www.webtamilan.com
Every thing that you want Information Technology E-Bussiness(Hosting,Domain Name Registration) Tamilealam Neethi Chat

சினிமா செய்திகள்

சுந்தர் சி. கோபிகா இணையும் 'யாழ்ப்பாணம்'

- 26.10.2006: cinesouth
ஆகவே சகலமானவர்களுக்கும் தெரிவிப்பது என்னவென்றால், இயக்குனர் சுந்தர் சி. மீண்டும் மேக்கப் போடுகிறார்!


'ரெண்டு' படத்தில் பிஸியாக இருப்பவர் கிடைக்கிற 'கேப்'பில் இளங்கண்ணனுடன் டிஸ்கஷனில் இறங்கிவிடுகிறார். இளங்கண்ணன்? அர்ஜூன் நடித்த 'ஒற்றன்' படத்தை இயக்கியவர். சுந்தர் சி. நடிக்கும் புதிய படத்தை இயக்கப் போகிறவர்.


'தலைநகரம்' படத்தின் விநியோக உரிமையை வாங்கிய ஆஸ்கார் பிலிம்ஸ் ரவிச்சந்திரன் இந்தப் படத்தை தயாரிக்கிறார். 'தலைநகரம்' படத்திற்கு கதாநாயகியை தேடோ தேடென்று தேடி கடைசியில் குஷ்புவின் ரெகமன்டேஷனில் சுந்தர் சி.க்கு ஜோடியானார் ஜோதிர்மயி. இந்த முறை சுந்தர் சி.யுடன் சேர்ந்து நடிக்கப் போகிறவர் கோபிகா!



புதிய படததில் போலீஸ் அதிகாரியாக வருகிறார். புலனாய்வு செய்யப் போகிறார் என்றெல்லாம் சுந்தர் சி.யின் கேரக்டர் பற்றிஏகப்பட்ட பில்டப்புகள். அதற்கேற்ற மாதிரி படத்துக்கு 'யாழ்ப்பாணம்' என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.


'ரெண்டு' படம் அடுத்த மாதம் இறுதியில் திரைக்கு வருகிறது. அதையடுத்து டிசம்பரில் 'யாழ்ப்பாணம்' படத்தின் ஷூட்டிங். யாழ்ப்பாணத்தில் ஏற்கனவே 'கன்' ஷூட்டிங் நடப்பதால் இந்த 'யாழ்ப்பாணத்தில்' எதை ஷூட் செய்யப் போகிறார்கள் என எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்

அனுப்பியவர் Admin

திரையில் சிவராசன், சுபாவின் இறுதிநாட்கள்

- பிபிசி தமிழ்-
இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலையாளிகளாக கருதப்படுவோரின் இறுதி நாட்கள் குறித்து திரைப்படம்

தமிழகத்தின் திருப்பெரும்புதூருக்கு தேர்தல் பிரச்சாரத்திற்கு வந்த போது ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்டார்

முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலையாளிகளாக கருதப்படும் சிவராசன், சுபா மற்றும் அவர்களது சகாக்களின் இறுதி நாட்களை சித்தரிக்கும் சயனைட் எனும் புதிய தமிழ்த் திரைப்படம் வெளியாக இருக்கிறது.

பாடல்கள், மரத்தைச் சுற்றும் காதலர்கள், ஒரேயடியில் பலரை அடித்து வீழ்த்தும் கதாநாயகன், பாலுணர்வைத் தூண்டும் காட்சிகள் இவையெல்லாம் இல்லாமலேயே ஒரு திரைப்படத்தை துணிச்சலாக தயாரித்து வெளியிடுகிறார் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த இயக்குநர் ரமேஷ். முதலில் கன்னடத்தில் தயாரிக்கப்பட்டது சயனைட்.

திரைப்படத்தில் சிவராசன், சுபா கதாபாத்திரங்கள் சித்தரிக்கப்பட்டுள்ளன

ராஜீவ் கொலை செய்யப்பட்டபோது சென்னை திரைப்படக்கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த ரமேஷ் அப்போது நடந்த பல்வேறு பரபரப்புக் காட்சிகளை நேரில் பார்த்திருககிறார். பெங்களூரில் சிவராசன் குழுவினரின் இறுதி அத்தியாயம் எழுதப்பட்டது அவரது ஆவலை மேலும் தூண்டியிருக்கிறது. அதுமட்டுமல்ல, கொலையாளிகளுககு புகலிடம் கொடுத்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டு பின்னர் விடுதலையான ரங்கநாத் தனக்கு நன்கு அறிமுகமானவர் என்கிறார் ரமேஷ்.

