம் கூறமுடியாத நிலையே உள்ளது.

எனினும் அங்கு இரண்டு ஆசனங்களை நிச்ச யம் வெல்லக்கூடிய களநிலைமை உள்ளது. மட்டக்களப்பு திருமலை வன்னி மாவட்டங்களில் தலா ஒவ்வொரு ஆசனங்களை வெல்லக்கூடிய சாத்தியமுள்ளது. களநிலையில் ஏற்படக்கூடிய மாற்றங்களை பொறுத்து அதிகரிக்கலாம்.

ஈ.பி.டி.பி.க்கு யாழ்ப்பாண மாவட்டத்தில் மட்டும் ஆசனங்களைப்பெறக்கூடிய பிரகாசமான வாய்ப்பு உள்ளது.

ஐக்கிய தேசியக்கட்சி அம்பாறை, திருமலை மாவட்டங்களிலும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அம்பாறையில் ஆசனங்களைப் பெறக்கூடிய வாய்ப்புள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் மக்களது வாக்களிப்பு வீதம் குறைந்தால் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஒரு ஆசனத்தை கைப்பற்றும் வாய்ப்புள்ளது.

எனினும் ஈ.பி.டி.பி. முதன்மை வேட்பாளர் அ.இராஜமாணிக்கம் தமது கட்சி ஒரு ஆசனத்தை வெல்லுமென்ற உறுதியோடு இருப்பதாக ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

எது எப்படியிருப்பினும் புலிகள் தலைமை கிழக்கின் முன்னாள் தளபதி கேணல் கருணா அம்மானை நீக்கிய விவகாரம் மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களில் தமிழ்தேசிய கூட்டமைப்புக்கு பின்னடைவை ஏற்படுத்து மென்றே எதிர்பார்க்கப்படுகிறது.

தேர்தல் நெருங்கும்போது கருணா அம்மான் விவகாரம் தணிந்துவிடுமென்று கூட்டமைப்பு வேட்பாளர்களில் பலருக்கு நம்பிக்கை உண்டு.

இதைவிட புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசங் களை சேர்ந்த 24,9741 வாக்காளர்கள் வாக்களிப் பதற்கான வாய்ப்புக்கள் எந்தளவுக்கு வழங்கப் படுமென்பதிலும் தமிழ்தேசிய கூட்டமைப்பு பெறுபேறு பெரிதும் தங்கியுள்ளது.

வடக்கு கிழக்கு மாகாணத்தில் விகிதாசார பிரதிநிதித்துவத்தின் கீழ் நடைபெற்ற தேர்தல் முடிவுகள்

தேனாடான்

நன்றி:வீரகேசரி

All rights Reserved for Webtamilan.com© (2002) [Used Font is Unicode]