www.webtamilan.com
Every thing that you want Information Technology E-Bussiness(Hosting,Domain Name Registration) Tamilealam Neethi Chat

சினிமா செய்திகள்

டிஸ்யூம்

காதலில் மட்டுமே முரண்பாடுகள் உடன்பாடுகளாகும் சாத்தியம் உண்டு என்பதை இன்னொருமுறை உணர்த்தும் படம். மொத்தப்படத்தில் 90 சதவிகிதம் புது புது காட்சிகளை இயக்குனர் கையாண்டிருப்பதில் வீட்டு மல்லியை கோர்த்து கூந்தலில் வைத்த சந்தோஷம்.
திரைப்படத்தில் ஹீரோக்களுக்கு டூப் போடும் ஸ்டண்ட்மேன் ஜீவாவும் ஆர்ட் காலேஜ் ஸ்டூடண்ட் சந்தியாவும் திடீர் சந்திப்பில் நண்பர்களாகின்றனர். ஒருநாள் ஓவியம் வரைவதற்கு ஜீவாவை மாடலாக நிற்கவைக்கிறார் சந்தியா.

தயக்கங்களுக்கு பிறகு சட்டையை கழற்றினால், ஜீவாவின் உடம்பில் ஓலைக்குடிசைவாசியின் ஒட்டுத்துணியை போல சல்லடை சல்லடையாய் காயங்களின் அடையாளம். பைட்டர் தொழில் எத்தனை ஆபத்து என்பதை உணரும் சந்தியா, "உனக்கென்று ஒருத்தி இருந்தால் ரணங்களுக்கு மருந்தாக அமையும்" என்கிறார்.

'அப்படீன்னா நீ என்னை கல்யாணம் பண்ணிக்கிறியா?' கொஞ்சம் கூட யோசிக்காமல் குழந்தைத்தனமாக ஜீவா கேட்கும் கேள்வி சுருக்கென்று தைக்கிறது சந்தியாவுக்கு.
உனக்கும் எனக்கும் ஒத்துவராது என்று உதறித்தள்ளும் சந்தியா, ஒருவேளை உன்மேல் எனக்கு காதல் வந்தால் கழுத்தை நீட்ட தயங்கமாட்டேன் என்று நழுவுகிறார்.

காலப்போக்கில் இருவருக்குமிடையே பல விஷயங்களில் முரண்பாடுகள் முளைவிட, அவ்வப்போது மனசுக்குள் எட்டிப்பார்த்த நட்பும் காதலும் என்னவாகிறது என்பதே க்ளைமாக்ஸ்.
டைட்டில்கார்டு முடிந்ததும் போர்கால நடவடிக்கைகள்போல படத்தின் சண்டைக்காட்சிக்காக தயாராகும் வேலைகளை காட்டும் போதே வித்தியாசப்பட்டு நிற்கிறார் இயக்குனர் சசி.
ஜீவா-சந்தியாவின் காதலையும் நட்பையும் புதுப்புது காட்சிகளால் செதுக்கியுள்ள சசி, போகிற போக்கில் சினிமா பைட்டர்களின் எதார்த்தங்களையும் தொட்டிருப்பது அழகு.

ரிஸ்க் பாஸ்கர் கேரக்டரில் ஜீவா மிகச்சரியாக வார்த்தெடுக்கப்பட்டிருக்கிறார். காதலின் சுவடே தெரியாதவரின் மனசுக்குள் சந்தியா காதல் நங்கூரமிட்டதும் தான் பார்க்கும் காட்சிகள் யாவும் சந்தியா மயமாகும் இடங்கள் ரசனை.

ஓவியமாக வரைந்த படகுவீட்டை காட்டி 'இதை பார்க்கும் போது என்ன தோணுது?' என்று சந்தியா கேட்டதும் 'பெட்ரோல் ஊற்றி கொளுத்தி சூப்பரா பைட் சீன் எடுக்கலாம்' என்று தனது தொழிலுக்கேற்ற ரசனையை ஜீவா வெளிப்படுத்துவதும் கலகல.

'காதல்'க்குப் பிறகு சந்தியாவின் நடிப்புக்கு இதில் கொழுத்த வேட்டை. எதையும் ஈஸியாக எடுத்துக்கொள்ளும் மனப்பக்குவம் கொண்டவருக்குள் ஜீவா மேல் மெல்ல மெல்ல பூக்கும் காதலை எப்படி வெளிப்படுத்துவது என்பது புரியாமல் கண்கள் வழியே அவஸ்தைகளை பிரதிபலிக்கும் போது கிரேட்.

திருக்குறள் அடி சைஸில் இருந்துகொண்டு புதுமுகம் பத்ரூ செய்யும் சேட்டைகள் முன்னணி காமெடியன்களுக்கு வயிற்றில் புளியை கலக்கும். தண்ணீர் பிடிக்கும் சின்ன பாத்திரத்தையே நீச்சல் தொட்டியாக மாற்றி தண்ணீர் அடித்துக்கொண்டே குளிக்கும் காட்சியில் தியேட்டர் முழுவதும் ஹா... ஹா....

பயர்சர்வீஸில் இருக்கும் நாசர், கணவரின் ரிஸ்கான தொழிலை நினைத்து அவ்வப்போது நெஞ்சைப் பிடித்துக்கொள்ளும் மாளவிகா இருவரும் சந்தியாவின் பெற்றோராக பளிச்சிடுகின்றனர்.

அறிமுக ஒளிப்பதிவாளர் ஸென்டோனியோ டெர்ஸியோவின் பெயர்தான் வாயில் நுழையாத அளவில் இருக்கிறதே தவிர அவரது ஒளிப்பதிவு கண்களுக்கு நெருடல் இல்லாத விருந்து வைக்கிறது.

விஜய் ஆன்டனியின் இசையில் வைரமுத்து எழுதிய 'நெஞ்சாங்கூட்டில்', 'பூமிக்கு' பாடல்களும், குகை.மா. புகழேந்தி எழுதிய 'பூ மீது..' என்ற பாடலும் மீண்டும் மீண்டும் கேட்க வைக்கிறது.

கனவுப்பாட்டு, ஆக்ஷ்ன் விருந்து படைக்க சண்டை என ஆங்காங்கே இயக்குனர் சசியும் மசாலா அரைத்துள்ளார். எனினும் அதில் அம்மியில் அரைத்த ருசி.