ராஜீவ் கொலையுண்ட சில மாதங்களிலேயே தமிழ்த் திரைப்பட இயக்குநர் செல்வமணி, அக்கொலையினை மையமாக வைத்து தயாரித்த குற்றப்பத்திரிகை என்ற படம் இன்னமும் காங்கிரஸ்காரர்கள், சென்சார், நீதிமன்றங்கள் என்று உதைபந்தாக உருண்டுகொண்டிருக்கிறது, வெளியானபாடில்லை.


இந்நிலையிலேயே கன்னடத்தில் மிக கவனமாக தயாரித்து, அனைவரும் பார்க்க அனுமதிக்கும் யூ சான்றிதழ் பெற்று திரையிட்டு கர்நாடக மாநிலத்தில் பரவலான வரவேற்பை பெற்றிருப்பதன் பின்னணியிலேயே இத்திரைப்படம் மொழி மாற்றம் செய்யப்படுகிறது. முன்னர் மத்திய சிறப்பு புலனாய்வுப் பிரிவின் தலைவராக இருந்த கார்த்திகேயனின் பாத்திரத்தை ஏற்று நடித்திருப்பவர் தமிழின் குறிப்பிடத்தகுந்த நடிகர்களில் ஒருவரான நாசர்.

சயனைட் எவரையும் ஏற்றவோ, தூற்றவோ இல்லை, இது ஒரு ஆவணப்படம் என்கிறார் நாசர்.

மிக சர்ச்சைகுரிய ஒரு விவகாரத்தை மிகக் கவனத்துடன் கையாண்டு கத்திமேல் நடக்கும் சாகசத்தை இயககுநர் ரமேஷ் சரியாகவே செய்திருப்பதாகத்தான் பலரும் கருதுகின்றனர்.

அனுப்பியவர் Admin

யுகா

-cinesouth-
காதல் கதை இல்லை, கட்டிப்புடி கதை இல்லை, கத்தி குத்து கதையும் இல்லை. இப்படி மூன்று இல்லைகள் இல்லாத கதை இது என்ற விளம்பரத்தை நம்பி டிக்கெட் எடுத்து தியேட்டருக்கு போனால் கொஞ்சம் வாவ்.... நிறைய இடங்களில் ஆவ்.... போடவைக்கும் படம் என்று புரிகிறது.


விண்வெளி விஞ்ஞானியான நாசர், வால் நட்சத்திரத்தால் பூமிக்கு ஆபத்து என்பதை கண்டறிகிறார். தனது கண்டுபிடிப்பு மக்களை பயமுறுத்திவிடக்கூடாது என்பதற்காக அதை மறைக்கும் வேளையில் அதைவிட பெரிய ஆபத்து ஒன்று இருப்பதாக ஒரு பெண் ஆராய்ச்சியாளர் சொல்ல அதிர்ந்து போகிறார் நாசர்.


அது அமானுஷ்ய சக்திக்கொண்ட அகோரர்கள் என்பவர்களால் வரும் ஆபத்து. பூமியில் இருக்கும் கெட்ட மனிதர்களை களையெடுப்பதாக கூறிக்கொண்டு மக்கள் கூட்டம் சேரும் இடங்களிலெல்லாம் இந்த அகோரர்கள் விபத்துக்களை ஏற்படுத்தி மக்களை கொத்து கொத்தாக பரலோகம் அனுப்ப திட்டம் போடுகின்றனர்.


நாசரின் உதவியாளராக இருக்கும் சொர்ணமால்யாவின் தந்தை சாருஹாசனும் இந்த கூட்டத்தில் ஒருவர் என்பது தெரியவர அடி மனசுக்குள் சுளீர் என்று பயம் தொற்றிக் கொள்கிறது.


பிள்ளையார் பிடிக்கப்போய் குரங்கான கதையாக வால் நட்சத்திர ஆராய்ச்சியை விட்டுவிட்டு அகோரர்களுக்கு வலைவீசும் வேளையில் இறங்குகின்றனர் நாசர், சொர்ணமால்யா. இவர்களுக்கு உதவியாய் ரிச்சர்ட், மணிகண்டன், சுகுமார், பாரதி, சந்தோஷி என மாணவப் பட்டாளமும் கூட்டு சேருகிறது.


