தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தில்
இருந்து வெளியேற்றப்பட்ட கருணா எனப்படுகின்ற முரளீதரன் விடயம்
தமிழீழ விடுதலைப்புலிகளின் கருணாவை வெளியேற்றும் நடவடிக்கையின்
மூலம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டிருக்கின்றமை யாவரும்
அற்pந்ததே.அவர் இப்போது எங்கு இருக்கின்றார் என்பதிலேயே தற்போது
ஊடகங்கள் தீவிரமாக ஆரூடங்களை தெரிவித்து வருகின்றன.
இதுநிற்க மேற்படி விடயம் சம்பந்தமான செய்திகளை தகவல்களை
உடனுக்குடன் மக்களிடம் எடுத்துச்செல்லும் பணியில் இலங்கையில்
என்ன சர்வதேசத்திலென்ன அனைத்து ஊடகங்களும் முண்டியடித்துக்கொண்டு
செயல்பட்டன என்பதை யாரும் மறுக்கமுடியாது.ஆனால் எத்தனை ஊடகங்கள்
சரியான தகவல்களை வழங்கின? எத்தனை இதனை தமிழ்த்தேசியத்துக்கும்
தமிழீழ விடுதலைப்புலிகளிற்கும் எதிரான
பிரச்சாரமாகப்பயன்படுத்தின? எத்தனை தமிழ்தேசியத்துக்கு ஊறு
விளைவிக்காவண்ணம் மக்களுக்கு ஆறுதல்தரக்கூடிய வகையில்
செயற்பட்டன.? இந்தக்கேள்விகள் நன்றாக அலசி விடைகாணப்படப்பட
வேண்டியவை.
சிங்கள ஊடகங்களும் ஆங்கில ஊடகங்களும் தினமுரசு தினகரன் போன்ற ஒரு
சில தமிழ் ஊடகங்களும் தமிழ்த்தேசியத்துக்கும் தமிழீழ
விடுதலைப்புலிகளிற்கும் எதிரான பிரச்சாரமாகப்பயன்படுத்தின.இலங்கை
ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் ரி.பி.ஸி வானொலியுடன் சேர்ந்து தனது
பிரச்சாரத்தில் பிரதேசவாத்துக்கு ஆதரவாக முனைப்பாக
ஈடுபட்டிருந்தது.சில இணையத்தளங்களும் இவ்வாறான அற்பத்தனமான
பிரச்சாரங்களை முடுக்கிவிட்டிருந்தன.
இவை தவிர அநேக தனியார் வானொலிகளும் தமிழ்ப்பத்திரிகைகளும்
இணையத்தளங்களும் மிகச்சிறப்பான முறையில் தமிழ்த்தேசியத்துக்கு
ஆதரவாகவும் பிரதேசவாதத்துக்கு எதிராகவும் கருணா தொடர்பான
தகவல்களை துணிந்து வெளிப்படுத்தியிருந்தன.எது
எப்படியிருந்தபோதிலும் பெரும்பாலான செய்திகள் இணையத்தளங்கள்
முலமே வெளிவந்தன.பத்திரிகைகள் வானொலிகள் யாவும் செய்திகளை
இணையத்தளங்கள் மூலமே பெற்றுக்கொண்டன என்பதையும்
ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும்
இந்தக்காலப்பகுதியில் கருணாதொடர்பான செய்திகள் கட்டுரைகள் தாங்கி
வெளிவந்த காரணங்களுக்காகவும் பிரதேசவாதங்களுக்கு எதிரான
கருத்துக்களை வெளிப்படுத்தியகாரணத்தினால் வீரகேசரி,தினக்குரல்
பத்திரிகைகள் கருணா குழுவினரால் பறித்து எரிக்கப்பட்ட அதேவேளை
மட்டக்களப்பில் அவர்களால் தடையும் செய்யப்பட்டிருந்தன.இதேவேளை
மட்டக்களப்பில் மாத்திரம் வெளியாகும் தமிழ் அலை பத்திரிகை
கருணாவின் பிடியில் இருந்தமை குறிப்பித்தக்கது. இதன்காரணமாய்
அப்பத்திரிகையின் இணையத்தளமான தமிழ்அலை.நெட் தவறான
பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தது.அவ்வேளை அதில் இருந்து
பிரிந்தவர்கள் தமிழ் அலை நிழல்பதிப்பை தமிழ்அலை.கொம் என்ற
பெயரில் ஆரம்பித்து துணிகரமாக தகவல்களை மட்டக்களப்பில்
இருந்தவாறே வெளியிட்டனர்.
இதைவிட குறிப்பிட்டுச்சொல்லக்கூடிய வகையில் பல இணையத்தளங்கள்
பிரதேசவாதத்துக்கு எதிராக குரல் கொடுத்திருந்தன.இந்த நிலையில்
நேற்று(15-052003) இலங்கை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் பாராட்டு
அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கின்றது. இது தொடர்பாக
சுடர்ஒளிபத்திரிகையில் வெளியான செய்தியினை இங்கு
தருகின்றோம்.இவ்வறிக்கையில் குறித்த மூன்று ஊடகங்களை மாத்திரம்
குறிப்பிட்டிருப்பதானது சந்தேகத்தைத்தருகின்றது.