அனுப்பியவர் வெப்தமிழன்

ஆதி

வெட்ட வெட்ட எழுகிறார், ரத்தம் சொட்ட சொட்ட சிரிக்கிறார், சுக்கு நுறாகிப்போகும் காருக்குள்ளிருந்து டிபன் சாப்பிட்டு வருவதுபோல் திரும்புகிறார், சட்டையின் பின்புறம் பற்றி எரிவதைகூட நயகராவில் நனைவது போல அனுபவிக்கிறார் இப்படி விஜய் காதில் சொருகும் பூக்களை வைத்து மலர் கண்காட்சியே நடத்தலாம்.
அப்பா - அப்பம்மா - அப்பத்தா - தாத்தா - பாட்டி - மாமா - அத்தை. இலங்கை வானொலி நேயர் விருப்ப ஒளிபரபபு போல கூட்டுக்குடும்பமாக குதூகலப்பட்டுக்கொண்டிருக்கும் விஜய்யின் குடும்பத்தை வேரோடு அழிக்கிறார் வில்லன் சாய்குமார்.



சாய்குமாரின் கோடரியிலிருந்து தப்பிக்கும் சல்லி வேர்களான விஜய்யும் த்ரிஷாவும் வேறு வேறு இடத்தில் வளர்ந்து ஆளாகி வில்லன்களை பழிவாங்கும் படலத்தை ஆரம்பிக்கிறார்கள். ஒரு கட்டத்தில் தனது முறைப்பெண்தான் த்ரிஷா என்பது விஜய்க்கு தெரியவரும்போது வில்லன்களின் கை ஓங்குகிறது. துப்பாக்கிகளின் டுமீல் டுமீல், கத்திகளின் சதக் சதக்குகளை சந்தித்த நாயகனும் - நாயகியும் எடுத்த காரியத்தை முடிப்பதே க்ளைமாக்ஸ்.

படத்திற்கு படம் மருந்துக்குக்கூட வித்தியாசம் காட்டக்கூடாது என்ற கொள்கையை கையில் எடுத்துக்கொண்டு ஆக்ஷ்ன் வண்டியை ஓட்டிவரும் விஜய்யின் நம்பிக்கை இதில் தலைக்குப்புற கவிழ்ந்துள்ளது.
விஜய் போடும் சண்டை, ஆடும் டான்ஸ் இதெல்லாம் இருக்கட்டும். கதை உ'டான்ஸாக' உள்ளதே! இதை 'அத்தன ஒக்கடே'விலிருந்து வாங்கும் அளவிற்கு என்ன இருக்கிறது என்று தேடிப்பார்த்தால் எதுவும் தென்படவில்லை.



தன் கண்ணில் விரலை விட்டு ஆட்டும் விஜய் கிடைத்தால் பொடிமாஸ் போட்டுவிட சாய்குமார் துடிக்கும் நேரத்தில் நேரிலேயே வருகிறார் விஜய். வில்லனை சுற்றி செண்டிமீட்டருக்கு ஒரு அடியாட்கள் நிற்க நாயகனோ கூலாக மினரல் வாட்டரில் முகம் கழுவுகிறார், கால் மேல் கால்போட்டு வில்லனுக்கு சவால்விடுகிறார், என்னை தொட்டுப்பார் என்று உறுமுகிறார்.

எல்லாவற்றையும் கேட்டுவிட்டு விஜய் மேல் ஒரு கீறல்கூட விழாமல் அனுப்பிவைக்கும்போது திரைக்தையில் பெரிய சைஸ் ஓட்டை விழுந்து பஞ்சராகிவிடுகிறது படம்.

சாய்குமாரை மிரட்டும்போது விஜய்யின் டயலாக் மாடுலேஷன் மட்டும் அவரது ரசிகர்களுக்கு விருந்து.

மேகம் விலகி மிளிரும் நிலவை போல் அழகு அரசாட்சி செய்யும் முகத்துடன் அறிமுகம் ஆகும் த்ரிஷா, திடீரென்று டிஜிபியின் குடலை உருவி கொப்பளிக்கும்போது சபாஷ்போட வைக்கிறார். எங்கே விஜய்யை நடிப்பில் ஓரங்கட்டப்போகிறாரோ என்று எதிர்பார்த்தால் வழக்கம்போலவே டூயட்டில் ஒல்லி இடுப்பை ஆட்டி ஏமாற்றிவிடுகிறார்.

ஹீரோவின் ஒற்றை பார்வைக்கே தொடை நடுங்கிப்போகும் சாய்குமாரின் வில்லன் கேரக்டருக்கு ஆர்டிஎக்ஸ் என்று பெயர். நடிப்பில் என்னவோ புஸ்....

விவேக் செய்யும் காமெடிகளெல்லாம் ஒரு மாமாங்கத்துக்கு முன்பே வந்த படங்களில் பார்த்திருப்பதால் அவர் வரும் காமெடி டைம்கள் ஆடியன்ஸுக்கு பேட் டைம்.

சாய்குமாரால் அமைச்சராக்கப்படும் சந்தானபாரதி சத்தான பாரதியாக இல்லை. வில்லனுடன் ரோட்டோரத்தில் உட்கார்ந்து டீ குடித்து கதைக்கும்போது சோற்றில் மறைக்கும் பூசணிக்காய் போலாகிறது லாஜிக்.

'என்னைக் கொஞ்ச கொஞ்ச...' பாடலில் வித்யாசாகரின் மெட்டு சுவையான லட்டு. பின்னணி பாடியிருக்கும் ஹரிஹரன் - சுஜாதா குரலுக்கு கோடி ரூபாய் கொடுத்து இன்சூரன்ஸ் எடுத்து தரலாம்.

த்ரிஷா அறிமுகமாகும் முதல் காட்சியிலேயே கண்களை கிறங்கடிக்கும் கேமிராமேன் சௌந்தர்ராஜன் க்ளைமாக்ஸ் வரை ஒளிப்பதிவில் கவிதை வடித்திருக்கிறார். பிருந்தா, கல்யாண், ஷோபியின் நடன அமைப்புகளில் அழகின் அரங்கேற்றம்.

40 கி.மீ. வேகத்தில் நேருக்கு நேர் மோதிக்கொள்ளும் வாகனங்களே அப்பளம் போல் நொறுங்கியிடும்போது அதைவிட மூன்றுமடங்கு வேகத்தில் மோதிக்கொள்ளும் கார்களிலிருந்து ஹீரோவும், வில்லனும் உயிர்தப்பி வரவழைக்கும் ஸ்டண்ட் மாஸ்டர் பீட்டர் ஹெயினின் 'புத்திசாலித்தனத்தை' கைதட்டி ரசிக்கமுடியவில்லை. கை கொட்டி சிரிக்கத்தான் வேண்டும்.
'அத்தன ஒக்கடே'வை ஜெராக்ஸ் எடுத்திருக்கும் இயக்குனர் ரமணாவின் திறமையை படத்தின் பதினான்கு ரில்களில் ஒரு அடியில்கூட கண்டுபிடிக்கமுடியாதது அவரது துரதிர்ஷ்டமே.
'ஆதி' பாதி.