நாசர் அண்ட் கோவின் கூட்டணியில் அகோரர்களின் கதி அதோகதியாகிறதா இல்லையா என்பதே பீதி கதை ஸாரி... மீதி கதை.







வால் நட்சத்திரம், பூமி, ஆபத்து, ஆராய்ச்சி என ஆரம்பிக்கும் படம் ஆஹா விஞ்ஞான உலத்திற்கு கொண்டு போக போகிறார்கள் என்று முதல் இரண்டு ரீல்கள் எதிர்பார்ப்பை கிளப்ப திடீரென அகோரர்கள் மீது கதை திரும்பி அமானுஷ்யம் பெயரில் காதில் பூவை சுற்ற ஆரம்பிக்கிறது.


அடுத்தடுத்து வரும் காட்சிகள் ரீல் சுற்றுவதாக இருந்தாலும் இப்படியெல்லாம் ஒருவேளை நடந்தால் என்னவாகும் என்று பயம் ஏற்படுத்துவதும் ரியல்.


அகோர கூட்டணியில் ஒருவராக வயதான காலத்தில் சாருஹாசனை ஓடவிட்டிருப்பது பரிதாபம். துணை நடிகர்களே போதுமான கதாபாத்திரங்களுக்கு ரிச்சர்ட், மணிகண்டன், சந்தோஷி, பாரதி லிஸ்ட் எதற்கு என்பதை இயக்குனர்தான் விளக்கவேண்டும்


படத்தில் சுகுமாருக்கு உள்ள முக்கியத்துவம் கூட ரிச்சர்ட்டுக்கு இல்லாதது ஏமாற்றமே.


பின்னணி இசையில் 'பேயடி' அடித்து பயமுறுத்துகிறார் தினா. தீண்ட வா தீண்ட வா பாலில் கிளுகிளுப்பு கலந்த கிலி.


சுனாமி, பூகம்பம் என புவியியல் மாற்றங்களின் புரியாத புதிர்களை பார்க்கும்போது இயக்குனர் 'யார் கண்ணன்' யோசித்த கதையை கற்பனை என்று விட்டுவிட முடியவில்லை.


'யுகா' அகோரர் உலகம்.

அனுப்பியவர் Admin

வேட்டையாடு விளையாடு

-cinesouth-
மெகா ஸ்டார், மெகா பட்ஜெட், பெரிய இயக்குனர், பெரிய தொழில்நுட்ப கலைஞர்கள் இப்படி எல்லாம் இருக்கிறது படத்தில். எனினும் விறுவிறுப்பான காட்சி நகர்தல் இல்லாமல் சுவாரஸ்ய பஞ்சம் தலைவிரித்தாடுவாத்ல இந்த 'வேட்டை'யில் அசட்டை மட்டுமே தென்படுகிறது.


நேர்மைக்கும் நெஞ்சுரத்திற்கும் குறையில்லாத டெப்டிகமிஷனர் கமலும் அவரது மேலதிகாரி பிரகாஷ்ராஜும் பதவி வித்தியாசமின்றி பாசத்தை பகிர்ந்துக் கொள்ளும் கடமை தவறாத காவல் அதிகாரிகள்.


ஏதோ ஒரு காரணத்திற்காக பிரகாஷ்ராஜின் மகள் படுகொலை செய்யப்படுகிறார். மகளின் இறந்த துக்கம் கரையாத சில நாட்களிலேயே நியூயார்க் புறப்படும் பிரகாஷ்ராஜும் அவரது மனைவியும் போன இடத்தில் பிணமாகிறார்கள். இதுவும் திட்டமிட்ட கொலைதான்.


தொடர் கொலைகளின் காரணம் புரியாமல் குழம்புகிறது காவல்துறை. இதனை கண்டுபிடிக்க நியூயார்க் செல்கிறார் கமல். நியூயார்க்கில் நடக்கும் சில கொலைகளுக்கும் தமிழ்நாட்டில் நடந்த கொலைக்கும் ஒற்றுமை இருப்பதை கண்டுபிடிக்கும் கமல், தனது தேடுதல் வேட்டையை தீவிரமாக்கும்போது முடிகிறது இடைவேளை.


ஆஹா... இரண்டாம் பாதியில் சூப்பர் கிரைம் காட்சிகள் சுவாரஸ்யங்களை குவிக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பில் கேன்டீன் போய்விட்டு இருக்கையில் அமர்கிறோம். ஆனால், க்ளைமாக்ஸ் வரை படம் பார்ப்பவர்களுக்கு கிடைப்பது என்னவோ 'அல்வாதான்.'