இச்செய்தியின்படி ஏதோ இந்த மூன்றும் தான் பொறுப்புணர்வுடன்
செயற்பட்டு இருப்பதுபோலவும் மற்றயவைகள்(தடை செய்யப்பட்ட வீரகேசரி
உட்பட)சந்தர்ப்பவாத ஊடகங்கள் போன்று சித்தரிக்க முனைந்திருப்பது
புலனாகின்றது.இந்நடவடிக்கையானது மேற்படி ஒன்றியத்தில்
மேற்குறித்த மூன்று ஊடகங்களில் ஒன்றோ பலவோ
செல்வாக்குச்செலுத்துகின்றனவோ என்ற ஜயத்தினை ஏற்படுத்துகின்றது.
இவ்வாறான அறிக்கைகள் மூலம் ஒருசில ஊடகங்களை மக்கள் மத்தியில்
பிரபல்யப்படுத்தவும் மற்றைய ஊடகங்களை மட்டம் தட்டவும்
மக்கள்மத்தியில் இவை பற்றி தவறான அபிப்பிராயங்களை ஏற்படுத்தவும்
வழிவகுக்கும் என்பதே எமது
நிலைப்பாடு.எம்மைப்பிரபல்யப்படுத்துவதற்கோ அல்லது நாமும்
பிரதேசவாதத்துக்கு எதிராக குரல் கொடுத்தோம் என்று கூறுவதற்காகவோ
இந்தககருத்தை முன்வைக்கவில்லை.இந்த அறிக்கைகள்
பாராட்டுதல்களுக்காக மற்றய ஊடகங்கள் மனம் தளரமாட்டார்கள் என்பதே
எமது நம்பிக்கை.
நாட்டு நிலைமைகளை தமக்கு சாதகமாகப்பயன்படுத்தி மக்களின்
ஏகோபித்த விருப்பை பிரதிநிதிப்படுத்துபவர்கள்போல் நடித்து இளைய
சமுதாயம் மத்தியில் கலாச்சார சீர்கேடுகளை ஊக்குவிக்கும் பணியில்
ஊடகங்கள் சில ஈடுபடுவது யாவரும் அறிந்ததே.இவர்கள் யாவரும்
மிகவும் அவதானமாக கண்காணிப்புக்கு உள்ளாகியிருக்கின்;றார்கள்
என்பது இவர்கள் அறிந்திராத உண்மையாகும்.இந்த ஊடகங்கள் தேவைகருதி,
தற்போதைக்கு தங்கள் பணி தொடர மறைமுக
அனுமதியளிக்கப்பட்டிருக்கின்றபோதிலும் நிச்சயம் ஓரு பொழுது
மக்களினால் தூக்கியெறியப்படும் என்பது வெளிப்படை.
வெறுமனே இவ்வாறான அறிக்கைகள் பாராட்டுதல்கள் மூலம் ஊடகங்களால்
ஆற்றப்பட்ட சேவைகள் ஒருபொழுதும் மக்களிடையே மழுங்கடிக்கமுடியாது.
-வெப்தமிழன்.கொம்-
-----------------------------------------------------------------------------------------------
கருணா விடயத்தில் துணிச்சலுடன் உண்மைகளை வெளியிட்ட மூன்று
ஊடகங்களுக்குப் பாராட்டு
-சுடர்ஒளி: 15-04-2004
பல நெருக்கடிகள் அச்சுறுத்தல்கள் மத்தியிலும் கடந்த ஒன்றரை
மாதமாக தமிழ் மக்களின் தேசிய நலன்கருதி துணிச்சலோடு உண்மைத்
தகவல்களை வெளியிட்டுவந்த சூரியன் எப்.எம்., தினக்குரல், சுடர்ஒளி
ஆகிய ஊடகங்களுக்கும், துணிச்சலோடு செயற்பட்ட
ஊடகவியலாளர்களுக்கும் இலங்கைத் தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம்
பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளது.
கருணா குழுவின் அடாவடித்தனங்களுக்குத்
துணைபோகும் வகையில் சில ஊடகங்களும், ஊடகவியலாளர்களும்
செயற்பட்டபோது அச்சுறுத்தல்கள் நெருக்கடிகளுக்கு அஞ்சாது "சூரியன்',
"தினக்குரல்',"சுடர்ஒளி' போன்ற ஊடகங்கள் துணிச்சலோடு
செயற்பட்டன.தமிழ்த் தேசிய நலனில் உறுதியாகச் செயற்பட்ட இந்த
ஊடகங்கள் வரலாற்றுத்தடங்களை பதித்திருக்கின்றன.
இவ்வேளையில், சந்தர்ப்பவாத போக்கைக்
கடைப்பிடித்த ஊடகங்களை தமிழ் மக்கள் இனங்காண வேண்டும்.
அவர்களுக்குத் தமிழ் மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்டுவார்கள் என
இலங்கை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் வெளியிட்டஅறிக்கையில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக தினக்குரல்,
சுடர்ஒளி பத்திரிகைகள் மட்டக்களப்பில் விற்பனை செய்வதற்குக்
கருணா குழுவினர் தடைசெய்திருந்தனர். இத்தடையை சில சந்தர்ப்பவாத
ஊடகங்கள் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டன. ஊடகங்கள் மீதான தடைகள்
தற்போது நீங்கியுள்ளன. எந்தத் தடை வந்தபோதிலும் துணிச்சலோடு
செயற்பட்ட இந்த ஊடகங்களுக்கு மட்டக்களப்பு மக்கள் உரிய இடத்தை
வழங்குவார்கள் என இலங்கைத் தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் தனது
அறிக்கையில் தெரிவித்துள்ளது. |