அனுப்பியவர் வெப்தமிழன்

சரவணா

நீங்க நல்லாயிருக்கணும் என்று சொன்னால்கூட 'அத நீர் எப்படிலே சொல்லுவே' என்று சங்கை நெரிக்கும் 'புத்திமான்கள்' வசிக்கும் பூமி.
இப்படிப்பட்ட ஊரில் இருந்தால் இளசுகள் சருகாகிவிடுவார்கள் என்று யோசிக்கும் பெரிய மனிதர் (மனதில்) பிரகாஷ்ராஜ் கிராமத்து இளவட்டங்களை வெளியூருக்கு வண்டி ஏற்றி படிக்கவைக்கிறார்.

நல்லது செய்ய ஒருத்தன் இருந்தால் கெட்டது செய்ய ஒன்பதுபேர் புறப்படுவார்களே, அப்படியொரு கோஷ்டியாக இருக்கிறது பிரகாஷ்ராஜின் எதிரிகள்.

இப்படி அரிவாளையும் கத்தியையும் தீட்டிக்கொண்டு இருக்கும் கிராமத்துக்குள் வெளிநாட்டில் படிப்பு முடித்து திரும்புகிறார் பிரகாஷ்ராஜின் தங்கை ஜோதிகா.

அதேபோல் பெங்களூரில் படிக்கும் ஜோதிகாவின் அண்ணன் கிருஷ்ணாவும் உடன்படிக்கும் சிம்புவுடன் ஊருக்கு வருகிறார்.

வந்த இடத்தில் ஜோதிகாவிடம் காதல் அம்பு விடுகிறார் சிம்பு. இது பிரகாஷ்ராஜுக்கும் தெரியவர கல்யாணம் செய்துவைக்க முடிவெடுக்கிறார்.

இந்த நிலையில் பிரகாஷ்ராஜ் குடும்பத்தை கூண்டோடு அழிக்கின்றனர் பகையாளிகள். இதில் ஜோதிகா மட்டும் தப்ப, துரத்துகிறது வில்லன் கோஷ்டி. இறுதியில் வில்லன்களிடமிருந்து ஜோவை காப்பாற்றி கைப்பிடிக்கிறார் சிம்பு.

திருநெல்வேலி பின்னணியில் ஆளாளுக்கு ஆக்ஷ்ன் மசாலா தடவிக்கொண்டிருக்கும் நேரத்தில் தன் பங்குக்கும் அந்த காரியத்தை செய்து பார்த்திருக்கிறார் கே.எஸ். ரவிக்குமார். இவரது மசாலா மட்டும் கொஞ்சம் கலர் மாற்றத்துடன் தெரிகிறது.

விரல்களை கட்டிப்போட்ட சிம்பு குரலை அவிழ்த்துவிட்டிருக்கிறார். படத்தில் மொத்தம் இவர் எத்தனை இடங்களில் எத்தனை நிமிடங்கள் மூச்சுவிடாமல் பேசுகிறார் என்று போட்டி வைக்கும் அளவிற்கு சிம்பு F.M. ஒலித்துக்கொண்டே இருக்கிறது.

சில நேரங்களில் சிம்பு பேசும் வசனம் டி.ஆர்., எஸ்.ஜே. சூர்யாவின் குளோனிங் ஆகிவிடுகிறது. ஆங்காங்கே காமெடி செய்ய முயற்சித்திருப்பதை வரவேற்கலாம்.

சிம்புவே காமெடி களத்தில் குதித்திருப்பதால் காமெடியன் விவேக்கின் நிலை உப்புக்கு ச்ப்பாணிதான்.
காரக்குழம்பு சாப்பிடும்போது ஐஸ்க்ரீமையும் ருசிக்க கொடுத்ததுபோல அனல் பறக்கும் ஆக்ஷ்ன்களுக்கிடையே ஜோதிகாவின் பார்ட் ஜிலீர் பளீர். சிம்புவை விரட்டி விரட்டி காதலிக்கும் மேக்னா நாயுடு பாடல் காட்சியில் தனது திறமையை 'ஏ'ராளமாக காட்டியிருக்கிறார்.

அரிவாள் தூக்கவேண்டிய அவசியமென்ன என்பதை விளக்கும்போது பிரகாஷ்ராஜ் பிரகாச ராஜ். டயலாக் பேப்பரை தொலைத்துவிட்டாரோ என்று சந்தேகிக்கும் அளவிற்கு 'அவன் எவ்வளவு பெரிய கொம்பனா இருந்தாலும் விடமாட்டேன்லே...' என்ற ஒத்தை டயலாக்கை பேசியே படம் முழுவதும் ஒப்பேற்றியிருக்கிறார் புதுமுக வில்லன்.

ஸ்ரீகாந்த் தேவா இசையில் 'காதல் வந்ததும்', 'என்னை மட்டும்', 'காதல் சுத்துதே' பாடல்கள் கேட்'கும்' ரகம்.

ஸ்டண்ட் மாஸ்டர் கனல்கண்ணன், ஒளிப்பதிவாளர் ஆர்தர் வில்சன் இருவருக்கும் தலா ஐம்பது மதிப்பெண்கள் தந்து பாராட்டலாம்.

ஒரு ஊரே ரணகளமாகிய நிலையில் ஜோதிகாவுடன் வீட்டுக்குள் வரும் சிம்பு நடந்ததை சொல்லாமல் மறைப்பது திரைக்கதையில் கே.எஸ். ரவிக்குமார் தெரிந்தே விட்ட ஓட்டை. சாம்பார், ரசம், மோருடன் புல் மீல்ஸை முடித்துவிட்டு ஏப்பம் விடும் நேரத்தில் மறுபடியும் சாதம் போட்டு சாம்பார் ஊற்றினால் எப்படியிருக்கும் அப்படியிருக்கிறது க்ளைமாக்ஸ்.

கதையில் திரைக்கதையில் இயக்குனர் புதிதாக என்ன செய்திருக்கிறார்? ப்ளீஸ் யோசிக்க டைம் கொடுங்க.

சரவணா - டம் டமால் டுமீல்.

அனுப்பியவர் வெப்தமிழன்

பரமசிவன்

"குயில புடிச்சு கூண்டில் அடைச்சு கூவ சொல்லுகிற உலகம். மயில புடிச்சு கால உடைச்சு ஆட சொல்லுகிற உலகம்...." இது வாசுவின் இன்னொரு படத்தில் இடம்பெற்ற பாடல் வரி.

அஜித்திற்கும் இப்படியொரு நிலையை பரமசிவன் மூலம் பி.வாசு ஏற்படுத்திக்கொடுத்ததுதான் அந்த பாடல் வரியை இங்கு சுட்டிக்காட்டவேண்டிய அவசியம் ஏற்படுகிறது.