கொலைக்கான காரணம், கொலையாளிகள் பற்றி விபரங்கள் எல்லாமே அடுத்தடுத்த காட்சிகளில் விவரிக்கும்போது சர்க்கஸ் கோமாளிகளை விட அதிகமான கோமாளித்தனம் திரைக்கதையில்.


தமிழ்நாட்டிலிருந்து நியூயார்க் செல்லும் மருத்துவக்கல்லூரி மாணவர்கள் இருவர்தான் கொலையாளிகள் என்று எப்போதோ தெரிய வந்தும் அவர்களை பிடிக்க காவல்துறை திணறுவதெல்லாம் காட்சிகளை இழுத்தடிப்பதற்கான சப்பைக்கட்டுகள்.


சர்வதேச அளவிலான க்ரைம் மேட்டரில் காவல்துறை இவ்வளவு அலட்சியத்தையும் மேம்போக்குதனத்தையுமா காட்டும் என்ற கேள்வி திரைக்கதையில் ஏற்படும் தொய்வில் கிடைக்கிறது.


படத்தில் நிறைய சல்லடைகளும் சலிப்புகளும் இருந்தாலும் நாயகன் கமலின் நடிப்பில் மட்டும் அவ்வப்போது அற்புதங்களை காணமுடிகிறது. காதல் மனைவி கமாலினி முகர்ஜி இறந்ததும் அவரது பிரேதத்துடன் தானும் படுத்து கதறும் இடம் இதுவரை காணாத புதுமை.






போலீஸ் கேரக்டருக்கே உரிய மிடுக்கிலிருந்தும் துடிப்பிலிருந்தும் கொஞ்சமும் பிசகாமல் தன்னை கதாபாத்திரத்தில் கட்சிதமாக பொருந்திக் கொண்டிருக்கும் கமலை தியேட்டரில் இருக்கும் மொத்த கூட்டமும் கைதட்டி பாராட்டுகிறது. காக்கி சட்டை அணியும் நேரம் தவிர காதல் ரசம் சொட்டும் கமலையும் ரசிக்கமுடிகிறது.


நியூயார்க்கில் கமலை சந்திக்கும் சென்னை பெண்ணாக ஜோதிகா. பல இடங்களில் வசனம் பேசும் ஜோதிகாவின் கண்களுக்கு கண்திருஷ்டி படுவது நிச்சயம். கணவனுடன் விவாகரத்து, கையில் கைக்குழந்தை என தனது வாழ்க்கையில் சுனாமி வீசும் நிலையில் தனது குழந்தைக்கு தகப்பனாகவும் தனக்கு கணவனாகவும் ஆக நினைக்கும் கமலின் விருப்பத்திற்கு பதில் சொல்ல தெரியாமல் திணறும் காட்சிகள் பிரமாதம்.


இரண்டு காட்சிகளில் சொற்ப வசனம், ஒரு பாடல் காட்சியில் கமலுடன் ரொமான்ஸ் என அல்பாயுசில் எமலோகம் போய்ச் சேருவதுடன் கமாலினி கேரக்டருக்கு சுபம் போடுவது அவரது தனிப்பட்ட சோகம்.


கொலையாளிகளாக நடித்திருக்கும் இருவரில் கமலுடன் நேருக்கு நேர் மோதுபவர் பிரகாசிக்கிறார். கமலை தாக்கிவிட்டு மணிக்கணக்கில் ப்ளாஷ்பேக் சொல்லும் இடங்கள் ஆவ்....


ஹாரிஸ் ஜெயராஜின் இசையில் 'பார்த்த முதல்....', 'வெண்ணிலவே....' இரண்டு பாடல்களில் செவிகளை தித்திக்க வைக்கும் இனிமை.


வெவ்வேறு சூழலில் விதவிதமான ஒளி கலவையை வெளிப்படும் ரவிவர்மனின் ஒளிப்பதிவும் கட்டமைப்பும் அழகோவியம். அமெரிக்காவை புதுக்கோணத்தில் காட்டுவதாக நினைத்துக்கொண்டு எடுக்கப்பட்டிருக்கும் ஹெலிகாப்டர் ஷாட்கள் தலைசுற்றலைதான் ஏற்படுத்துகிறது.