எவ்வளவு இடைவெளி, எத்தனை ரசிகர்கள், எவ்வளவு எதிர்பார்ப்பு அஜித் சம்பந்தப்பட்ட அத்தனை விஷயங்களையும் மறந்துவிட்டாரே இயக்குனர் என்ற ரசிகர்களின் சபிப்பு வாசுவின் மனசாட்சியை உறுத்தும்.
நாட்டில் தாண்டவமாடும் தீவிரவாத கும்பலை அழிக்க ஒரு சக்தி தேவைப்படுகிறது. அந்த சக்தியாக பயன்படுத்த கொலை குற்றவாளியான அஜித்தை கை காட்டுகிறார் போலீஸ் ஆபிசர் பிரகாஷ்ராஜ்.

பிரகாஷ்ராஜின் யோசனைக்கு உடன்படாத உயர் அதிகாரி அஜித்தின் தேசப்பற்றையும் ப்ளாஷ்பேக்கையும் கூறியதும் ஒரு கண்டிஷனுடன் சம்மதிக்கிறார்.

அந்த கண்டிஷன்... தீவிரவாத கும்பலை அஜித் ஒழித்துக்கட்டியதும் அவரது உயிருக்கும் முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் என்பதுதான்.

இதன்படி சிறையிலிருந்து தப்பவிடப்படும் அஜித், பிரகாஷ்ராஜின் திட்டங்களுக்கு ரிமோட் கன்ட்ரோலாக செயல்படுகிறார். இடையிடையே லைலாவுடனான காதல் சேனலும். முடிவில் அஜித்தின் நிலை என்னவாகிறது என்பதே கதை.

'அந்நியன்' பாணி தலைமுடியுடன் அஜித் அறிமுகமாகும் ஆரம்ப காட்சியே அதிருப்தி அளிக்கிறது.

ஏற்கனவே விக்ரம் போட்ட வேஷத்தை இவருக்கு ஏன் கொடுத்தார் என்ற கேள்வி தியேட்டர் முழுவதும் எதிரொலிக்க தொடங்குகிறது.

சரி அதன்பிறகாவது அஜித்தின் திறமைக்கு தீனி கொடுப்பார் என்று எதிர்பார்த்தால் படம்முழுவதும் அவரை பட்டினி போட்டுவிட்டார் பி.வாசு.

சிறை தண்டனை கைதிகளுக்கு மாதமொரு முறை கிராப் வெட்டிவிடப்படும் சாதாரண யோசனைகூட இயக்குனருக்கு வராதது வேதனை.

சரி போனதெல்லாம் போகட்டும் தீவிரவாதிகளை ஒழிக்க போடும் திட்டங்களாவது உருப்படியாக இருக்கிறதா என்றால் அங்கேயும் கிலோ மீட்டர் நீளத்திற்கு மைனஸ் கோடு.

சிறுவர்களின் திருடன் போலீஸ் விளையாட்டில் இருக்கும் த்ரில்கூட இல்லை.

பசித்திருக்கும் புலிபோல அஜித்தின் முகத்தில் காட்சிக்கு காட்சி அசத்திவிடவேண்டும் என்ற எதிர்பார்ப்பு இருப்பதை பார்க்கமுடிகிறது. ஆனால்.... சரியான விருந்து கிடைக்காமல் ஏமாறுகிறார்.

அஜித் வருவதை காட்டிலும் பிரகாஷ்ராஜ் முகம்தான் படம் முழுவதும். எனினும் பிரகாஷ்ராஜின் நடிப்பிலும் ஆறுதலும் இல்லை மாறுதலும் இல்லை.

ஆறாங்கிளாஸ் படித்துவிட்டு அரைகுறை ஆங்கிலம் பேசும் 'சமர்த்து' பெண்ணாக வரும் லைலாவின் நடிப்பும் கேரக்டர்போலவே அரைகுறைதான்.

சரி சின்னகலைவாணராவது காமெடியில் ரசிகர்களை கலகலப்பூட்டுவார் என்று நினைத்தால் அவரும் கலகலப்பை பூட்டி வைத்திருக்கிறார். சிபிஐ அதிகாரியாக வரும் ஜெயராமின் கதாபாத்திரமும் ப்ரீகேஜ் ரகம்

சென்னை டைட்டில்பார்க்கில் நடக்கும் தகவல் தொழில்நுட்ப நிபுணர்களின் மாநாட்டை சீர்க்குலைக்க நினைக்கும் தீவிரவாதிகளை அழித்துவிட்டு காரில் பறக்கும் அஜித் ஒரு போன்பேசி முடிப்பதற்குள் ஊட்டி வந்து சேர்வது காதில் குறிஞ்சி பூவை வைக்கும் காட்சி.

படத்தில் இரண்டு ஆறுதல்கள். அஜித்தின் பைக் சேஸ் ப்ளஸ் சண்டை காட்சிகள்.
பின்னணி இசையில் பாடல்களில் வித்யா(சம்)சாகர் இல்லை.

'சந்திரமுகி' முந்நூறு நாளை நெருங்கிக்கொண்டிருக்கும் நேரத்தில் பி. வாசுவை 'திரும்பி'பார்க்கவைக்கும் படம் இது.

'பரமசிவன்' எந்த கண்ணையும் திறக்கவில்லை.

அனுப்பியவர் வெப்தமிழன்

வணக்கம் தலைவா

'மப்புல போனா தப்புல முடியும்' இது படத்தின் கான்செப்ட். அது புரிவதற்குள் இரண்டு பெக் அடிக்கத்தோன்றுகிறது.

ரொம்ப நாளைக்கு பிறகு கடவுள் பாதி மிருகம் பாதி கதாபாத்திரத்தில் முகம் காட்டுகிறார் சத்யராஜ்.
அப்பாஸின் காதலியான சூசனை கடத்திச்செல்கிறார் சத்யராஜ். சர்தாஜி, போலீஸ் ஆபிசர், சாம்பிராணி போடும் பாய், மைக்கல் ஜாக்சன் என விதிவிதமான வேடங்களில் அப்பாஸிற்கு ஏகப்பட்ட இம்சைகள் தருகிறார். சூசன் உதட்டிற்கும் அவ்வப்போது ஒத்திடம் கொடுக்கிறார். சூசனை கடத்தியதும் அப்பாஸின் நிம்மதியை குலைப்பதும் ஏன் என்ற கேள்விகளுக்கு இடைவேளைக்கு பிறகு கிடைக்கிறது விடை.