ஆங்கில பட பாணியில் காட்சியமைப்புகளை படமாக்கும் வித்தையில் மட்டும் கவனம் செலுத்தியிருக்கிறார் இயக்குனர் கௌதம். கொலைக்கான அடிப்படை காரணத்தை வலுவாகவும் கொலையாளிகள் தப்பிக்கும் விதத்தை சுவாரஸ்யமாகவும் தேடுதல் வேட்டையை வேகமாகவும் நகர்த்தியிருந்தால் 'வேட்டையாடு விளையாடு' கௌதமுக்கு 'காக்க காக்க' கௌரவத்தை காப்பாற்றியிருக்கும்.


'வேட்டையாடு விளையாடு' விளையாட்டு.

அனுப்பியவர் Admin

சம்திங் சம்திங்

-cinesouth-
குடும்பத்துடன் பார்க்கக்கூடிய காதல் படம்; காதல் ஜோடியுடன் பார்க்கக்கூடிய குடும்பப் படம் என எல்லா தரப்பினருக்கும் திருப்தி விருந்து படைக்கும் படம் இது.


லண்டனில் கோடீஸ்வரராக இருக்கும் பாக்யராஜின் மகன் ஜெயம் ரவி. தென் தமிழ்நாட்டில் ஒரு கிராமத்தில் விவசாயியாக இருக்கும் பிரபுவின் தங்கை த்ரிஷா. மாமன் மகள் ரிச்சா பலோட்டின் திருமணத்திற்காக தமிழ்நாட்டிற்கு வரும் ரவி, கல்யாண வீட்டில் ரிச்சாவின் தோழி த்ரிஷாவை சந்திக்கிறார்.


சின்ன சின்ன மோதல்கள் முரண்பாட்டுடன் ஆரம்பிக்கும் ரவி - த்ரிஷாவின் அறிமுகம் ஒரு கட்டத்தில் காதலாய் கசிந்துருக ஆரம்பிக்கிறது. இந்நிலையில் ரவி - த்ரிஷா காதலின் குறுக்கே வில்லனாய் வருகிறது அந்தஸ்தும், கௌரவமும். விளைவு த்ரிஷாவை அவமானப்படுத்தி வெளியேற்றும் கீதா (ரவியின் அம்மா) மகனை அழைத்துக்கொண்டு லண்டன் புறப்படுகிறார்.


காற்றையும் காதலையும் கட்டிப்போட முடியுமா!? அப்படித்தான் ரவியும். பாதி வழியிலேயே கீதாவுக்கு பெப்பே காட்டிவிட்டு த்ரிஷா வீட்டுக்கு வருகிறார். வந்த இடத்தில் ரவியை ஏற்க மறுக்கும் பிரபு, 'விவசாய வாழ்க்கை வாழ்ந்து தன்னைவிட ஒரு படி அதிகமாக அறுவடை செய்து காட்டினால் த்ரிஷாவை கட்டிவைப்பதாக சொல்ல, சவாலுக்கு தயாராகும் நாயகன், பிரபு வைக்கும் பரிட்சையில் பாஸாகி காதலியை கைப்பிடிக்கிறாரா இல்லையா என்பதே கதை.


'பாசமலர்' ரேஞ்சுக்கு சென்டிமெண்டை பிழிந்தெடுக்கும் பிரபு - த்ரிஷா சம்பந்தப்பட்ட ஆரம்ப காட்சிகள் கடந்ததும் ஜெயம் ரவி அறிமுகம் காட்சியிலிருந்து 'ஜாலியோ ஜிம்கானா' மேட்டர்கள் தியேட்டரை கலகலக்க வைக்கிறது. கல்யாண வீட்டில் ஜெயம் ரவி - த்ரிஷா அண்ட் கோ அடிக்கும் லூட்டியில் நொடிக்கு நொடி திரைக்கதையில் சிரிப்பு வெடி.


ரிச்சா பலோட்டை மிரட்டும் பழைய காதலனின் வீட்டுக்கு போகும் ரவியும் த்ரிஷாவும் நாயிடம் மாட்டிக்கொண்டு தப்பிக்க பார்க்கும் தருணங்கள் கொடுத்த காசுக்கு அதிகமாக ரிலாக்ஸ் தரும் காட்சிகள்.


முதல்பாதி முழுவதும் துறுதுறுவென்று சேட்டை செய்யும் ரவி பல்வேறு முகபாவணைகளில் காமெடி திருவிழா நடத்தியிருக்கிறார். அதற்கு நேர் மாறாக இரண்டாம் பாதியில் சென்டிமெண்டில் இதயம் பறிக்கிறார்.