அப்பாஸ் தண்ணியடித்துவிட்டு கார் ஓட்டியதில் அடிபட்டு சாகிறார் சத்யராஜின் மனைவி பிரணதி. அதை பார்க்கும் அவரது மகனும் பைத்தியமாகிறார். இதற்கெல்லாம் காரணமான அப்பாஸை பழிவாங்கவே தனது மைத்துனியான சூசனை காதலி போல் நடிக்கவைத்து நாடகமாடுகிறார் சத்யராஜ். க்ளைமாக்ஸில் அப்பாஸ் திருந்தி சூசனையே கைப்பிடிப்பதுதான் கதை.
பேரம் பேத்தி எடுக்கும் வயசில் விதவிதமான கெட்டப்பில் வலம் வருவது, ஆறடி உயரத்தை வளைத்து நெளித்து ஆடுவது என சத்யராஜின் 'துணிச்சலுக்கு' இன்னும்கூட மார்க்கெட் சூடுபிடிக்கும்.


படத்திற்கு படம் மேடை நடனக்கலைஞர்கள் போல வேறொரு நடிகரை இமிடேட் செய்து ஆடுவதையும் பேசுவதையும்தான் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. இதுபோன்ற காட்சிகளில் பற்களில் பட்டாணி வைத்தால் பவுடராகிவிடும். அவ்வளவு நற நற....


நாயகி சூசனின் தேகம் உஷ்ணம் தாங்காதுபோல. தலைகாட்டும் இடங்களிலெல்லாம் இடைகாட்டி காற்று வாங்குகிறார். நமக்குதான் சூடு ஏறுகிறது. மற்றொரு நாயகி பிரணதி. காரில் அடிபட்டு சாவதுடன் தனது கால்ஷீட்டையும் முடித்துக்கொண்டிருக்கிறார். 'வழக்கம்போலவே அப்பாஸ்....' என்னும் வழக்கமான வார்த்தையை நிரப்புவதை தவிர சிறப்பாக சொல்வதற்கு எதுவுமில்லை.

இன்ஸ்பெக்டர் ஏறுச்சாமியாக வரும் விவேக் கொறிப்பதற்கு தமாஷை அள்ளித்தராவிட்டாலும் கிள்ளித் தருகிறார். ஷகிலா - வெண்ணிற ஆடை மூர்த்தி அன் கோவுடன் கூட்டு சேரும்போது விவேக்கின் காமெடி (வி)ரசம் கூடுதல் போனஸ்.

படத்தில் சஸ்பென்ஸ் வைக்கிறேன் பேர்வழி என்று நினைத்துக்கொண்டு காட்சிக்கு காட்சி காதுகளில் பூ வைத்து எடுக்கிறார் இயக்குனர் ஷக்தி பரமேஷ்வர். சத்யராஜின் நக்கல், விவேக்கின் காமெடி, கவர்ச்சி கன்னிகளின் குத்தாட்டம் என இளசுகளுக்கு தேவையான அத்தனை அயிட்டமும் இருப்பதால் போட்ட முதலுக்கு இரட்டிப்பு லாபம் கிடைக்குமென்பது என்னவோ உண்மை.
'வணக்கம் தலைவா' - குட் நைட்.

அனுப்பியவர் வெப்தமிழன்

சண்டக்கோழி

-Cinesouth-
ஒலிம்பிக் ஓட்டபந்தயத்தோடு ஒப்பிடலாம் படத்தின் வேகத்தை. ராக்கெட் விஞ்ஞானிகளின் கண்களில் அகப்பட்டால் லிங்குசாமியை கொத்திக்கொண்டு போய்விடுவார்கள். அவ்வளவு விறுவிறுப்பையும் - விவேகத்தையும் கையாண்டிருக்கிறார் இயக்குனர்.


கல்லூரி விடுமுறையில் சிதம்பரத்தில் உள்ள நண்பன் வீட்டிற்கு செல்கிறார் விஷால். அங்கு நடக்கும் வெட்டு குத்துகளுக்கு காரணமாக இருக்கும் காசி (லால்) என்ற லோக்கல் தாதாவை கண்டு ஊரே ஊமையாக நிற்கிறது.


ஒரு சந்தர்ப்பத்தில் லால் யாரென்பதை அறியாத விஷால் அவர் மேல் கைவைத்துவிடுகிறார். 'நீ கைவைத்தது யார் தெரியுமா அவன்தான் காசி' என்று ஒருவர் விளக்க, அவ்வளவுதான் விஷால் நடுநடுங்கி காசியின் காலடியில் சரணாகதி அடையப்போகிறார் என மொத்த ஆடியன்சும் எதிர்பார்த்தால் ஏமாற்றம்தான்.


அவன்தான் காசி என்று தெரிந்த பிறகுதான் விஷால் விஸ்வரூபம் எடுத்து தாதாவை நடுரோட்டில் பொளந்துகட்டுகிறார். தாதாவான தன்னை சோதாவாக்கிவிட்டு போறவனை சும்மா விடுவானா காசி, அடிபட்ட பாம்பாய் விஷாலை பழிவாங்க தனது கைகத்தடிகளுடன் விஷாலின் சொந்த ஊருக்கு புறப்படுகிறான். போன இடத்தில் நிகழ்வது என்ன என்பதே க்ளைமாக்ஸ் தீனி.


'செல்லமே'க்கு பிறகு சைலண்டாக இருந்த விஷால் இதில் சண்டை சேவலாக பாய்ந்து பரவசமூட்டுகிறார். பக்கத்து ஊர்க்காரர்களை மிரட்ட செல்லும் இடத்தில் எதிரிகளின் பொறியிலிருந்து சித்தப்பாமார்கள் தப்பித்து ஓட, ஒற்றை ஆளாக சுற்றி அடித்து பந்தாடும் விஷாலுக்கு ஆக்ஷ்னுக்கான அவார்டு இருந்தால் கொடுக்கலாம்.


க்ளைமாக்ஸில் லாலுடன் விஷால் நேருக்கு நேர் மோதும்போது அலங்கா நல்லூர் ஜல்லிக்கட்டை பார்த்த திருப்தி.


படத்துக்கு படம் நடிப்பில் மீரா'ஜாஸ்மின்' வாசம் தூக்கலாகிக்கொண்டே போகிறது. டுட்டோரியல் காலேஜுக்கு கட் அடித்துவிட்டு தியேட்டருக்கு போகும் மீரா, படத்தை போடச்சொல்லி விசிலடித்து கலாட்டா செய்யும்போது வீரா ஜாஸ்மினாக மாறிப்போகிறார்.


அடிக்க வரும் அப்பாவிடம் சாமிவந்ததுபோல் ஆட்டம் ஆடி காலில் விழவைக்கும் காட்சிகளில் கவுண்டமணி- செந்தில் காமெடிகளையெல்லாம் புறமுதுகிட்டு ஓடவைக்கிறார்.


ஊரே கும்பிடும் சாமியாக விஷாலின் தந்தையாக ராஜ்கிரண். தொடை தெரிய வேட்டியை மடித்துக்கட்டி நெஞ்சை நிமிர்த்தி எதிர்த்து பேசுபவர்களை அடித்து நொறுக்கும்போது நடிப்பிலும் மிடுக்கிலும் 18 வயது வாலிபம். வில்லனான மலையாள இயக்குனர் லால் முதல் பாதியில் பயமுறுத்தினாலும் இரண்டாம் பாதியில் மிரண்டுபோகும்போது 'சப்'பென்று ஆகிவிடுகிறது.



பட்டணம், பட்டிக்காடு என மண்ணுக்கேத்த மணம் வீசுகிறது வசனகர்த்தா எஸ். ராமகிருஷ்ணனின் எழுத்தில். இயக்குனரின் வலது கரமாய் நின்று படம் முழுவதும் உழைத்திருப்பவர் ஸ்டண்ட் மாஸ்டர் கனல்கண்ணன். படத்தில் மொத்தமே மூன்று சண்டைதான் என்றாலும், மொத்த படத்தையும் ஆக்ஷ்னில் ஜொலிக்க வைத்த திறமை பாராட்டுக்குரியது.


கதையின் களம் மாறுவதற்கேற்ப ஒளிப்பதிவில் வித்தியாசம் காட்டியிருக்கிறார்கள் ஒளிப்பதிவாளர்கள் ஜீவா - நீரவ்ஷா.


பின்னணி இசையில் மிரட்டியிருக்கும் யுவன்ஷங்கர் ராஜா பாடல்களில் பாஸ்மார்க் வாங்கவில்லை.


கத்தியை தீட்டும்போது கவிதை சொன்னால் ரசிக்கமுடியுமா? முடியும் என்று காட்டியிருக்கிறார் லிங்குசாமி. விஷால் - வில்லன் ஆக்ஷ்ன் ஒரு தடத்தில் வேகமெடுக்க இன்னொரு தடத்தில் மீராவுடன் மெல்ல மெல்ல காதலை பூ பூக்க செய்வது அழகு.


எந்த இடத்திலும் கொட்டாவி விடவைக்காமல் எக்ஸ்பிரஸ் வேகத்தில் படத்தை முடிப்பதும் தமிழ்சினிமாவின் சம்பிரதாயம் உடைக்கும் க்ளைமாக்ஸ் காட்சியும் லிங்குசாமிக்கு பெரிய ஸ்டார்களுடனும் தயாரிப்பாளர்களுடனும் லிங்க்கை உருவாக்கும்.


'சண்டக்கோழி' ஹாட் சூப்.

அனுப்பியவர் வெப்தமிழன்

கமல் படத்துக்கு அபராதம்

உங்களிடம் பணமும் கதையும் மட்டும் இருந்தால் படமெடுத்துவிடமுடியாது. கோடம்பாக்கத்தில் இருக்கும் இரண்டு டஜன் சங்கங்களையும் நீங்கள் அட்ஜெஸ்ட் செய்தாக வேண்டும்.'இந்தியன்' படத்தில் தமிழ்நாடு நடனக் கலைஞர்கள் சங்கத்தில் பதிவு செய்யாத மும்பை டான்ஸர்களை பயன்படுத்தியதற்காக நடனக் கலைஞர்கள் சங்கத்துக்கு கப்பம் கட்டினார் அப்படத்தின் தயாரிப்பாளர். அது போன்றதொரு சிக்கலில் மாட்டியுள்ளது கமலின் 'வேட்டையாடு விளையாடு'.


இந்தப் படத்தின் முக்கால்வாசி கதையுமே அமெரிக்கப் பின்னணியில்தான் சொல்லப்படுகிறது. நாள்கணக்கில் அமெரிக்காவில் தங்குவது டினோசரைக் கட்டி தீனிபோடுவதற்கு சமம். ஆகவே, அத்தியாவசிய நடிகர்கள், டெக்னீஷியன்களுக்கு மட்டும் அமெரிக்காவுக்கு டிக்கெட் போடப்பட்டது. இந்த வடிகட்டலில் தேங்கிப் போனவர்களில் ஸ்டில் போட்டோகிராபரும் ஒருவர்.


அமெரிக்காவில் படப்பிடிப்பு நடந்த நாள்களில் படப்பிடிப்பில் கலந்து கொண்டவர்களே தேவையான போட்டோக்களைஎடுத்துள்ளனர். இந்தவகையில் சில ஆயிரங்கள் லாபம் என்றாலும் ஊர் திரும்பியதும் லட்சரூபாய்க்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.


சங்கத்து ஸ்டில் போட்டோகிராபரை பயன்படுத்தாததற்கு நஷ்டஈடாக ஒருலட்சம் அபராதம் கட்டவேண்டும் என படத்தின் தயாரிப்பாளர் மாணிக்கநாராயணனுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது ஸ்டில் போட்டோகிராபர்ஸ் யூனியன்.


பணத்தைக் கட்டுவதா இல்லை முடியாது என்பதா? முடிவெடுக்க முடியாத குழப்பத்தில் இருக்கிறார் நாராயணன்!

அனுப்பியவர் வெப்தமிழன்

புதுப்பேட்டை- க்ளைமாக்ஸ் குழப்பத்தில் செல்வராகவன்

-Cinesouth-
புதுமையாக என்ன செய்திருக்கிறார் என்ற எதிர்பார்ப்பில் இளம் இயக்குனர்கள். இன்னொரு 'காதல் கொண்டேன்' காத்திருப்பில் ரசிகர்கள். நாளுக்கு நாள் எதிர்பார்ப்பு ஏறிக்கொண்டே செல்கிறது செல்வராகவனின் புதுப்பேட்டைக்கு! "என்னுடைய கேரியரில் மிக முக்கியமான படமாக 'புதுப்பேட்டை' இருக்கும்." உறுதியாக சொல்கிற தனுஷ் இன்னொன்றையும் குறிப்பிடுகிறார். "நான் நடிக்க வேண்டும் என்று விரும்பிய சில கதாபாத்திரங்களில் ஒன்று 'புதுப்பேட்டை'யில் நிறைவேறியுள்ளது."


இதையே வேறு வார்த்தைகளில் சொல்கிறார்கள் சோனியா அகர்வாலும் சினேகாவும். அதுவும் சினேகா, புதுப்பேட்டை தேசிய விருது வாங்கித்தரும் என்று உறுதியாக நம்புகிறார். இத்தனை எதிர்பார்ப்புகளை ஏற்படுத்திய செல்வராகவனோ பெரும் குழப்பத்திலிருக்கிறார். அது, 'தனுஷை சாகடிப்பதா இல்லை சினேகாவை கொலை செய்வதா?'