ஒரு சொடக்கு போட்டால் அத்தனை வசதிகளையும் அனுபவிக்கக்கூடிய வசதி படைத்தவரான ரவி, எல்லாவற்றையும் மறந்து காதலுக்காக கை பழுக்க ஏர்கலப்பை பிடிப்பதும், மாட்டு தொழுவத்தில் சாணம் அள்ளுவதுமாக விவசாயிகளின் வேதனைகளை சுமந்து பார்க்கும் இடங்களில் ரொம்பவே கஷ்டப்பட்டிருக்கிறார்.




மிளகாய் பொடி கலந்த சாப்பாட்டை திருப்பதி பிரசாதமாய் சாப்பிட்டு த்ரிஷாவின் முத்தத்தை ஆதரவாய் பெறும் காட்சியில் காதலின் உணர்வுகள் கவிதையாய் வடித்தெடுக்கப்பட்டிருக்கிறது.


அண்ணனின் பாசம் - ரவியின் காதல் இரண்டையும் இரு கண்களாய் நினைக்கும் த்ரிஷா இருவித உணர்வுகளை வெளிப்படுத்தும் விதம் ஆஹா....


ரவியின் தந்தையாக வரும் பாக்யராஜ், 'இந்த மண்ணோட வாசனை என் பையனுக்கு கிடைக்காம போயிடுமோன்னு நினைச்சேன். ஆனா அது உன் மூலம் கிடைக்கப்போகுதுன்னு நினைக்கிறப்ப ரொம்ப சந்தோஷமா இருக்குமா' என த்ரிஷாவிடம் கண் கலங்கும்போது கூடவே கலங்குகிறது படம் பார்ப்பவர்களின் விழிகளும்.


பாசமலரில் அப்பா சிவாஜிக்கு கிடைத்த பாத்திரம் இதில் பிரபுவுக்கு. ரொம்ப நாளைக்கு பிறகு பிரபுவின் நடிப்பு திறமைக்கு தீனி போட்டிருக்கும் கேரக்டர். ரவிக்கு பந்தயம் வைக்கும் பிரபு க்ளைமாக்ஸில் ரவி தோற்றுவிடக்கூடாது என்று வேண்டிக்கொள்ளும்போது பிரமாதப்படுத்தியுள்ளார்.


ரவியை வளைத்துப்போடுவதற்காக அல்வா செய்யும் தேஜாஸ்ரீ, ரவி - த்ரிஷா காதலை பிரிக்க ஒவ்வொரு முறையும் திட்டம் போட்டு தோற்கும் மணிவண்ணன் - கலாபவன் மணி, காதில் வைத்த செல்போனை எடுக்காமல் குண்டக்க மண்டக்க பேசி குழப்பத்தை ஏற்படுத்தும் லிவிங்ஸ்டன் ஆகியோர் அவ்வப்போது காமெடி செய்து கலகலப்பூட்டுகின்றனர்.


காமெடியன் கஞ்சா கருப்பு கேரக்டரில் நகைச்சுவையா? வில்லத்தனமா? என்று சந்தேகத்தை கிளப்பும் அளவிற்கு இரண்டும் கெட்டான் தனம்.


எவ்வித உறுத்தலும் இல்லாமல் கண்ணுக்கு விருந்தளிக்கும் A. வெங்கடேஷின் ஒளிப்பதிவிற்கு பாராட்டுக்கள். தேவிஸ்ரீ பிரசாத்தின் இசையில் 'கோழி வெடக்கோழி'பாடல் இவ்வருட ஹிட் லிஸ்டில் இடம்பெறுவது நிச்சயம். க்ளைமாக்ஸ் சண்டை காட்சியில் 'பெப்ஸி' விஜயனின் 'கை' வண்ணம் சபாஷ்போட வைக்கிறது.


ஒரு நட்ச்ததிர பட்டாளங்களையே வைத்துக்கொண்டு சொல்ல வந்த கதையை சுவைபட இயக்கியிருக்கும் ராஜா அடுத்த படத்திலும் 'ராஜா'ங்கம் நடத்துவார் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறார்.


'சம்திங் சம்திங் உனக்கும் எனக்கும்' - அனைவருக்கும்.

அனுப்பியவர் Admin

அனைத்து உரிமைகளும் வெப்தமிழன்.கொம்© இற்குரியது(2002-2004)
 
[பாவனை செய்யப்பட்ட எழுத்துரு யுனிக்கோட]