புதுப்பேட்டையில் போலீஸ் வேடத்தில் முதலில் கஸ்தூரிராஜா நடிப்பதாக இருந்தது. கதைப்படி கடைசி காட்சியில் இவர் தனுஷை என்கெளண்டரில் போட்டுத் தள்ள வேண்டும். நடிப்புத்தான் என்றாலும் இந்த கேரக்டர் வேண்டாம் என்று ஒதுங்கிக் கொண்டார் கஸ்தூரிராஜா.


இப்போது தனுஷை சாகடிப்பது போன்ற க்ளைமாக்ஸை வைப்பதா இல்லை சினேகாவை சாகடிக்கும் க்ளைமாக்ஸை வைப்பதா என்று குழப்பம் செல்வாவுக்கு. எதற்கு வம்பு என்று இரண்டுவித க்ளைமாக்ஸையும் எடுத்திருக்கிறாராம். இதில் எதை பயன்படுத்துவது என்பதில் இன்னும் தெளிவு வரவில்லையாம் இவருக்கு. இந்த இரண்டையுமே தவிர்த்து, இருவரையுமே சாகடிக்கும் மூன்றாவது க்ளைமாக்ஸை எடுக்கும் யோசனையும் இருக்கிறதாம்.


பார்த்து....... க்ளைமாக்ஸ் ஆன்டி க்ளைமாக்ஸ் ஆயிடப்போகுது!

அனுப்பியவர் வெப்தமிழன்

திருநெல்வேலியில் கமல் பிரகாஷ்ராஜ் மோதல்

-Cinesouth-
அநியாயத்துக்கு மாறிவிட்டார் கமல். பேட்டியே கொடுப்பதில்லை என்று சபதம் செய்த அஜித்தே அடிக்கடி வாய் திறக்கிறார். தனது படங்கள் குறித்து அலுக்கும்வரை பேசும் கமலோ, கப்சிப்! 'வேட்டையாடு விளையாடு' குறித்து இதுவரை ஒரு வார்த்தை பெயரவில்லை இவரிடமிருந்து!


அதற்கு மாறாக தயாரிப்பாளர் மாணிக்க நாராயணன், இயக்குனர் கெளதம், ஒளிப்பதிவாளர் ரவிவர்மன் ஆகியோர் கமல் புகழ் பாடுகிறார்கள். இந்த வரிசையின் லேட்டஸ்ட் வரவு கமாலினி முகர்ஜி! கமல், பயப்படவேண்டாம் என்றார். கமல், நன்றாக நடி என்றார் . கமல் ஒரு ஜீனியஸ். கமல் ஒரு ஜென்டில்மேன் என்று கமாலினி வாய்திறந்தால் ஒரே கமல்மயம்தான். (பேசாமல் கமாலினி தனது பெயரை கமல் இனி என்று மாற்றி விடலாம்)


நிற்க. கமல் புராணம் போதும். படத்திற்கு வருவோம். 'வேட்டையாடு விளையாடு' படத்தின் எழுபது சதவிகித ஷூட்டிங்கை முடித்துவிட்டார் கெளதம். முக்கியமான காட்சி ஒன்றை திருநெல்வேலி பஸ் நிலையத்தில் எடுக்க வேண்டியிருந்திருக்கிறது. மதுரை விமான நிலையத்தில் படப்பிடிப்பு நடந்தவேளை, ரசிகர்கள் கூடி தள்ளு முள்ளுவரை சென்றது பிரச்சனை. திருநெல்வேலியில் இதை தவிர்க்க ஒருநாள் முன்பு இரவே இயக்குனர் கெளதமும், ஒளிப்பதிவாளர் ரவிவர்மனும் எந்த இடத்தில் கேமரா வைப்பது, எந்த ஆங்கிளில் படம்பிடிப்பது என அனைத்தையும் முடிவு செய்துள்ளனர். மறுநாள் காலையில் கமலும் பிரகாஷ்ராஜூம் இடம்பெற்ற ஆக்ஷ்ன் காட்சி திட்டமிட்டபடி ஷூட் செய்யப்பட்டது. ஜனங்கள் உஷாராகி கும்பல் சேரும்முன் தனக்கு வேண்டியதை கேமராவில் சுருட்டிவிட்டாராம் கெளதம்.


ஆக, அமெரிக்கா முதல், அல்வாநகர் வரை ஒரிஜினல் இடங்களில் மட்டுமே படப்பிடிப்பை நடத்தியிருக்கிறார்கள். அனேகமாக கமல் மக்கள் அதிகம் புழங்கும் இடத்தில் நடித்தது இந்தப் படமாகவே இருக்கும்!

அனுப்பியவர் வெப்தமிழன்

மணிரத்னம் உருவாக்கத்தில் நேற்று இன்று நாளை

-Cinesouth-
சென்னை நகரவாசிகளுக்கு நல்லதொரு சந்தர்ப்பம். நவீன நட்சத்திர கலைவிழாவினை தன் கைவண்ணத்தில் நடத்துகிறார் மணிரத்னம்.பான்யன் அமைப்புக்காக 'நேற்று இன்று நாளை' என்ற பெயரில் நடத்தப்படும் இவ்விழாவில் மணிரத்னத்துடன் கைகோர்க்கும் மற்ற கலைஞர்கள், இயக்குனர் வசந்த், ஒளிப்பதிவாளர் ராஜீவ் மேனன், கலை இயக்குனர் சாபுசிரில் மற்றும் ஏ.ஆர்.ரஹ்மான்.


சென்றவருடம் நடப்பதாக இருந்த இந்தவிழா கடும்மழை மற்றும் பல்வேறு காரணங்களால் தடைபட்டது. இவ்விழா நடக்கும் மேடையின் ஒளியலங்காரங்களை எப்படி புதுமையாக அமைப்பது என மணிரத்னத்துடன் ஆலோசனை செய்து அனைவரையும் அசத்தும் வகையில் அமைக்க இருக்கிறார் ராஜீவ்மேனன். மேடை அலங்காரத்தை கவனிப்பது சாபுசிரில். நிகழ்ச்சிகள் ஒருங்கிணைப்பு மணிரத்னம் மற்றும் வசந்த்.


சோழிங்கநல்லூரிலுள்ள ஜேப்பியார் என்ஜினியரிங் கல்லூரி மைதானத்தில் பிப்-5ம் தேதி மாலை 6-30 மணிக்கு 'நேற்று இன்று நாளை' விழா துவங்குகிறது. விழாவுக்காக சிறப்பு பேருந்துகள் சென்னை திருவான்மியூரிலிருந்து மாலை 3.30 மணி முதல் இயக்கப்படுகிறது. விழா முடிந்து வீடு திரும்ப வசதியாக தி.நகர், பாரீஸ் உள்பட சென்னையின் முக்கிய இடங்களுக்கு பேருந்துகள் இயக்கப்படும்.

சென்றவருட விழாவுக்காக வாங்கப்பட்ட நுழைவுச்சீட்டுகள் கண்டிப்பாக அனுமதிக்கப்படமாட்டாது என்பது முக்கிய அறிவிப்பு. மேலும், விழாவுக்கு வருகிறவர்கள் ஆறுமணிக்குள் தங்கள் இருக்கைக்கு வந்துவிடும்படி அறிவுறுத்தப்பட்டிருக்கிறார்கள். கமல்,சிம்ரன், மாதவன், சிம்பு, பூஜா என பாதி கோலிவுட் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதால், ஞாயிறு தொலைக்காட்சிக்கு விடுமுறை கொடுத்து சோழிங்கநல்லூருக்கு பஸ்பிடிப்பது எல்லாவகையிலும் பயனுள்ளதாக இருக்கும். முக்கியமாக பான்யனுக்கு

அனுப்பியவர் வெப்தமிழன்

16 மாடி கட்டிடம்- தலைகீழாக தொங்கிய நடிகர்

-Cinesouth -
உயிரை பணயம் வைத்து நடிப்பதை காணும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது 'டான்சேரா' படப்பிடிப்பு குழுவினருக்கு! 'பீஷ்மர்' என்ற போலீஸ் அதிகாரி கதையுடன் திரையுலகை திரும்பிப் பார்க்க வைத்த ரஞ்சித் ரவுடியாக அவதாரம் எடுத்திருக்கும் படம் 'டான்சேரா'. இதன் படப்பிடிப்பு சென்னை அண்ணாசாலையில் நடைபெற்றது. பதினாறு மாடி கட்டிடத்தில் சண்டைக்காட்சியை படமாக்கியபோது கட்டிடத்தின் உச்சியிலிருந்து தனது பிடிப்பை தவறவிட்டார் ரஞ்சித்


பதினாறு அடி உயரத்தில் இருந்து விழுந்தாலே ஆபத்து. இதில் ரஞ்சித் தவறியது பதினாறாவது மாடியில். கிழே விழுந்தால் எடுத்து போகமுடியாது மூட்டையில் அள்ளிதான் போகணும்.

நல்லவேளை அருகில் இருந்த கம்பியை கெட்டியாகப் பிடித்துக் கொண்டார் ரஞ்சித். உடன் படப்பிடிப்புக் குழுவினர் பாய்ந்து சென்று ரஞ்சித்தை காப்பாற்றினார்கள். இந்த திடீர் சம்பவத்தால் மொத்த படப்பிடிப்பும் ஆடிவிட்டது. முதலில் நார்மலுக்கு வந்தவர், ரஞ்சித். தூசியை தட்டிவிட்டு, ஓ.கே டேக்குக்கு போகலாம் என்று சொல்ல, மீண்டும்- கொஞ்சம் ஜாக்கிரதையுடன்- துவங்கியது படப்பிடிப்பு.


'டான்சேரா' தாதாக்களை குறித்த படமென்பதால் படம் நெடுக ஆக்ஷ்ன் காட்சிகளாக சேர்த்திருக்கிறார்கள். அண்ணாசாலை அனுபவத்திற்குப் பிறகு, ஆக்ஷ்னின் அளவை குறைக்கலாமா என்ற யோசனையும் தோன்றியிருக்கிறதாம் 'டான்சேரா' படக்குழுவுக்கு!

அனுப்பியவர் வெப்தமிழன்

இம்சை அரசனின் யானைப்படை

-cinesouth-
சுசிகணேசன்இ சரண்இ 'இம்சை அரசன் 23-ம் புலிகேசி' இயக்குனர் சிம்புதேவன் இவர்களுக்குள் ஒரு ஒற்றுமை உண்டு. மூவருமே பத்திரிகைத்துறையிலிருந்து சினிமாவுக்கு வந்தவர்கள். இதில் சிம்புதேவன் சிறந்த நகைச்சுவை எழுத்தாளர்.

சேரனிடம் உதவி இயக்குனராக இருந்த இவர் ஷங்கரிடம் முதலில் சொன்னது வழக்கமான காதல் கதையாம். கதையை முழுவதும் கேட்டுவி்ட்டு ஷங்கர் சொன்ன பதில்"உங்ககிட்ட நகைச்சுவை கதையை எதிர்பார்த்தேன்."


ஷங்கர் இப்படிச் சொல்ல காரணம் உண்டு. ஆனந்தவிகடனில் சிம்புதேவனின் ஜோக்குகளும் கார்ட்டூன்களும் மிகப்பிரபலம். அதை மனதில் வைத்து ஷங்கர் கேட்கஇ ஆயிரம் வாட்ஸ் எனர்ஜியுடன் சிம்புதேவன் உருவாக்கியதே 'இம்சை அரசன் 23-ம் புலிகேசி.'


சரித்திர பின்னணியில் நடைமுறை பிரச்சனைகளை காமெடியில் தோய்த்து இம்சையை இயக்குகிறார் சிம்பு."வடிவேலுவின் மீசையை பார்த்தாலே சிரிப்பு வருகிறது. படம் முழு என்டர்டெயினராக இருக்கும்." ஷங்கரே படத்துக்கு உத்தரவாதமளிக்கிறார்.


தயாரிப்பாளர் என்பதால் பிரமாண்ட செலவுகள் எதையும் தடைசெய்யவில்லை ஷங்கர். இம்சைக்காக செங்கல்பட்டு அருகில் மிகப்பெரிய கோட்டை போன்ற செட் அமைத்திருக்கிறார்கள். படத்தில் வடிவேலுவின் அரண்மனையாம் இது. அரசன் என்று வந்துவிட்டால் யானைப்படையும் குதிரைப்படையும் முக்கியம் அல்லவா? சுற்றுவட்டாரத்தில் உள்ள அத்தனை யானைஇ குதிரைகளையும் ஓட்டி வந்துவிட்டார்களாம் தயாரிப்பு நிர்வாகிகள். இந்த மிருக எண்ண்கையை மிஞ்சும் அளவுக்கு துணைநடிகர்கள் பட்டாளமும் படத்தில் இடம் பெறுகிறதாம்.


கமர்ஷியல்இ குடும்பம்இ காதல்இ சென்டிமெண்ட் என கடிவாளம் கட்டிய குதிரையாக ஒரே பாதையில் பயணிக்கும் தமிழ் சினிமாவில் இம்சை அரசன் புதியதொரு பரிணாமமாக இருக்கும் என்கிறார் சிம்புதேவன். அப்படியானால் இது இம்சை அரசனல்லஇ இனிமை அரசன்!

அனுப்பியவர் வெப்தமிழன்

அனைத்து உரிமைகளும் வெப்தமிழன்.கொம்© இற்குரியது(2002-2004)
 
[பாவனை செய்யப்பட்ட எழுத்துரு யுனிக்கோட]